மதன மோக ரூப சுந்தரி – 2 23

ஆதிராவுக்கு தங்கையின் மீதான அன்பு இப்போது உள்ளத்துக்குள் குபுகுபுவென ஊற்றெடுத்து ஓடியது..!! ‘எத்தனை அன்பிருக்க வேண்டும் அவளுக்கு என் மேல்..?? இந்த மாதிரி ஒரு தங்கை கிடைக்க நான் என்ன புண்ணியம் செய்திருக்க வேண்டும்..?? இப்படி என்னவானாள் என்று புரியாமல் தொலைந்து போனாளே..??’

ஆதிராவுக்கு இப்போது திடீரென இன்னொரு நினைவு..!! ‘என்னிடம் எத்தனை விளையாட்டு வைத்திருக்கிறாள்.. ஆனால்.. அவளுக்கு முதன்முறையாக விளையாட்டு என்று ஒன்றை சொல்லி தந்ததே நான்தானே..??’ என்பது மாதிரியான நினைவு..!! அந்த நினைவு இப்போது அவளுடைய மனதில் படமாய் விரிந்தது..!!

“கண்ணாமூச்சி ரே ரே..
கண்டுபுடி ரே ரே..
ஊளமுட்டையெல்லாம் நீ தின்னுட்டு..
நல்ல முட்டையெல்லாம் கொண்டு வா..!!”

பாடி முடித்த ஆதிரா, முகத்தை மூடியிருந்த கைகளை விலக்கி, கண்கள் திறந்து பார்த்தாள்.. உடனே அவளிடம் ஒரு மெலிதான அதிர்ச்சி..!! ஓடி ஒளியாமல், இன்னும் தன் எதிரே நின்று கொண்டிருந்த குட்டித் தங்கையை குழப்பமாக பார்த்தாள்..!!

“என்னாச்சு தாமிரா.. போய் ஒளிஞ்சுக்கோ.. போ..!!”

“எனக்கு கண்ணாமூச்சி பிடிக்கலக்கா..!!” தாமிரா பரிதாபமாக சொன்னாள்.

“பிடிக்கலையா.. ஏன்..??”

“பயமா இருக்கு..!!”

“என்ன பயம்..??”

“நீ என்னை கண்டுபிடிக்கலைன்னா.. அப்புறம் நான் தொலைஞ்சு போயிடுவேனே..??”

மழலைக்குரலில் தாமிரா அவ்வாறு சொன்னபோது.. ஆதிரா படக்கென சிரித்துவிட்டாள்..!!

“ஹாஹாஹாஹா..!!”

தாமிரா அவ்வாறு சொன்ன தோரணையை நினைத்துப் பார்க்கையில் இப்போதும் கூட ஆதிராவுக்கு சிரிப்பாக வந்தது..!! ஆனால்.. அந்த சிரிப்பு முடிவதற்கு முன்பே.. அன்று அவள் தங்கைக்கு சொன்ன பதில், கூடவே ஞாபகத்துக்கு வரவும்.. அவளுடைய முகத்தில் பட்டென ஒருவித இறுக்கம்..!! தங்கையை சமாதானப்படுத்தி விளையாட வைக்க.. அன்று ஆதிரா சொன்ன வார்த்தைகள்.. இப்போது அவளது காதுக்குள் மீண்டும் மீண்டும் ரீங்காரமிட்டன..!!

“பயப்படாத தாமிரா.. அக்கா இருக்கேன்ல..?? உன்னை கண்டு பிடிக்கிற வரை அக்கா தேடிக்கிட்டே இருப்பேன்..!!”

“உன்னை கண்டு பிடிக்கிற வரை அக்கா தேடிக்கிட்டே இருப்பேன்..!!”

“தேடிக்கிட்டே இருப்பேன்..!!”

“தேடிக்கிட்டே இருப்பேன்..!!”