மதன மோக ரூப சுந்தரி – 2 23

“ஆதிராஆஆ.. வா வா..!! எத்தனை நாளாச்சு பாத்து..?? எப்படிமா இருக்குற..?? எப்போ வந்த..?? அப்பா, அம்மாலாம் நல்லா இருக்காங்களா..?? எப்படி சொல்லாமக் கொள்ளாம வந்து நிக்கிறா பாரேன்..??” என்று அன்பொழுக வரவேற்றனர்.

அவர்களுடைய கேள்விகளுக்கெல்லாம் சிரித்த முகத்துடன் பதில் சொன்னாள் ஆதிரா..!! பிறகு.. பூஜை பற்றி ஆதிரா கேட்க, அங்கையற்கண்ணி பதில் சொன்னாள்..!!

“மாசமாசம் நடக்குற பூஜைதான்மா.. குடும்பத்துக்கு எதும் கெடுதல் வந்துடக்கூடாதுன்னுதான்.. குறிஞ்சி வேற இப்போ உச்சத்துல ஆடுறா..!! அவனுகளை பத்தித்தான் தெரியும்ல.. பூஜைன்னா யார்ட்டயும் பேசக்கூட மாட்டானுக.. நீ தப்பா எடுத்துக்காத..!!”

“இ..இல்ல அத்தை.. தப்பா எடுத்துக்கல..!!”

இதமான குரலில் சொன்ன ஆதிரா, அப்புறம் மாமாவை பற்றி விசாரித்தாள்.. அவரை பார்க்கவேண்டும் என்றாள்..!!

“ஆதிராவை நான் மேல கூட்டிட்டு போறேன் யாழினி.. நீ இங்க இருந்து பூஜைக்கு தேவையானதுலாம் கவனிச்சுக்க..!!”

மருமகளை பணித்துவிட்டு அங்கிருந்து முன்நடந்தாள் அங்கையற்கண்ணி.. அவளை பின்தொடர்ந்தனர் ஆதிராவும், சிபியும்..!!

மாடிப்படியேறி மருதகிரியின் அறையை அடைந்தனர்..!! கோணிக்கொண்ட வாயுடனும், கொக்கிபோல் வளைந்த கையுடனும் படுக்கையில் கிடந்தார் மருதகிரி.. அவரைக்காண ஆதிரா வந்திருப்பதை அறிந்து அகமகிழ்ந்து போனார்..!! வாயிலிருந்து எச்சில் வந்த அளவிற்கு வார்த்தை வரவில்லை அவருக்கு.. சைகையாலேயே ஆதிராவை பற்றியும் அவளுடைய குடும்பத்தை பற்றியும் விசாரித்தார்..!! ஆதிராவும் மிகப் பொறுமையாக அவருக்கு பதில் சொல்லிக் கொண்டிருந்தாள்.. சிபிதான் அந்த சூழ்நிலைக்கு சற்றும் சம்பந்தமில்லாதவனாய் எங்கேயோ வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான்..!!

பிறகு அங்கையற்கண்ணி சிறிதுநேரம் ஆதிராவுடன் தனியே பேசிக்கொண்டிருந்தாள்.. ஆதிராவுக்கு நேர்ந்த விபத்தைப் பற்றி கேட்டறிந்து கொண்டாள்.. தற்போதைய உடல்நல தேற்றத்தை பற்றியும் விசாரித்து தெரிந்து கொண்டாள்..!!

“மைசூர் வந்து உன்னை பாக்கனும்னு போல இருந்துச்சு ஆதிரா..!! வந்தவளை உங்கப்பா எதும் சொல்லிருவாரோன்னு ஒரு பயம்.. இவனுகளும் அதெல்லாம் ஒன்னும் வேணாம்னு சொல்லிட்டானுக..!!”

“ஹ்ம்ம்.. புரியுது அத்தை.. பரவால.. அதனால என்ன..??”

பேச்சு பிறகு பின்னோக்கி சென்றது.. தாமிராவை இழந்துவிட்டதற்காக கண்ணீர் சிந்தினாள் அங்கையற்கண்ணி.. குடும்பப்பகையை நினைத்து கவலை தொனிக்க பேசினாள்..!!

13

“எப்போவோ நடந்ததை நெனச்சுக்கிட்டு இப்போவும் முறுக்கிக்கிட்டு இருக்காரே உன் அப்பா..!! முகிலனுக்கு உன்னை கட்டிவச்சாவாவது பகையெல்லாம் தீரும்னு நெனச்சோம்.. அதான் பொண்ணு கேட்டும் வந்தோம்.. முடியவே முடியாதுன்னு ஒத்தைக்கால்ல நின்னுட்டாரு..!! வள்ளியவும் ஒன்னும் குத்தம் சொல்ல முடியாது.. அவளுக்கு ஆசை இருந்தாலும் புருஷனை மீறி என்ன பண்ணிட முடியும்..?? ஹ்ம்ம்.. எப்போத்தான் எல்லா பிரச்சினையும் தீந்து, ஒத்துமையா நிம்மதியா இருப்போம்னு தெரியல..!!!”

அங்கையற்கண்ணியின் புலம்பலை கேட்டுமுடித்து.. அவளுக்கு ஆறுதல் எல்லாம் சொல்லிமுடித்து.. அங்கிருந்து சிபியை கூட்டிக்கொண்டு கிளம்பினாள் ஆதிரா..!! கீழிறங்கி வந்தபோது பூஜையும் முடிந்திருந்தது..!! சட்டை பட்டனை மாட்டிக்கொண்டே எதிர்ப்பட்ட முகிலன்..

“என்னடா.. நல்லாருக்கியா..??” என்று முறைப்பாக கேட்டான் சிபியை பார்த்து.

“சாப்ட்டு கெளம்பலாம்ல..??” என்று சம்பிரதாயமாக கேட்டான் ஆதிராவிடம்.

“இல்ல.. இன்னொரு நாள் சாப்பிடுறோம்.. வனக்கொடி சாப்பாடு ரெடி பண்ணிருப்பாங்க..!!”

என்று நாகரிகமாக மறுத்துவிட்டு அங்கிருந்து கிளம்பினார்கள் சிபியும் ஆதிராவும்.. காரை கிளப்பி தங்கள் வீட்டுக்கு வந்து சேர்ந்தார்கள்..!!

அன்றிரவு உணவருந்தி முடித்த சிறிதுநேரத்திலேயே.. சிபி பிஸியாகிப் போனான்..!! அவனுடைய மைசூர் அலுவலகத்தில் இருந்து அழைப்பு வந்திருக்க.. செல்ஃபோனை எடுத்துக்கொண்டு வராண்டாவிற்கு சென்றிருந்தான்..!! கையை இப்படியும் அப்படியுமாய் அசைத்து.. கன்னடமும், ஆங்கிலமும் கலந்து பேசிக்கொண்டிருந்தான்..!!