மதன மோக ரூப சுந்தரி – 2 23

“அ..அம்மா.. இது.. இ..இந்த வாசனை.. என்ன வாசனை இது.. எ..எங்க இருந்து வருது..??” என்று திணறலாக கேட்டாள். உடனே நாசியை சற்று கூர்மையாக்கிய வனக்கொடி,

“இதுவா..?? இது மகிழம்பூ வாசனைம்மா.. மகிழமரம் அந்தா வளர்ந்திருக்கு பாரு.. அதுல இருந்துதான் இவ்வளவு வாசனை வருது..!! வாடிப்போனாலும் வாசம்போகாத ஒரே பூ.. மகிழம்பூதான் ஆதிராம்மா.. வாசத்துக்கு பேர்போனது..!!” என்று இயல்பாக சொன்னாள்.

வனக்கொடி கைகாட்டிய திசையில் பார்வையை வீசினாள் ஆதிரா.. மகிழம்பூ மரத்தின் மேற்புறம் அங்கே காட்சியளித்தது..!! மலைச்சரிவில் வேரூன்றி.. மேல்நோக்கி உயரமாக வளர்ந்து.. மலைவிளிம்பில் தனது கிளைக்கைகளை படரவிட்டிருந்தது அந்த மகிழமரம்..!! மரத்தின் மேற்புறத்தில் பச்சைபச்சையாய் இலைகள்.. கொத்துக்கொத்தாய் வெள்ளைப்பூக்கள்.. மஞ்சள் மஞ்சளாய் மகிழம்பழங்கள்..!!

“இ..இது.. இந்த மகிழமரம்.. நம்ம வீட்டுக்கு பக்கத்துல இந்த மரம் இருக்குதா..??” ஆதிராவிடம் இன்னுமே ஒரு தடுமாற்றம்.

“இல்லையே.. நம்ம வீட்டுப் பக்கத்துல மகிழமரம் எதுவும் இல்லையே..!! ஏன்மா கேக்குற..??”

வனக்கொடி குழப்பமாக ஆதிராவிடம் திரும்ப கேட்டாள்.. அதை கேட்கும்போதே ஆதிராவின் இதயத்தில் குபுகுபுவென ஒரு கொந்தளிப்பு..!! பதில் எதுவும் சொல்லத் தோன்றாதவளாய்.. அந்த மகிழமரத்தையே மிரட்சியாகப் பார்த்தாள்..!!

அகழி வந்து ஒருநாள் கூட ஆகவில்லை.. அதற்குள்ளாகவே ஆதிராவின் மனதில் ஒரு கலக்கம் உருவாகி இருந்தது.. அவளுடைய மனம் ஒருவித குழப்பத்தில் உழல ஆரம்பித்திருந்தது..!! அகழி வருவதற்கு முன்பாக.. குறிஞ்சிதான் தாமிராவை கொண்டுபோய் விட்டாள் என்று கூறப்பட்டதை.. அவளால் அவ்வளவு எளிதாக ஏற்றுக்கொள்ள முடியாமலிருந்தது..!!

10

ஆனால் இப்போது.. வனக்கொடி தான்கண்ட காட்சியினை மலையுச்சியில் வைத்து அவளுக்கு விவரித்தபிறகு.. வீட்டுக்குள் வீசிய அதே வாசனையை இந்த சிங்கமலையிலும் நுகரநேர்ந்தபிறகு.. ஆதிராவின் மனதில் சற்று ஆழமாகவே குறிஞ்சி இறங்கியிருந்தாள்.. குழப்பத்தை ஏற்படுத்தியிருந்தாள்..!! மனதில் இருந்த குழப்பத்தை வெளியில் சொல்ல ஆதிரா விரும்பவில்லை.. அதேநேரம், அந்த குழப்பத்திற்கான விடையை தெரிந்துகொள்கிற ஆர்வமும், அவளுக்குள் இப்போது மூண்டிருந்தது..!! குழப்பத்தையும் ஆர்வத்தையும் மனதுக்குள் போட்டு மூடியவள்.. வனக்கொடியிடம் திரும்பி வறண்ட குரலில் சொன்னாள்..!!

“நேரமாச்சும்மா.. கெளம்பலாம்..!!”

“ம்ம்.. சரி ஆதிராம்மா.. கெளம்பலாம்..!! சிபித்தம்பி வேற எந்திரிச்சிருக்கும்னு நெனைக்கிறேன்..!!”

ஆதிராவும் வனக்கொடியும் சிங்கமலையில் இருந்து வீட்டுக்கு புறப்பட்டார்கள்.. சரிவாகவும் சறுக்கலாகவும் இருந்த அந்த குறுகியபாதையில் மிகப்பொறுமையாக இறங்கினார்கள்.. ஆதிரா முன்னால் நடக்க, அவள் பின்னே வனக்கொடி..!!

ஆதிராவின் கால்கள் நடைபோட்டுக் கொண்டிருந்தாலும்.. அவளுடைய மனம் வேறெதையோ அசைபோட்டுக் கொண்டிருந்தது.. அந்த மனம் முழுதையும் அவளுடைய தங்கையே இப்போது ஆக்கிரமித்திருந்தாள்..!! ஆதிராவும் தாமிராவும் சிறுமிகளாக இருந்தபோது.. இந்த மலைப்பாதையிலும், அந்த காட்டுமரங்களுக்கு இடையிலும்.. இருவரும் ஓடித்திரிந்து விளையாடியதெல்லாம் இப்போது ஆதிராவின் ஞாபகத்திற்கு வந்தன..!!

அடர்ந்த மரங்களும் அதிகாலைப் பனியும் செறிந்திட்ட அந்த மலைப்பாதையில்.. ஆதிரா இப்போது நடந்துசெல்ல.. அவளுக்கு எதிரே உதயமானாள் சிறுமி தாமிரா..!! எட்டுவயது குட்டிப்பெண்ணாய்.. பட்டுப்பாவாடை கட்டிக்கொண்டு.. ரெட்டைஜடை போட்டுக்கொண்டு.. கைவிரல்களை விரித்து ஆட்டிக்கொண்டு.. கண்ணிமைகளை வெடுக்கென வெட்டிக்கொண்டு.. மழலைக்குரலில் பாட்டொன்றை பாடிக்கொண்டு..!!

“ஆக்குபாக்கு வெத்தலபாக்கு தாம்தூம் தஸம்..!!”

தங்கை பற்றிய நினைவுடனே நடந்து சென்ற ஆதிராவுக்கு.. எட்டுவயது தாமிரா நிஜமாகவே எதிரேதோன்றி பாடுவது போல ஒரு மாயத்தோற்றம்..!!

“தஸ்ஸைதூக்கி மேலபோட்டா செட்டியார்வீட்டு நண்டு..!!”

பாடலுடன் சேர்த்து நளினமாக ஆடிக்கொண்டே.. அந்த மலைப்பாதையில் ஆதிராவை வழிநடத்தி கூட்டிச்செல்வது போல ஒரு மருட்சி..!!

“நண்டைதூக்கி மேலபோட்டா நாகரத்ன பாம்பு..!!”

அழகாக கைவிரல்களை ஆட்டிஆட்டி குட்டித்தாமிரா பின்னோக்கி நடந்து செல்ல.. ஆதிரா அவளுடைய முகத்தை ஏக்கமாக பார்த்துக்கொண்டே முன்னோக்கி நடந்தாள்..!!

“பாம்பைதூக்கி மேலபோட்டா பஞ்சவர்ணக் கிளி..!!”

பச்சரிசி பல்வரிசை மின்ன காந்தச்சிரிப்பு சிரித்தாள் தாமிரா..!! தளர்வாக நடைபோட்ட ஆதிராவின் உதடுகள் இப்போது தடதடத்தன.. ‘தாமிராஆஆ’ என்று ஒருவித ஆதங்கத்துடன் முணுமுணுத்தன..!! நெஞ்சைப் பிசைவது மாதிரியாய் அவளுக்குள் ஒரு உணர்வு..!!

“கிளியைதூக்கி மேலபோட்டா கிருஷ்ணனோட கொண்டை..!! ஹாஹாஹாஹா.. ஹாஹாஹாஹா..!!” பாடிமுடித்த தாமிரா கலகலவென கைகொட்டி சிரித்தாள்.

“தாமிராஆஆஆ..!!”

வாய்விட்டே அழைத்துவிட்ட ஆதிரா, கைநீட்டி வேறு தங்கையின் மாயவுருவை பிடிக்க முயன்றுவிட்டாள்..!! அவளுடைய கைக்குள் அகப்படாமல் தாமிரா பட்டென்று மறைந்துபோக.. அடுத்தகணமே நிஜவுலகுக்கு வந்து ஆதிரா திருதிருவென விழித்தாள்..!!