மதன மோக ரூப சுந்தரி – 2 23

“ம்ம்..!!”

பேசிக்கொண்டே இருவரும் ஹாலுக்குள் நுழைந்தார்கள்.. அவ்வாறு நுழைந்ததுமே ஆதிராவின் பார்வையை அந்தப்பொருள் வசீகரித்தது..!! ஹாலின் ஒருமூலையில் அந்த மூன்றடி உயர மரஅலமாரி.. அதன்மேலே அழகுற வீற்றிருந்த, முன்பு தாமிரா ஆசையாக பராமரிக்கிற, இப்போது வனக்கொடியின் கடமையாகிப் போய்விட்ட, வண்ணமீன்கள் நீந்துகிற அந்த கண்ணாடி மீன்தொட்டி.. அதனருகே தங்கநிற ஜிகினாத்தாளை சுற்றிக்கொண்டு காட்சியளித்த அந்த அன்பளிப்பு அட்டைப்பெட்டிதான் ஆதிராவின் கவனத்தை கவர்ந்த அந்தப்பொருள்..!!

“எ..என்னத்தான் இது.. கிஃப்ட் பாக்ஸ்லாம்..??”

“அதுவா.. அது திரவியம் அங்கிள் கொண்டுவந்தது.. நமக்கு ஏதோ ப்ரசன்ட்டாம்..!!”

“ஓ.. என்ன இருக்கு அதுக்குள்ள..??”

“ஹஹா.. எனக்கு தெரியலம்மா.. நீயே பிரிச்சுப்பாரு..!!”

சிரிப்புடன் சொல்லிவிட்டு சிபி அங்கிருந்து நகர, ஆதிரா அந்த ஜிகினா பெட்டியை திரும்பி பார்த்தாள்..!! அவ்வாறு பார்க்கும்பொழுதே.. ஆறேழு வருடங்களுக்கு முன்பாக.. அதே இடத்தில் காட்சியளித்த.. இதே திரவியம் வாங்கிவந்திருந்த அந்த அன்பளிப்புப்பெட்டி.. இப்போது ஆதிராவின் மனக்கண்ணில் தோன்றியது.. பழைய நினைவொன்றில் மூழ்க ஆரம்பித்தாள்..!!

திரவியத்தின் ஒரே மகன் அப்போதே அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டிருந்தான்..!! மனைவியுடன் அமெரிக்கா சென்று அவனை பார்த்து திரும்பிய திரவியம்.. இந்தியா வருகையில் அப்படியே தணிகை நம்பிக்கென அன்பளிப்பாக ஒரு பொருளை வாங்கி வந்திருந்தார்..!! அந்தப்பொருளும் இந்தமாதிரிதான் மினுமினுப்புத்தாள் சுற்றப்பட்டு இதே இடத்தில் வைக்கப்பட்டிருந்தது..!!

“என்ன வாங்கிட்டு வந்திருக்கான்னு தெரியல.. நீங்களே பிரிச்சு பாருங்க..!!”

தணிகைநம்பியும் சிபி மாதிரியே சொல்லிவிட்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்தார்..!! பாவாடை சட்டையில் இருந்த தாமிராவும், ரெட்டை ஜடை போட்டிருந்த ஆதிராவும்.. ஆவலாக அந்தப்பெட்டியை நோக்கி ஓடினார்கள்.. ஆசையாக அதன் உறையை கிழித்து எறிந்தார்கள்.. ஆர்வமாக அதனுள்ளே பார்வையை வீசினார்கள்..!! உள்ளே அந்த புத்தம்புது நோக்கியா செல்ஃபோன்..!!

24

ஆதிரா அப்போது கல்லூரியில் இரண்டாமாண்டு பயின்று கொண்டிருந்தாள்.. தாமிரா உயர்நிலைப்பள்ளியில் இறுதியாண்டு..!! அப்போதெல்லாம் செல்ஃபோன் புரட்சி ஏற்பட்டிருக்காத சமயம்.. அகழியிலும் செல்ஃபோன் வைத்திருந்தவர்களின் எண்ணிக்கை மிகக்குறைவு.. அவையும் கருப்புவெள்ளை திரையும், கனமான எடையும் கொண்ட செங்கற்கட்டிகளாகவே இருக்கும்..!! ஆதிராவும், தணிகைநம்பியும்கூட அப்போது அந்தமாதிரி ஆளுக்கொரு செல்ஃபோன்கள் வைத்திருந்தனர்.. தாமிராவிடம் அதுவும் கிடையாது..!!

திரவியம் அமெரிக்காவில் இருந்து வாங்கி வந்திருந்த இந்த புது செல்ஃபோனோ.. கலர் டிஸ்ப்ளேயுடன் கவர்ச்சியாக காட்சியளித்தது.. ஸ்லைட் வடிவமைப்புடன் ஸ்டைலாக பளபளத்தது.. FM, MP3 சப்போர்ட் எல்லாம் உண்டு.. முன்னொன்றும் பின்னொன்றுமாக இரண்டு கேமராக்கள் உண்டு..!! ஆதிராவுக்கும் தாமிராவுக்கும் அந்த மாதிரியொரு சூழலிலும் பருவத்திலும்.. அந்த செல்ஃபோனைப் பார்த்து ஒரு ஈர்ப்பு வந்ததில் ஆச்சர்யம் எதுவுமில்லை..!!

“வாவ்..!! சூப்பரா இருக்குதுக்கா.. அப்பாட்ட சொல்லிட்டு இதை நானே வச்சுக்கப் போறேன்..!!”

“ஹேய் ப்ளீஸ்டி.. நான் வச்சுக்குறேன்டி.. நீ என் செல்ஃபோனை எடுத்துக்கோ.. ஓகேவா..??”

“ஐயே.. உன் ஓட்டை ஃபோன் யாருக்கு வேணும்..?? எனக்கு இதுதான் பிடிச்சிருக்கு.. என் ரேஞ்ச்க்குலாம் இதுதான் சூட் ஆகும்..!!”

“ப்ச்.. நீ இதை வச்சு என்ன பண்ணப்போற..?? நானாவது சாங்க்ஸ்லாம் கேட்பேன்..!!”

“ம்க்கும்.. காலேஜ்ல போய் நல்லா ஸீன் போடுவேன்னு சொல்லு..!! உனக்கு சாங்க்ஸ்னா எனக்கு கேமரா.. நம்ம ஊரோட அழகைலாம் அப்படியே சுட்டுத்தள்ளப்போறேன்..!!”

“சொன்னா கேளுடி.. அக்காக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.. ப்ளீஸ்..!!”

“தேவையில்லாம கெஞ்சிட்டு இருக்காத.. நான் முடிவு பண்ணிட்டேன்.. எனக்குத்தான் இது..!!”

தாமிரா அலட்சியமாக சொல்ல, ஆதிரா அவளையே எரிச்சலாக முறைத்தாள். பிறகு,

“போடி.. நான் அப்பாட்டயே கேட்டுக்குறேன்..!!”

என்றுவிட்டு அவசரமாக அப்பாவின் அறைக்கு விரைந்தாள்.. ஓரிரு வினாடிகள் கழித்தே சுதாரித்துக்கொண்ட தாமிராவும் அவளுக்கு பின்னால் ஓடினாள்..!! முதலில் யார் சென்று அப்பாவிடம் முறையிடுவது என்று இருவருக்கும் போட்டி.. மாடிப்படிகளில் ஒரு ஓட்டப்பந்தயம்..!! மூச்சிரைக்க ஓடிச்சென்று தணிகைநம்பியிடம் இருவரும் முறையிட்டார்கள்.. அவரோ தாமிராவுக்குத்தான் சாதகமாக பேசினார்..!!

“தாமிராவே வச்சுக்கட்டும்மா.. அவகிட்டத்தான ஃபோனே இல்ல..!!”

“அதான் என் ஃபோனை அவளுக்கு தர்றேன்னு சொல்றேன்ல..??”

“போடி.. எனக்கு இந்த ஃபோன்தான் வேணும்..!!”

மல்லுக்கு நின்றனர் இருவரும்..!! மகள்களின் கூச்சலில் எரிச்சலான தணிகைநம்பி,

“அடடடடா.. சின்னப்புள்ளைங்க மாதிரி சண்டை போடாதீங்க..!!” என்றவர் ஆதிராவிடம் திரும்பி,

“இங்கபாரு ஆதிரா.. உன் தங்கச்சி சரின்னு சொன்னான்னா நீ வச்சுக்கோ.. இல்லன்னா அவகிட்டயே குடுத்திடு.. அவ்வளவுதான்.. போங்க ரெண்டு பேரும்.. வேலை இருக்கு எனக்கு..!!”

என்று தனது இறுதிமுடிவை சொன்னார். ஆதிராவின் முகம் இப்போது பட்டென வாடிப்போனது. தாமிராவை பரிதாபமாக ஏறிட்டாள்.

“ப்ளீஸ்டி..!!”

என்று கடைசியாக ஒருமுறை கெஞ்சிப்பார்த்தாள்..!! ஏக்கமும், ஏமாற்றமும் கொப்பளித்த அக்காவின் முகத்தைப் பார்க்க, தாமிராவுக்கு இப்போது பாவமாக இருந்தது..!! அப்படியே உருகிப்போனாள்.. அத்தனை நேரம் அந்த செல்ஃபோன் மீது அவள் வளர்த்திருந்த ஆசையும் அவளுடன் சேர்ந்து உருகிக் கரைந்தது..!! ஆதிராவையே ஓரிரு வினாடிகள் சலனமில்லாமல் பார்த்த தாமிரா.. பிறகு உதட்டில் ஒரு குறும்புப்புன்னகையை கசியவிட்டவாறு, கைகள் இரண்டையும் முகத்திற்கு முன்பாக உயர்த்தி, கைகளின் இடைவெளியில் கண்சிமிட்டியவாறு கேட்டாள்..!!

“Game or Shame..??”

தாமிரா அவ்வாறு கேட்டதுமே ஆதிராவின் முகத்தில் சட்டென ஒரு மலர்ச்சி.. இதுவரை நடந்த அனைத்து போட்டிகளையும் அவள்தான் வென்றிருக்கிறாள் என்கிற தைரியத்தில் பிறந்த மலர்ச்சி அது..!!