மதன மோக ரூப சுந்தரி – 2 31

கைகளுக்குள் அடங்கியிருந்த மனைவியையே சிபி ஏக்கமாக பார்த்தான்.. பொங்கி வரும் ஆசை வெள்ளத்தை அணைபோட்டு தடுக்கிற நிலை அவனுக்கு..!! ஈரம் மினுக்கிற ஆதிராவின் இதழ்கள்.. தேனில் ஊறிய ஆப்பிள் துண்டங்களாய் அவனுக்கு காட்சியளித்தன..!! அவளுடைய முகத்தை நோக்கி குனிந்தான்.. அந்த ஆப்பிள் துண்டங்களுக்கு தனது அதரங்களை எடுத்து சென்றான்..!! கணவனின் உதடுகளை கைகொண்டு தடுத்த ஆதிரா,

“நைட்டு.. நைட்டு.. நைட்டு..!!” என்று கறாராக சொன்னாள்.

“சரி.. சரி.. சரி..!!!”

நொந்துபோனவனாய் சிபி கத்தினான்.. நீளமாக ஒரு சலிப்பு மூச்சை வெளியிட்டான்.. ஆதிராவை தனது அணைப்பில் இருந்து விடுவித்தான்..!!

“நைட்டே வச்சுக்கலாம்.. பாஸ்ட்ஃபுட் வேணாம்.. ஃபுல்மீல்ஸே சாப்பிட்டுக்குறேன்..!!” செல்லக்கோபத்துடன் சொன்னவன், மெத்தையில் போய் மீண்டும் விழுந்தான்.

“ஹாஹாஹாஹா..!!” ஆதிரா சிரித்தாள்.

“சிரிக்காத.. சீக்கிரம் குளிச்சுட்டு வா..!! அந்தப்பசிக்கு நைட்டுத்தான் சாப்பாடுன்னு சொல்லிட்ட.. வயித்துப் பசிக்காவது கொஞ்சம் குயிக்கா சாப்பிடலாம்..!!” சற்றே எரிச்சலுடன் சொல்லிவிட்டு இமைகளை மூடிக்கொண்டான்..!!

அந்த அறையில் அட்டாச்ட் பாத்ரூம் இல்லை.. கீழ்த்தளத்தில் உள்ள பொது குளியலைறையைத்தான் உபயோகித்துக் கொள்ள வேண்டும்..!! ஜிப் இழுத்து பெட்டியை திறந்த ஆதிரா.. உள்ளிருந்த பூந்துவாலையை எடுத்து தோளில் போட்டுக் கொண்டாள்.. மாற்று உடை, சோப்பு, ஷாம்பெல்லாம் அள்ளிக்கொண்டு அறையை விட்டு வெளியேறினாள்..!! படியிறங்கி கீழே வந்து.. விசாலமான அந்த ஹாலை கடந்து.. அடுத்த முனையில் இருந்த குளியலறைக்குள் புகுந்து கொண்டாள்..!!

வெளியாடைகளை களைந்தாள்.. உள்ளாடைகளுடன் நின்றாள்.. கூந்தலை கட்டி வைத்திருந்த ஹேர்பேண்டை உருவி கையிலெடுத்தாள்.. விரல்கள் கோர்த்து முடியை பிரித்து விட்டுக் கொண்டாள்..!! வனக்கொடி பிடித்து வைத்திருந்த வெந்நீருடன் குளிர்நீர் கொஞ்சம் கலந்து.. மிதமான வெப்பத்துக்கு குளிநீரை மாற்றினாள்.. சற்றே உயரமான அந்த முக்காலியில் அமர்ந்து, நிதானமாக நீராட ஆரம்பித்தாள்..!!

உடலுக்கு சோப்பு போட்டு முடித்தவள்.. முகத்துக்கும் நுரை சேர்க்க நினைக்கையில்தான்..

“க்கிர்ர்ர்ர்ர்க்க்.. க்கிர்ர்ர்ர்ர்க்க்.. க்கிர்ர்ர்ர்ர்க்க்..!!!”

அறைக்கு வெளியில் இருந்து ஏதோ சப்தம் கேட்டது..!! புருவத்தை நெரித்த ஆதிரா சோப்பு போடுவதை நிறுத்தி வைத்துவிட்டு.. தனது காதுகளை சற்றே கூர்மையாக்கி கவனமாக கேட்டாள்..!!

“க்கிர்ர்ர்ர்ர்க்க்.. க்கிர்ர்ர்ர்ர்க்க்.. க்கிர்ர்ர்ர்ர்க்க்..!!!”

18

அந்த சப்தம் சன்னமான டெசிபலில் தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருந்தது..!! அது என்ன சப்தம் என்று அவளால் இனம்காண முடியவில்லை.. ஒரு சில வினாடிகள் யோசித்தாள்.. பிறகு புத்தியில் எதுவும் உறைக்காமல் போகவும், அந்த சப்தத்தை அலட்சியம் செய்துவிட்டு குளியலை தொடர்ந்தாள்..!!

குளித்து முடித்து வேறு உடை அணிந்துகொண்டாள்.. தலையில் சுற்றிய டவலுடன் பாத்ரூமில் இருந்து வெளியே வந்தாள்..!! இப்போது அந்த சப்தம் இன்னும் தெளிவாகவே கேட்டது..!!

“க்கிர்ர்ர்ர்ர்க்க்.. க்கிர்ர்ர்ர்ர்க்க்.. க்கிர்ர்ர்ர்ர்க்க்..!!!”

ஹாலில் இருந்த ஊஞ்சல் ஆளில்லாமல் அசைந்து கொண்டிருந்தது..!! உத்தரத்தில் இருந்து தொங்கும் இரட்டை ஊஞ்சல்கள் அவை.. தாங்குவதற்கு தடிமனான இரும்புச்சங்கிலி.. அமர்வதற்கு உராய்வற்ற மரப்பலகை.. இரண்டு பேர் ஒரே நேரத்தில் தனித்தனியாக அமர்ந்து ஆடலாம்.. அதில் ஒன்று மட்டுந்தான் இப்போது..

“க்கிர்ர்ர்ர்ர்க்க்.. க்கிர்ர்ர்ர்ர்க்க்.. க்கிர்ர்ர்ர்ர்க்க்..!!!”

என்ற சப்தத்துடன் அசைந்துகொண்டிருந்தது.. யாரோ இத்தனை நேரம் அதில் அமர்ந்து ஆடிவிட்டு, இப்போதுதான் இறங்கிச் சென்ற மாதிரி..!!

ஆதிரா அந்த ஊஞ்சலையே சற்று குழப்பமாக பார்த்துக் கொண்டிருந்தபோதுதான்.. அவளுடைய நாசியை குப்பென்று அந்த வாசனை தாக்கியது.. மனதை மயக்குகிற மாதிரி ஒருவித சுகந்த நறுமணம்.. அவளுடைய நாசியில் புகுந்து, மூளைவரை பாய்ந்து, கண்கள் லேசாக செருகுமாறு, மெலிதான ஒரு கிறக்கத்தை அவளுக்கு ஏற்படுத்தியது அந்த வாசனை..!!

ஆதிராவுக்கு மிகவும் பழக்கப்பட்ட வாசனைதான் அது.. ஆனால் சட்டென்று அவளால் அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை..!! எங்கிருந்து அந்த வாசனை வருகிறது என்று அப்படியும் இப்படியுமாய் தலையை திருப்பி திருப்பி பார்த்தாள்.. ஊஞ்சல் எப்படி தானாக அசைந்து கொண்டிருக்கிறது என்று வேறு உள்ளுக்குள் ஒரு கேள்வி.. எந்த முடிவுக்கும் வர முடியவில்லை அவளால்..!!

ஒருசில வினாடிகள்.. பிறகு.. ‘தென்றல் வந்து கொஞ்ச நேரம் ஊஞ்சல் ஆடியிருப்பாளாக இருக்கும்.. அவள் ஏதாவது வாசனை திரவியம் பூசியிருப்பாளாக இருக்கும்..’ என்று அவளாகவே ஒரு முடிவுக்கு வந்து.. மெல்ல மாடிப்படியேற ஆரம்பித்தாள்..!!

அகழிக்கு வந்திருந்தது ஆதிராவின் மனதில் ஒரு உற்சாகத்தை தந்திருந்தது.. ஊர் ஊராய் சுற்றிவிட்டு வீட்டை வந்தடைந்ததும் உருவாகுமே, அது மாதிரியானதொரு உணர்வு..!! நடந்ததெல்லாம் மறந்து போயிருந்த காரணத்தினால்.. என்னதான் ஒருவருடமாக வாழ்ந்த வீடானாலும்.. மைசூர் வீட்டை அவளதுவீடாக கருதுவதில் அவளுக்கு ஒரு தயக்கம் இருக்கவே செய்தது..!! அவள் பிறந்து வளர்ந்த இந்த அகழி வீட்டைத்தான்.. அவளுடைய ஆழ்மனம் ‘தனது வீடு’ என்று அவளுமறியாமல் நம்பியது..!! சிபி குளிக்க கிளம்பியபிறகு தனது கூந்தலை உலர்த்தியவள்.. சிறுவயது நினைவுகளில் அப்படியே சிறிது நேரம் ஆழ்ந்திருந்தாள்..!!