கிரிஜா சோனாலி 1 79

“சீ! சீச்சீ!” என்று தன்னைத் தானே அருவருப்போடு கடிந்துகொண்டாள் கிரிஜா. புரண்டு படுத்தவள், தலையணையில் முகம் புதைத்துக்கொண்டு கேவி அழத் தொடங்கினாள்.

“உனக்கு இங்கேயும் ஒரு ரசிகன் இருக்கான் போலிருக்கே!” சோனாலி சிரித்தாள். அவள் பார்த்துக்கொண்டிருந்த திசையில் கிரிஜா கவனித்தபோது அங்கே ஒருவன் அவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தான்.

ஒரு சனிக்கிழமையின் மப்பும் மந்தாரமுமாக இருந்த சூரிய ஒளியை அனுபவிப்பதற்காக, அந்தக் குடியிருப்பில் இருந்த நீச்சல் குளத்திற்கு வந்திருந்தனர். அவர்களோடு பேச்சுக் கொடுக்க ஆகாத முயற்சிகளையெல்லாம் மேற்கொண்டிருந்த வாலிபர்களை மிகவும் சாமர்த்தியமாகத் தவிர்த்து விட்டு ஒதுங்கியிருந்தனர். அந்த நிபந்தனையின் பேரிலேயே கிரிஜா சோனாலியுடன் நீச்சல் குளத்திற்கு வருவதற்கு சம்மதித்திருந்தாள். முதலில் அவளுக்கு நீச்சல் குளத்துக்கு வருவற்கே பெரிய தயக்கமாக இருந்தது.

“வேறே வம்பே வேண்டாம்!” என்று மறுத்திருந்தாள். “நல்லா இழுத்துப் போர்த்திட்டுப் போற போதே அவனவன் காயின் பாக்ஸ் மாதிரி கைபோடறான். இதுலே நீச்சல் குளத்துக்கு வேறே போயிட்டா கேட்கணுமா? போதாக்குறைக்குக் கூடவே நீ! எவனைப் பார்த்தாலும் ஈன்னு பல்லைக் காட்டிக்கிட்டு பேசிட்டு நிப்பே! உன் கூடப் பேசுற சாக்கிலே அவனவன் என்னைக் கண்ணாலேயே கற்பழிச்சிட்டிருப்பானுங்க.”

“ஐயோ, நான் யார் கூடவும் பேச்சே கொடுக்க மாட்டேம்மா,” சோனாலி சிரித்தாள். “இன்னிக்கு ஒரு நாள் உனக்காக நான் எந்தப் பையன் கூடவும் பேச மாட்டேன் போதுமா?”

இறுதியில், கிரிஜாவுக்கு வேறு வழியின்றி சோனாலியோடு வர வேண்டியதாயிற்று. சோனாலியும் சொன்ன வாக்கைக் காப்பாற்றினாள். கண்ணில் பட்ட எல்லா வாலிபர்களையும் தவித்தாள். வலிய வந்து பேச்சுக்கொடுத்தவர்களுக்கும் சரியாக பதில் அளிக்காதிருக்கவே, அந்தப் பையன்கள் ஆர்வமிழந்து அவர்களிடமிருந்து அகன்று போயினர். இப்போது…, எவனோ ஒருவன் கிரிஜாவையே கண்கொத்திப் பாம்பாக கவனித்துக்கொண்டிருக்கிறான். அவன் ஒருவன் தான் அவர்கள் இருவரிடமும் இது வரைக்கும் பேச்சுக் கொடுக்க முயலவில்லை. அவன் அந்த நீச்சல் குளத்தில் கால்நீட்டிப்படுத்தவாறு, சூரிய ஒளியில் லயித்திருந்தான் போலும். ஆனால் அவனது கண்கள் கிரிஜாவை விட்டு அகலவேயில்லை. கிரிஜாவும் அவனை சற்றே கூர்ந்து கவனித்தாள். அவன் அவளை விடவும் பல வருடங்கள் மூத்தவனாக இருப்பான் போலிருந்தது. காதோரம் நரையும் தென்பட்டது. பெரிய உடல்வாகுவும் இல்லை; மிக மிக ஒல்லியாகவே இருந்தான். மார்பெங்கும் புசுபுசுவென்று ரோமம் படர்ந்திருந்தது.