இதுக்கு முன்னாடி பொண்ணுங்கள பாத்தது இல்லையா? 5 65

“ஹாய் அண்ணி!! முதல்ல உங்களுக்கு கங்கிராட்ஸ்!! எங்க அண்ணன் மாதிரி ஒரு நல்ல பையனை வாழ்க்கை துணையா தேர்ந்தெடுத்ததுக்கு.. அண்ணன் எங்கள்ட்ட எல்லாம் சொல்லிட்டான்.. சரி வாங்க வீட்டுக்கு போவோம்.. அம்மா உங்களை கூப்பிட்டாங்க” என்று கடகடவென ராம் பேசி முடிக்க, கிஷோர் “ஐயையோ” என திருதிருவென முழிக்க, குறும்பு எண்ணங்கள் நிறைய கொண்ட சுபர்ணா அவள் பங்குக்கு கிஷோரை வம்பு செய்ய முடிவெடுத்தாள்…

“என்ன கிஷோர் அதுக்குள்ள நம்ம லவ் பத்தி உங்க வீட்டுல சொல்லிட்டியா.. ஒரு ஆறு மாசம் திணற திணற லவ் பண்ணிட்டு அதுக்கப்புறம் வீட்டுல சொல்றதா தான டா நம்ம பிளான்.. அவசரப்பட்டு சொல்லிட்ட.. இப்போ பாரு அவங்க நமக்கு உடனே கல்யாணம் பண்ணி வச்சுருவாங்க” என்று கொள்ளை அழகுடன் கொஞ்சலாக சொன்னாள்..

கலையின் மேல் கண்மூடித்தனமாக காதல் கொண்ட கிஷோர் மனதில் சின்ன சபலம் வந்தது. “ப்பா என்ன அழகா கொஞ்சிக்கிட்டே சொல்றா, நிஜமாவே இவளும் நானும் லவ் பண்ணிருந்தா.. ஸ்ஸ்ஸ் நினைக்கும் போதே கிளுகிளு ன்னு இருக்கே” என்று மனதில் எண்ணம் தோன்ற உடனே அதை புறந்தள்ளி “ஹையோ என்ன சுபர்ணா அவன் தான் தெரியாம பேசுனா, நீங்களும் கூட சேர்ந்து கிண்டல் பண்றீங்க” என்றான்..

“என்னது சுபர்ணா வா??? அண்ணி பேரு கலை ன்னு தான சொன்ன” என்று கிஷோரை பார்த்து ராம் கேட்டான்..

“பின்ன பிரண்ட்ஸ் பிரண்ட்ஸ் ன்னு சொல்லிட்டு சைடு கேப் ல லவ் பண்ணிருக்கீங்க.. என்கிட்டே ஒரு வார்த்தை கூட சொல்லலைல.. அதான் சும்மா ஃபன்” என்று கிஷோரை பார்த்து கண்ணடித்து சொன்னவள், ராமிடம் திரும்பி “நீங்க தேடி வந்த கலை அங்க இருக்காங்க” என்று தனக்கு இடப்புறமாக கை காட்டினாள்..

கிஷோரும் ராமும் ஒன்றாக திரும்பி பார்க்க, சற்று முன் நடந்த குழப்பங்களை சிரித்த முகத்துடன் கலை ரசித்துக் கொண்டிருந்தாள்.

“அண்ணா, அண்ணி ரொம்ப ஹோம்லியா அழகா இருக்காங்க” என்று சொல்லிவிட்டு கலையிடம் சென்று “ஹாய் அண்ணி” என்று கை நீட்டினான்..