இதுக்கு முன்னாடி பொண்ணுங்கள பாத்தது இல்லையா? 5 65

நல்ல கொதி நிலைக்கு வந்த பால் பொங்கி நுரை வந்தது. அந்த நுரையை பார்த்ததும் அவளுக்குள் ஒரு வித்தியாசமான எண்ணம் தோன்றியது. நுரையோடு நுரையாக எச்சிலை துப்பி ராகுலுக்கு கொடுத்து விடலாமா என்று, பின்னர் தன் அன்பு அம்மாவுக்கும், ஆசை காதலனுக்கும் இந்த பாலை தான் கொடுக்க வேண்டும் என்று அதை அப்படியே களைத்து விட்டாள்..

பாலில் ஹார்லிக்ஸ், சீனி எல்லாவற்றையும் கலந்து கொண்டே ஹாலில் எட்டிப் பார்த்தாள் என்ன நடக்கிறது என்று..

கலையும், கிஷோரும் வீட்டுக்குள் நுழைந்ததும், கலையின் அம்மா மஞ்சு வேக வேகமாக ஒரு ஆர்வத்துடன் சின்ன சந்தோசத்துடன் பேசினாள். வீட்டிற்கு விருந்தாளி வரும்போது எல்லா அம்மாக்களிடம் இருக்கும் அதே பரபரப்பு தான் மஞ்சுவிடமும் இருந்தது.

“ஏய் கலை எங்கடி போன, ராகுல் தம்பி வந்துருக்கு பாரு, வேகமாக கிச்சனுக்கு போயி ஹார்லிக்ஸ் போட்டு கொண்டு வா, (கிஷோரை பார்த்தவள்) சரி இந்த தம்பி யாரு உன் பிரண்ட் ஆ.. உக்காருங்க தம்பி, கலை ஹார்லிக்ஸ் போட்டு கொண்டு வருவா, இருந்து குடிச்சுட்டு போங்க” என்றாள்..

அப்பொழுது உள்ளே சென்றவள், இப்பொழுது தான் வெளியே வந்தாள். கையில் ஒரு சில்வர் தட்டுடனும் அதில் ஹார்லிக்ஸ் நிரப்பப்பட்ட நாலு டம்ளருடன் ஹாலுக்கு வந்து மேசையில் வைத்துவிட்டு கிஷோர் அருகில் உட்கார்ந்து கொண்டாள். கிஷோருக்கு ஒரு டம்ளரை எடுத்து கொடுத்துவிட்டு தானும் ஒன்று எடுத்துக்கொண்டு பருகினாள்.

ராகுலின் கன்னத்தை கலை பழுக்க வைத்த விடயம் முதல், அவள் வேலை பறிபோனது வரை மஞ்சு அறிந்திருக்கவில்லை, ராகுலும் அதை பற்றி சொல்லியிருக்கவில்லை என்று மஞ்சுவின் நடவடிக்கையில் இருந்து கலைக்கும் கிஷோருக்கும் தெளிவாய் புரிந்தது..

இது எதுவும் சொல்லாமல் இவன் ஏன் இங்கு வந்திருக்கிறான் என்று கலை மனதுக்குள் புலம்பி கொண்டிருக்க, அனைவரின் டம்ளரும் காலியாகி டேபிளில் வைக்கப்பட்டது.. மெதுவாக மஞ்சு ஆரம்பித்தாள்..