கண்ணாமூச்சி 4 57

கையில் அந்த பொம்மையுடனேதான் ஆதிரா அறையில் இருந்து வெளிப்பட்டாள்..!! அவளும் தாமிராவும் பெரியவர்களான பிறகும்கூட.. அந்த பொம்மையை அவர்கள் அறையிலேயே ஒரு அலங்காரப் பொருளைப்போல வைத்திருந்தது அவளுக்கு நன்றாக நினைவிருந்தது..!! வேண்டாத பொருட்களை அடைத்து வைக்கிற அந்த அறைக்கு இந்த பொம்மை எப்படி சென்றிருக்கக்கூடும் என்ற யோசனையுடனேதான் மாடிப்படியேறினாள்..!! அவர்களுடைய குடும்பம் மைசூருக்கு சென்றபிறகு.. அவர்களுடைய அறையை சுத்தம் செய்த வனக்கொடி.. அந்த அறையில் இந்த பொம்மையை போட்டிருக்கவேண்டும் என்று நினைத்துக் கொண்டாள்..!!

மாடியில் இருக்கிற அவர்களது அறைக்கு ஆதிரா திரும்பியபோது.. சிபி அங்கே இல்லை.. உறங்கி எழுந்திருந்தவன் வேறெங்கோ சென்றிருந்தான்..!! ஆதிரா படுக்கையில் சென்று அமர்ந்தாள்.. சில வினாடிகள் அந்த பொம்மையையே கண்ணிமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.. சிறுவயது நினைவுகள் எல்லாம் அவளுடைய மனதில் எழுந்தன..!! பிறகு அவளுக்குள் ஏதோ ஒரு உந்துதல் ஏற்பட.. அந்த பொம்மையை திருகி திறந்தாள்.. உள்ளே இருந்த பொம்மைகளை ஒவ்வொன்றாக திறந்து அதற்குள்ளிருந்த பொம்மையை வெளியே எடுத்தாள்..!!

ஏழாவது பொம்மையை திறந்தபோதுதான் அந்த வித்தியாசத்தை உணர்ந்தாள்.. அதற்குள்ளே இருக்கவேண்டிய, எல்லாவாற்றிலும் மிகச்சிறிய எட்டாவது பொம்மையை காணவில்லை.. அதற்கு பதிலாக உள்ளே வேறொன்று இருந்தது.. ஒரு கம்ப்யூட்டர் மெமரி சிப்..!!

ஆதிரா ஆச்சர்யப்பட்டுப் போனாள்.. சிறிது நேரம் அந்த சிப்பையே வித்தியாசமாக பார்த்தாள்..!! ‘இதை யார் இதற்குள் வைத்திருப்பார்கள்..?’ என்று யோசித்துப் பார்த்தால்.. தாமிராவை தவிர வேறு யாராகவும் இருக்க முடியாது என்று தோன்றியது..!! அதே நேரம்.. அந்த சிப்புக்குள் என்ன ஒளிந்திருக்கிறது என்பதை தெரிந்துகொள்கிற ஆர்வமும்.. அவளுக்குள் உடனே தோன்றியது..!!

பட்டென படுக்கையில் இருந்து எழுந்தாள்.. டேபிளில் இருந்த சிபியின் லேப்டாப்பை கையில் எடுத்தாள்..!! மீண்டும் மெத்தையில் வந்து அமர்ந்தவள், லேப்டாப்பை திறந்து ஆன் செய்தாள்.. அதன் பக்கவாட்டில் மெமரி சிப்பை செருகி, அதில் சேகரிக்கப்பட்டிருந்த டேட்டாவை லேப்டாப் திரையில் பார்த்தாள்..!! ‘PRIVATE’ என்கிற பெயருடன் ஒரே ஒரு zip file மட்டுமே அந்த மெமரி சிப்பில் இருந்தது..!! அதை திறந்து பார்க்க முயன்றபோது..

“Please enter the password” என்று கேட்டது.

ஆதிராவின் முகத்தில் சட்டென்று ஒரு ஏமாற்றம்..!! ‘என்ன பாஸ்வேர்ட் வைத்திருப்பாள்’ என்று மோவாயைக் கீறி யோசித்தாள்.. ‘அதுவாக இருக்கும், இதுவாக இருக்கும்’ என்று அவளுக்கு தோன்றிய நான்கைந்து வார்த்தைகளை முயன்று பார்த்தாள்..!! அவளுடைய முயற்சி தோல்வியிலேயே முடிந்தது.. அந்த file-ஐ திறக்க முடியவில்லை..!!

என்ன செய்யலாம் என்று சிறிது நேரம் யோசித்தாள்.. அப்புறம் யோசனை எதுவும் தோன்றாமல் போகவே, சலிப்புடன் லேப்டாப்பை மூடி வைத்தாள்..!! அந்த மெமரி சிப்பை மட்டும்.. டேபிள் ட்ராவில் பத்திரப்படுத்திக் கொண்டாள்..!!

கோயிலின் வாயிலில் இருந்து நீண்டிருந்த வீதியில்.. ஆண்களும் பெண்களும், பெரியவர்களும் சிறியவர்களுமாக திரள்திரளாய் கூட்டம்.. ஆதிராவும் அந்தக் கூட்டத்துக்குள் ஒருஆளாய் நின்றிருந்தாள்.!! இரவு நேரம் அது.. குழல் விளக்குகளும் சீரியல் விளக்குகளும்தான் அந்த இடத்தை வெளிச்சமாக வைத்திருந்தன..!! திடும்திடுமென முழங்கிய மேளச்சத்தம் காதைக் கிழித்தது.. கிறுகிறுவென சுற்றிய ராட்டினங்கள் கண்ணைக் கவர்ந்தன..!!

காவி வேஷ்டியும், காலில் சலங்கையும், கையில் பறையுமாக இருந்த சில இளைஞர்கள்.. நான்குக்கு நான்கு என்று வரிசையமைத்து கூடிக்கொண்டு.. கையிலிருந்த பறையை குச்சியால் ‘டமார் டமார்’ என்று ஒத்திசைவுடன் தட்டியவாறே.. காற்சலங்கைகள் ‘ஜல் ஜல்’ என்று ஒலியெழுப்புமாறு.. வீதியில் நளினமாக ஆடிவந்தனர்..!!

அவர்களுக்கு பின்னே.. காலையில் முயல் வேட்டைக்காக காட்டுக்குள் சென்றிருந்த வாலிபர்களும் சிறுவர்களும்.. இப்போது வெற்றிப் பூரிப்புடன் கம்பீரமாக நடந்துவந்தனர்..!! நடந்து வந்தவர்களின் ஒருகையில் அவர்கள் வேட்டையாட எடுத்துச் சென்ற ஆயுதம்.. வேல்க்கம்பு, குத்தீட்டி, இரும்புக்கழி..!! அவர்களது இன்னொருபக்க தோளில் நீளமான ஒரு கொம்பு.. அந்த கொம்பில் அவர்கள் வேட்டையாடிய முயல்கள் உயிரற்று தலைகீழாக தொங்கிக்கொண்டிருந்தன..!!

ஆட்டத்தை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த ஆதிராவுக்கு.. திடீரென தங்கையின் ஞாபகம் வந்தது.. தலையை திருப்பி பக்கவாட்டில் பார்த்தாள்.. அருகில் தாமிரா இல்லாமல் போனதும் ஆதிராவிடம் ஒரு சிறுபதற்றம்..!! தலையை அப்படியும் இப்படியுமாய் சுழற்றி.. பார்வையாலேயே தாமிராவை தேடினாள்..!! சற்று தொலைவில்.. கூட்டத்தை விலக்கியவாறு சென்றுகொண்டிருந்த தாமிரா.. இப்போது ஆதிராவின் பார்வையில் பட்டாள்..!!

“தாமிராஆஆ..!!”

ஆதிரா இங்கிருந்து கத்தியது தாமிராவின் காதில் விழவில்லை.. மேலும் மேலும் முன்னேறி, கூட்டத்தில் இருந்து விடுபட்டாள்..!! ஏதோ ஒரு வசியத்துக்கு கட்டுப்பட்டவள் மாதிரி.. எந்திரம் போல கோயிலின் பின்புற இருட்டுக்குள் நடந்தாள்..!! இப்போது ஆதிரா அவளுடைய இடத்திலிருந்து கிளம்பினாள்.. நெருக்கியடித்து நின்ற கூட்டத்துக்குள் முண்டியடித்து, தங்கை சென்ற திசையிலேயே நகர்ந்தாள்..!! ‘ஊஊஊஊஊ’ என்று பெண்கள் குழவையிடும் சப்தம் ஒருபுறம் கேட்டுக்கொண்டிருக்க.. ஆதிரா கஷ்டப்பட்டு கும்பலை விலக்கி வெளியே வந்தாள்..!!

“தாமிராஆஆ..!!”

என்று கத்திக்கொண்டே தங்கை சென்ற பக்கமாக நடந்தாள்..!! கோயிலின் பின்பக்க பிரதேசம் இருண்டு போயிருந்தது.. நிலவின் மசமசப்பான வெளிச்சம் மட்டுமே மிச்சமிருந்தது..!! நெருக்க நெருக்கமாய் வளர்ந்திருந்த மரங்கள் எல்லாம்.. கருப்பு பிம்பங்களாகவே காட்சியளித்தன..!! ஆதிரா இருட்டுக்குள் தடுமாற்றமாய் நடந்தவாறே.. தங்கையை பெயர்சொல்லி அழைத்தவாறே சுற்றும் முற்றும் தேடினாள்..!!

“தாமிராஆஆ.. தாமிராஆஆ..!!”

தாமிரா எங்கே சென்றாள் என்றே தெரியவில்லை.. அதற்குள் மாயமாக மறைந்து போயிருந்தாள்..!! தங்கையை காணாத ஆதிராவுக்கு நெஞ்சு பதறியது.. அவசரம் தொற்றிக்கொண்டவளாய் அங்குமிங்கும் ஓடினாள்.. மரங்களுக்கு இடையில் புகுந்து பதைபதைப்புடன் தங்கையை தேடினாள்..!!

சிறிதுநேர தேடுதலுக்கு பிறகு.. ஒரு மரத்துக்கு அடியில் நின்றிருந்த தாமிரா பார்வையில் தென்பட்டாள்.. கருப்புஉடை அணிந்திருந்த அவளது முகம் மட்டும் அப்படியே வெளிறிப் போயிருந்தது..!! தங்கையை கண்டுவிட்ட மகிழ்ச்சியில்..

“தாமிராஆஆ..!!”

என்று உற்சாகமாக கத்திக்கொண்டே ஆதிரா அவளை நோக்கி ஓடினாள்..!! ஆனால்.. தாமிராவோ ஒருவித திகைப்புடன் சிலைபோல் உறைந்திருந்தாள்.. அவளுடைய கண்கள் பயத்தில் அகலமாய் விரிந்திருந்தன..!!

“அக்காஆஆ..!!” என்று ஈனஸ்வரத்தில் முனுமுனுத்தாள்.

தாமிராவை நோக்கி ஓடிய ஆதிரா இப்போது அப்படியே பட்டென நின்றாள்.. அவளுடைய முகத்தில் கொப்பளித்த மகிழ்ச்சி சுத்தமாக வடிந்து போய்.. குப்பென ஒரு திகில் சாயத்தை அப்பிக்கொண்டது..!! ஆதிராவின் திகிலுக்கு காரணம்.. மரத்துக்கு பின்புறம் இருந்து வெளிப்பட்ட அந்த இன்னொரு உருவம்.. தாமிராவின் முதுகுப்பக்கம் தோன்றி அவளுக்கு மிகநெருக்கமாக நின்றிருந்தது..!!

3 Comments

  1. Sema story

  2. Complete the story fast it is boring

  3. Complete the story fast it is too much boring

Comments are closed.