கண்ணாமூச்சி 2 72

“இப்போ எங்கப்பா போறோம்..??”

“நம்ம வீட்டுக்கு போறோம்மா..!!”

“அகழிக்கா..??” ஆதிரா அவ்வாறு கேட்கவும், மற்ற மூவரிடமும் மெலிதான ஒரு திகைப்பு.

“இ..இல்லம்மா.. இங்க.. மைசூர்ல இருக்குற வீட்டுக்கு..!!”

பூவள்ளியே சமாதானமான குரலில் மகளுக்கு பதில் சொன்னாள்..!! அடர்த்தியான மரங்களை இருபுறமும் ஏந்தியிருந்த அந்த தார்ச்சாலையில் கார் சென்றுகொண்டிருக்க.. ஆதிரா இப்போது இமைகள் இரண்டையும் மூடி பின்சீட்டில் தலை சாய்த்துக் கொண்டாள்..!!

பூவள்ளிக்கும் தணிகை நம்பிக்கும் அகழிதான் பூர்வீகம்..!! செல்வத்துக்கு சற்றும் குறைவில்லாத குடும்பத்தில் பிறந்தவர்கள் இருவரும்..!! பூவள்ளி புவனகிரியின் வழித்தோன்றல்.. தணிகை நம்பி அந்த ஊரிலேயே இன்னொரு செல்வந்தரின் ஆண்வாரிசு..!! நாற்பது வருடங்களுக்கும் மேல் அகழியிலேயே வாழ்வை கழித்திருந்தவர்கள்.. ஒருவருடம் முன்பாக மைசூருக்கு இடம்பெயருகிற மாதிரியான குடும்ப சூழல்..!! அத்தகைய சூழல் உருவாக காரணமென ஆதிராவின் தங்கை தாமிராவுக்கு நேர்ந்ததை சொல்லலாம்..!!

ஆனால்.. அந்த நிகழ்வெல்லாம் ஆதிராவுக்கு இப்போது நினைவில் இல்லை..!! வந்து ஒருவருடம் ஆகப் போகிறது.. மைசூரையே புது ஊர் போல வெறிக்க வெறிக்க பார்க்கிறாள்..!! விபத்து மயக்கத்தில் இருந்து ஆதிரா விழித்து எழுந்ததும்.. அப்பா அணிந்திருந்த டி-ஷர்ட்டை பார்த்து அவள் வியப்புற்றதற்கு காரணம் இருக்கிறது.. மைசூர் வந்த பிறகுதான் தணிகை நம்பி டி-ஷர்ட் எல்லாம் அணிகிறார்.. அகழியில் இருக்கையில் அந்தப்பழக்கம் அவருக்கு இல்லை..!!

கால்மணி நேர பயணத்துக்கு பிறகு.. காரின் வேகம் கொஞ்சம் கொஞ்சாய் குறைந்து.. இளஞ்சிவப்பு நிற வெளிப்பூச்சுடன் காணப்பட்ட அந்த இரண்டடுக்கு வீட்டின் முன்பாக சென்று நின்றது..!!

“வீடு வந்துடுச்சும்மா..!!”

பூவள்ளி சொன்னதை தொடர்ந்து நால்வரும் காரில் இருந்து இறங்கினார்கள்..!! தரையில் அழுத்தமாக ஊன்றிய வாக்கிங் ஸ்டிக்குடன் நின்ற ஆதிரா.. தலையை மெல்ல நிமிர்த்தி வீட்டை ஒரு பார்வை பார்த்தாள்..!! மைசூரை வெறித்தபோது அவள் உணர்ந்த அதே அந்நியத்தன்மையை.. ஒரு வருடமாக அவள் வாழ்ந்த இந்த வீட்டை பார்க்கையிலும் உணர்ந்தாள்..!!

“என்ன ஆதிரா அப்படி பாக்குற..?? இது உன் வீடு.. உரிமையா உள்ள வா..!!”

இயல்பாக சொன்னவாறே.. சிபி ஆதிராவின் தோள் மீது கைபோட்டு இதமாக அணைத்துக் கொண்டான்..!! அவன் அவ்வாறு அணைத்துக் கொண்டதுமே.. ஆதிரா ஒரு புதுவித கூச்சத்துடன் நெளிந்தாள்.. காணாமல் போன அவளுடைய நினைவுகளில் கணவனின் நெருக்கம் தொடர்பான நினைவுகளுமே அடக்கம்.. அதனாலேயே அவளிடம் அந்த கூச்சம்..!!

அவளது மனநிலையை உடனடியாய் புரிந்து கொண்ட சிபி.. தனது கையை அவளிடம் இருந்து விலக்கிக்கொண்டான்..!!

“பார்த்து வா ஆதிரா..!!”

என்று புன்னகையுடன் சொல்லிவிட்டு முன்னால் நடந்தான்..!! கணவன் நடந்து செல்வதையே ஆதிரா ஒரு காதல் பார்வை பார்த்தாள்.. கழுத்தில் தொங்கிய தாலியை ஒருமுறை பெருமிதமாக பார்த்துக் கொண்டாள்.. கால் தந்த வேதனையை உதடுகடித்து பொறுத்தவாறே வீட்டுக்குள் அடியெடுத்து வைத்தாள்..!!

13

யாருடைய வாழ்விலுமே திருமணம் என்பது ஒரு முக்கியமான நிகழ்வு.. அந்த நிகழ்வே ஆதிராவின் நினைவில் இருந்து தொலைந்து போயிருந்தது..!! அம்னீஷியாவால் பாதிக்கப்பட்டவளிடம் அவளுக்கு திருமணமாகிவிட்ட செய்தியை பூவள்ளி உரைத்தபோது.. அதிர்ந்துதான் போனாள் முதலில்..!! நம்பிக்கை அற்றவளாய் மாங்கல்யத்தையே மலங்க மலங்க பார்த்தாள்..!! ஆனால்.. அது அவளுக்கு ஒருவித இன்ப அதிர்வாகத்தான் இருந்தது.. சிறு வயதில் இருந்தே சிபி மீது அவளுக்கு இருந்த காதல்தான் அதன் காரணம்..!!

“பெரியவளாகி என்ன பண்ணப் போற..??” வீட்டுக்கு வரும் உறவினர்களின் கேள்விக்கு,

“ஐ.ஏ.எஸ் படிச்சு கலக்டர் ஆகப் போறேன்..!!” என்று குட்டி தாமிரா பதில் சொன்னால்,

“அத்தானை கட்டிக்கிட்டு பொண்டாட்டியாகப் போறேன்..!!” என்பாள் எட்டு வயது ஆதிரா.

தாய்தந்தையரை இழந்து தாய்மாமாவின் வீட்டில் தஞ்சம் புகுந்திருந்த சமயத்தில்.. தாரை தாரையாய் கண்ணீர் வடித்துக்கொண்டே இருப்பான் சிறுவன் சிபி..!! அந்நிய உணர்வோடு அனைவரையும் மிரட்சியாக பார்ப்பான்.. ஆறுதலாய் அவனுடைய கண்ணீர் துடைக்க நீளும் ஆதிராவின் கரங்கள்..!!

“அழாதீங்க அத்தான்.. உங்களுக்குத்தான் நாங்கல்லாம் இருக்கோம்ல..??”

அப்போதிருந்தே அவன் மீது ஒரு பரிவு கலந்த பாசம்.. பள்ளியில் அவன் முதல் மாணவனாக திகழ, அவன் மீது ஒரு மதிப்பு..!! தாமிராவை அவர்களுடன் சேர்த்து கொண்டு.. மூவரும் ஒருவர் கையை அடுத்தவர் பற்றி வளையம் அமைத்துக்கொண்டு.. ஆகாயத்தை அண்ணாந்து பார்த்து..

“கிறுகிறு மாம்பழம்.. கிய்யா கிய்யா மாம்பழம்..!! கிறுகிறு மாம்பழம்.. கிய்யா கிய்யா மாம்பழம்..!!”