கண்ணாமூச்சி 2 72

என்று திக்கி திணறி கேட்க, சிபி மெலிதாக அதிர்ந்தான். ஆதிராவின் முகத்தை குழப்பமாக ஒரு பார்வை பார்த்தான்..!!

“எ..என்ன சொல்ற ஆதிரா.. நீ..நீதான எனக்கு இந்த வாட்ச் ப்ரசன்ட் பண்ணின..??”

“நானா..????”

இப்போது ஆதிராவின் முகத்தில் ஒரு சிறு அதிர்ச்சி..!! தலைக்குள் குடைச்சல் எடுப்பது மாதிரி ஒரு உணர்வு அவளுக்கு.. அவஸ்தையாக முகத்தை சுளித்தவள், அப்படியே கண்களையும் நெற்றியையும் சுருக்கிக் கொண்டாள்..!! அவளுடைய பேச்சிலும், கேள்விகளிலும் மற்ற மூவரும் சற்றே குழம்பிப் போயிருந்தனர்.. அந்த குழப்பத்தின் ரேகைகள் படர்ந்திட்ட முகத்துடன், அவளையே அசைவில்லாமல் பார்த்துக் கொண்டிருந்தனர்..!!

இப்போது.. ஆதிரா மூடிய விழிகளை மெல்ல திறந்தாள்.. சுற்றி நின்ற மூவரையும் மருள மருள ஒரு பார்வை பார்த்தாள்..!! பிறகு அந்த பார்வையை, அறையை சுற்றி ஒருமுறை அலைபாய விட்டாள்.. அப்புறம் திடீரென ஞாபகம் வந்தவளாய் அப்பாவிடம் திரும்பி கேட்டாள்..!!

“தாமிரா எங்கப்பா.. காணோம்..??”

அவ்வளவுதான்..!! மற்ற மூவரும் இப்போது ஒரு உச்சபட்ச அதிர்ச்சியை உள்வாங்கினார்கள்..!! மூவருக்குள்ளும் ஒரு கலவர உணர்வு ஜிவ்வென்று ஓட.. ஆதிராவின் முகத்தையே ஒருவித மிரட்சியுடன் பார்த்தார்கள்..!! ஆதிராவும் என்னவென்று புரியாமல் அவர்களுடைய முகத்தையே மாற்றி மாற்றி பார்த்துக் கொண்டிருந்தாள்..!! ஓரிரு வினாடிகள்.. அவர்களிடம் இருந்து எந்த பதிலும் வராமல் போகவும்,

“சொல்லுங்கப்பா.. தாமிரா எங்க போயிருக்கா..?? எ..எனக்கு அடிபட்டது அவளுக்கு தெரியாதா..??”

என்று ஆதிராவே திரும்பவும் கேட்டாள்..!! மகளின் கேள்விக்கு பதில் சொல்லாமல்.. அவளுடைய முகத்தை திகைப்பாக பார்த்த பார்வையையும் மாற்றிக்கொள்ளாமல்.. மருமகனை திணறலாக அழைத்தார் தணிகை நம்பி..!!

“சி..சிபி..!!”

“எ..என்ன மாமா..??” சிபியும் மிரட்சி நீங்காத விழிகளுடன் தணிகை நம்பியை திரும்பி பார்த்தான்.

“டா..டாக்டரை வர சொல்லுப்பா..!!”

தணிகை நம்பி சொல்லவும், ஒருவித தடுமாற்றத்துடனே சிபி எழுந்துகொண்டான்.. ஆதிராவை பார்த்தவாறே அறை வாசலுக்கு நகர்ந்தான்..!! எதுவும் புரியாத ஆதிரா அப்பாவை திரும்ப திரும்ப கேட்டுக் கொண்டிருந்தாள்..!!

“எ..என்னப்பா ஆச்சு.. சொல்லுங்கப்பா..!! எ..என்னாச்சு..??”

அதன்பிறகு ஒருவாரம் கழித்து..!! அப்பல்லோ மருத்துவமனையின் நரம்பியல் துறையை சார்ந்த கட்டிடத்தில் ஒரு அறை..!! அறைக்கு வெளியே அறையப்பட்டிருந்த மரப்பலகையில்.. Dr. Sannidhanam, MBBS, MD, DM (Neurology) என்கிற எழுத்துக்கள் வெண்ணிறத்தில் பளிச்சிட்டன..!!

10

அறைக்கு உள்ளே கிடந்த சுழல் நாற்காலியில்.. மூளை மற்றும் நரம்பியல் நிபுணர் சந்நிதானம் அமர்ந்திருந்தார்.. கைகளை மடித்து டேபிளில் ஊன்றி, நாற்காலியில் இருந்து முன்னுக்கு வந்திருந்தார்..!! டேபிளுக்கு இந்தப்பக்கம் கிடந்த இரண்டு நாற்காலிகளில்.. சீரியஸான முகத்துடன் சிபியும், தணிகை நம்பியும் அமர்ந்திருந்தனர்.. டாக்டர் சொல்கிற விஷயங்களை கவனமாக கேட்டுக் கொண்டிருந்தனர்..!!

“நீங்க என்ன படிச்சிருக்கீங்க மிஸ்டர் சிபி..??” டாக்டர் சிபியை கேட்டார்.

“பி.எஸ்.ஸி விஷுவல் கம்யுனிகேஷன்..!!”

“எந்த காலேஜ்..??”

“ஆதித்யா இன்ஸ்டிட்யூட்..!!”

“ஹ்ம்ம்..!! த்ரீ இயர்ஸ் கோர்ஸ்ல..??”

“எஸ்..!!”

“காலேஜ்ல முதல்நாள் அனுபவம் உங்களுக்கு எப்படி இருந்தது.. அதைப்பத்தி கொஞ்சம் சொல்லுங்களேன்..!!”

டாக்டர் அவ்வாறு கேட்கவும், சிபி சற்றே நிதானித்தான்..!! திடீரென எதற்காக இதைப்பற்றி கேட்கிறார் என்று மனதுக்குள் எழுந்த கேள்வியை அலட்சியம் செய்தவாறே.. கல்லூரியின் முதல்நாள் ஞாபங்களை மனதுக்குள் ஒருங்கிணைத்து.. ஒருசில வினாடிகளுக்கு பிறகு மெலிதான குரலில் ஆரம்பித்தான்..!!

“ஆக்சுவலா.. ஃபர்ஸ்ட் டே நான் லேட்டாத்தான் காலேஜுக்கு போனேன் டாக்டர்..!! நல்லா ஞாபகம் இருக்கு.. கே.ஆர்.எஸ்.ரோட்ல அன்னைக்கு சரியான ட்ராஃபிக் ஜாம்..!! நான் காலேஜ் போறப்போ.. இன்டக்சன் ப்ரோக்ராம் அல்ரெடி ஸ்டார்ட் ஆகியிருந்தது..!! எங்க ப்ரொஃபஸர் ஒருத்தர் தாமரைக்கண்ணன்னு.. அவர்தான் ஸ்பீச் குடுத்துட்டு இருந்தாரு.. அவர்ட்ட மன்னிப்பு கேட்டுட்டு ஹாலுக்குள்ள என்டர் ஆனேன்..!! என்னோட பெஸ்ட் ஃப்ரண்ட் பரிதியை அப்போத்தான் ஃபர்ஸ்ட் டைம் பார்த்தேன்.. அவன் உக்காந்திருந்த பெஞ்ச்லருந்து நகர்ந்து.. எனக்கு இடம்..” சிபி சொல்லிக்கொண்டிருக்கையிலேயே அவனை இடைமறித்த டாக்டர்,

“அன்னைக்கு நீங்க என்ன கலர் ஷர்ட் போட்டிருந்திங்கன்னு ஞாபகம் இருக்கா..??” என்று திடீரென கேட்க, சிபியிடம் படக்கென ஒரு திகைப்பு.