கண்ணாமூச்சி 2 72

“இன்னைக்கும் அதேமாதிரி ட்ரை பண்ணலாம்.. ரெண்டு தடவை பண்ணலாம்.. மூணாவது தடவை யார் கூப்பிடுறாங்கன்னு பாக்கலாமா..??” சிபி கேட்டுவிட்டு இளிக்க, ஆதிரா அவனை செல்லமாக முறைத்தாள்.

“ம்க்கும்.. உங்க ஐடியா இப்போ எனக்கு நல்லா புரியுது..!! ரொம்பத்தான் ஆசை உங்களுக்கு..!!”

என்றவாறே தனது இடுப்பை வளைத்திருந்த கணவனின் கைகளை பட்டென தட்டிவிட்டாள்..!! அவ்வளவு நேரம் பிரகாசமாக இருந்த சிபியின் முகம் இப்போது பொசுக்கென வாடிப்போனது.. ஆதிராவையே ஆசையும் ஏக்கமுமாக பார்த்தான்..!! அந்தப்பார்வையில்.. விளக்கமுடியாத ஒரு விரகதாபம் விஞ்சிப் போயிருந்தது..!! திருமணமாகி இரண்டு மாதங்கள் கழிந்தும்.. ஒரே ஒரு நாள்தான் கட்டிலில் கலந்திருக்கிறார்கள்.. சிபியின் ஏக்கம் மிக இயல்பான ஒன்றுதான்..!! தளர்ந்துபோன குரலில் சலிப்பாக பேசினான்..!!

“ஆமாம்.. ஆசைதான் எனக்கு.. அடக்க முடியல.. என்ன பண்ணலாம்னு நீயே சொல்லு..!! ரெண்டு மாசத்துல ஒரே ஒரு தடவை.. எனக்கு ஆசையா இருக்கு ஆதிரா.. திரும்ப வேணும்னு தோணுது..!! சரி.. பிரச்சினைலாம் ஒருவழியா ஓய்ஞ்சு.. ஊட்டிக்கு ஹனிமூன் போறோம்னு சந்தோஷமா வந்தேன்.. நீ என்னடான்னா இங்க இழுத்துட்டு வந்துட்ட..!! என்னென்ன கற்பனைலாம் வச்சிருந்தேன் தெரியுமா.. இப்போ எல்லாம் கேன்ஸல்..!!”

பரிதாபமாக சொன்ன கணவனை பார்க்க ஆதிராவுக்கு பாவமாக இருந்தது.. அவனுடைய ஏக்கம் புரிந்ததும் இவளுக்குள் அவன் மீது ஒரு இரக்கம் பிறந்தது..!! சிபியின் முகத்தையே ஓரக்கண்ணால் குறுகுறுவென பார்த்தாள்.. பிறகு குரலை குழைவாக மாற்றிக்கொண்டு சிணுங்கலாக சொன்னாள்..!!

“எடம் மட்டுந்தான மாறிருக்கு.. எல்லாம் கேன்ஸல்னு யார் சொன்னது..??”

ஆதிரா சொன்னதன் அர்த்தம் உடனடியாக சிபிக்கு விளங்கவில்லை.. ஒரு சில வினாடிகள் கழித்துதான் புரிந்து கொண்டான்.. உடனே அவனுடைய முகத்தில் மீண்டும் அந்த பிரகாசம்..!!

“ஹேய்ய்ய்.. ஆதிராஆஆ..!!”

என்று கத்தியவாறே மனைவியை ஆசையாக அணைத்துக் கொண்டான்.. ஆதிராவும் இப்போது அவனிடமிருந்து விலகவில்லை.. அவனுடைய அணைப்புக்குள் சுகமாக அடங்கிப் போனாள்..!!

“நைட்டு..!!” என்றாள் கிசுகிசுப்பாக.

“ஏன் அவ்ளோ நேரம் வெயிட் பண்ணனும்..??” சிபி அவளுடைய கழுத்தை முகர்ந்தான்.

“நைட்டு..!!” ஆதிரா நெளிந்தாள்.

“இப்போ லைட்டா பாஸ்ட்ஃபுட்.. நைட் ஹெவியா ஃபுல்மீல்ஸ்.. ஓகேவா..??” சிபி தனது அணைப்பை இறுக்கமாக்க,

“நைட்டூடூடூ..!!!” ஆதிரா கத்தினாள்.

17

கைகளுக்குள் அடங்கியிருந்த மனைவியையே சிபி ஏக்கமாக பார்த்தான்.. பொங்கி வரும் ஆசை வெள்ளத்தை அணைபோட்டு தடுக்கிற நிலை அவனுக்கு..!! ஈரம் மினுக்கிற ஆதிராவின் இதழ்கள்.. தேனில் ஊறிய ஆப்பிள் துண்டங்களாய் அவனுக்கு காட்சியளித்தன..!! அவளுடைய முகத்தை நோக்கி குனிந்தான்.. அந்த ஆப்பிள் துண்டங்களுக்கு தனது அதரங்களை எடுத்து சென்றான்..!! கணவனின் உதடுகளை கைகொண்டு தடுத்த ஆதிரா,

“நைட்டு.. நைட்டு.. நைட்டு..!!” என்று கறாராக சொன்னாள்.

“சரி.. சரி.. சரி..!!!”

நொந்துபோனவனாய் சிபி கத்தினான்.. நீளமாக ஒரு சலிப்பு மூச்சை வெளியிட்டான்.. ஆதிராவை தனது அணைப்பில் இருந்து விடுவித்தான்..!!

“நைட்டே வச்சுக்கலாம்.. பாஸ்ட்ஃபுட் வேணாம்.. ஃபுல்மீல்ஸே சாப்பிட்டுக்குறேன்..!!” செல்லக்கோபத்துடன் சொன்னவன், மெத்தையில் போய் மீண்டும் விழுந்தான்.

“ஹாஹாஹாஹா..!!” ஆதிரா சிரித்தாள்.

“சிரிக்காத.. சீக்கிரம் குளிச்சுட்டு வா..!! அந்தப்பசிக்கு நைட்டுத்தான் சாப்பாடுன்னு சொல்லிட்ட.. வயித்துப் பசிக்காவது கொஞ்சம் குயிக்கா சாப்பிடலாம்..!!” சற்றே எரிச்சலுடன் சொல்லிவிட்டு இமைகளை மூடிக்கொண்டான்..!!

அந்த அறையில் அட்டாச்ட் பாத்ரூம் இல்லை.. கீழ்த்தளத்தில் உள்ள பொது குளியலைறையைத்தான் உபயோகித்துக் கொள்ள வேண்டும்..!! ஜிப் இழுத்து பெட்டியை திறந்த ஆதிரா.. உள்ளிருந்த பூந்துவாலையை எடுத்து தோளில் போட்டுக் கொண்டாள்.. மாற்று உடை, சோப்பு, ஷாம்பெல்லாம் அள்ளிக்கொண்டு அறையை விட்டு வெளியேறினாள்..!! படியிறங்கி கீழே வந்து.. விசாலமான அந்த ஹாலை கடந்து.. அடுத்த முனையில் இருந்த குளியலறைக்குள் புகுந்து கொண்டாள்..!!

வெளியாடைகளை களைந்தாள்.. உள்ளாடைகளுடன் நின்றாள்.. கூந்தலை கட்டி வைத்திருந்த ஹேர்பேண்டை உருவி கையிலெடுத்தாள்.. விரல்கள் கோர்த்து முடியை பிரித்து விட்டுக் கொண்டாள்..!! வனக்கொடி பிடித்து வைத்திருந்த வெந்நீருடன் குளிர்நீர் கொஞ்சம் கலந்து.. மிதமான வெப்பத்துக்கு குளிநீரை மாற்றினாள்.. சற்றே உயரமான அந்த முக்காலியில் அமர்ந்து, நிதானமாக நீராட ஆரம்பித்தாள்..!!

உடலுக்கு சோப்பு போட்டு முடித்தவள்.. முகத்துக்கும் நுரை சேர்க்க நினைக்கையில்தான்..

“க்கிர்ர்ர்ர்ர்க்க்.. க்கிர்ர்ர்ர்ர்க்க்.. க்கிர்ர்ர்ர்ர்க்க்..!!!”

அறைக்கு வெளியில் இருந்து ஏதோ சப்தம் கேட்டது..!! புருவத்தை நெரித்த ஆதிரா சோப்பு போடுவதை நிறுத்தி வைத்துவிட்டு.. தனது காதுகளை சற்றே கூர்மையாக்கி கவனமாக கேட்டாள்..!!

“க்கிர்ர்ர்ர்ர்க்க்.. க்கிர்ர்ர்ர்ர்க்க்.. க்கிர்ர்ர்ர்ர்க்க்..!!!”

அந்த சப்தம் சன்னமான டெசிபலில் தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருந்தது..!! அது என்ன சப்தம் என்று அவளால் இனம்காண முடியவில்லை.. ஒரு சில வினாடிகள் யோசித்தாள்.. பிறகு புத்தியில் எதுவும் உறைக்காமல் போகவும், அந்த சப்தத்தை அலட்சியம் செய்துவிட்டு குளியலை தொடர்ந்தாள்..!!