எனக்கு இதுக்குலாம் நேரம் இல்ல தம்பி 17 45

இவர்கள் சென்ற நேரத்தில் அசோக்கின் நண்பர்கள் மூவருமே அலுவலகத்தில் இல்லை.. ஏதோ படப்பிடிப்பு சம்பந்தமாக வெளியே சென்றிருந்தனர்..!! அவர்களிடம் வேலை செய்கிற அசிஸ்டன்ட்கள்தான்.. சிஸ்டத்தில் ஏதோ கேம்ஸ் ஆடியபடி ஹாயாக அமர்ந்திருந்தனர்..!!

அசோக் அவர்களிடம் சென்று ஏதோ ஃபைல் பற்றி கேட்க.. அவர்களில் ஒருவன் மேஜை ட்ராவை கைகாட்டினான்..!! மேஜையை அணுகிய அசோக் ட்ராவை திறந்தான்.. உள்ளே கைவிட்டு, அந்த ஃபைல் அடங்கிய மெமரி ஸ்டிக்கை தேடினான்..!!

அதேநேரம்.. கைகளை மார்புக்கு குறுக்காக கட்டியிருந்த மும்தாஜ்.. காத்திருக்கிற நேரத்தில் அந்த அறையை சுற்றும் முற்றும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தாள்..!! சுவற்றில் ஒட்டியிருந்த அந்த கவிதை காகிதம் அவளுடைய கண்ணில் பட்டது.. ஒரு ஆர்வத்துடன் அந்தக்கவிதையை வாசிக்க ஆரம்பித்தாள்..!!

அகப்பொருளுல் ஒன்றினை..
முதற்பொருள் செய்த மூடா..!!
உரிப்பொருளுல் ஒன்றானபின்..
இறுதிப்பொருள் செய்த இராட்சசா..!!

உந்துதல் தணிக்கவே..
முகர்ந்தாயோ என் புணர்புழை..??
வெந்து எரியுதடா..
வெட்டி எறிந்திடவோ..??

நரமாமிசத்துக்குட்புறம் நரம்புண்டு..
நரம்புக்குள்ளோடும் உதிரமுண்டு..
உதிரத்துக்குள்ளாடும் உணர்வுமுண்டு..
அறிவாயோ நீ அற்பப்பதரே..??

புறப்பொருள் போதுமோடா..
போகப்பொருள் கசந்தேனோடா..
கருப்பொருள் ஒன்றிருக்குதடா..
காவுக்காய் காத்திருக்குதடா..!!

“ம்ம்.. கவிதை நல்லாருக்கு..!!” மும்தாஜ் திடீரென சொல்ல, மேஜை ட்ராவுக்குள் கவனத்தை தொலைத்திருந்த அசோக், இப்போது தலையை நிமிர்ந்து பார்த்தான்.

“ஓ.. பிடிச்சிருக்கா..??” என்று கேட்டவாறே மெலிதாக புன்னகைத்தான்.

“எஸ்.. ரொம்ப ரொம்ப..!! எழுதினது யார்னு தெரிஞ்சுக்கலாமா..??”

“வேற யாரு.. நான்தான்..!!” அசோக்கின் குரலில் ஒருவித குறும்பு.

“ஹாஹா.. சான்ஸே இல்ல.. சத்தியமா இது நீங்க எழுதினது கெடையாது..!!” மும்தாஜ் உறுதியான குரலில் சொன்னாள்.

“எ..எப்படி சொல்றீங்க..??” அசோக் சற்றே புருவத்தை நெறித்தவாறு கேட்டான்.

“ஒரு பொண்ணோட வலி அப்படியே அப்பட்டமா தெரியுது.. ஒரு ஆம்பளையால இந்த அளவுக்கு அந்த வேதனையை உணர்ந்து எழுதிருக்க முடியாது..!! அந்த வார்த்தைகள்ல தெரியிற கோவமும்.. அந்த அர்த்தத்துல தெறிக்கிற வீரியமும்.. கண்டிப்பா இதை எழுதினது ஒரு பொண்ணாத்தான் இருக்கணும்னு தோணுது..!!”

மும்தாஜ் அந்த மாதிரி சொன்னதுமே.. அசோக்கின் மனதில் ஒரு அதிர்வலை.. அவனது மூளையில் ஒரு மின்னல் வெட்டு..!! ஃபைல் தேடிக்கொண்டிருந்த அவனது கவனம் சிதறி.. வேறொரு யோசனையில் சென்று குவிய ஆரம்பித்தது..!! மும்தாஜ் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தாள்..!!