எனக்கு இதுக்குலாம் நேரம் இல்ல தம்பி 13 63

அசோக் வண்டியை ஓட்டிக்கொண்டே.. தன் மனதில் இருக்கிற விஷயத்தை சாலமனுக்கு விளக்கி சொன்னான்..!! சில நாட்களுக்கு முன்பு, மீரா அசோக்கிடம் சொன்ன அந்த விஷயம்.. அவளையும் அறியாமலே அவளைப்பற்றி உளறியிருந்த அந்த விஷயம்.. அவளுடைய வீட்டுக்கு எதிரே கவாஸாக்கி அட்வர்டைஸ்மன்ட் போர்ட் வைக்கப்பட்டிருக்கிற விஷயம்..!! அசோக்தான் அந்த விஷயத்தை ஆர்வமாகவும், ஆனந்தமாகவும் சொன்னானே தவிர.. சாலமன் எல்லாவற்றையும் அசுவாரசியமாகவும், அவநம்பிக்கையாகவுமே கேட்டுக் கொண்டான்..!!

மேலும் ஒரு அரை மணி நேரம் கழித்து..!! அசோக்கும் சாலமனும், பாலாஜி அட்வர்டைஸிங் அலுவலகத்துக்குள்.. மோகன்ராஜின் பிரத்தியேக அறைக்குள் அமர்ந்திருந்தனர்..!! அவர் தனது லேப்டாப் திரையையே வெறித்துக் கொண்டிருக்க.. இவர்கள் அவருடைய முகத்தை வெறுமனே பார்த்துக் கொண்டிருந்தனர்..!! அசோக்தான் இப்போது சற்று பொறுமையில்லாதவனாய் சொன்னான்..!!

“கொஞ்சம் சீக்கிரம் ஸார்..!!”

“இருடா.. மெயில் பாக்ஸ்ல வச்சிருக்கேன்.. ஓப்பன் ஆயிட்டு இருக்கு..!!”

அமர்த்தலாக சொன்ன மோகன்ராஜ், மேலும் ஒரு அரைநிமிடம் எடுத்துக் கொண்டார். அப்புறம்,

“ம்ம்.. இந்தா..!!”

என்றவாறே லேப்டாப்பை அசோக்கின் பக்கமாக திருப்பி வைத்தார். அசோக் அந்த லேப்டாப்பை ஒருவித அவசரத்துடன் தனக்கு நெருக்கமாக இழுத்தான். திரையில் விரிந்திருந்த அந்த டேடா ஃபைலை கவனமாக பார்வையிட்டான். மோகன்ராஜ் ஒரு சிகரெட் பற்ற வைத்துக் கொண்டார். புகை வழிகிற வாயுடனே சொன்னார்.

“சென்னை ஸிட்டி ஃபுல்லா.. மொத்தம் இருபத்தஞ்சு எடத்துல.. அந்த மாதிரி ஃப்ளக்ஸ் போர்ட் வச்சிருக்கோம்..!!”

அவர் கேஷுவலாக சொல்ல.. அதைக்கேட்ட சாலமனுக்கோ அடிவயிற்றில் புளி கரைத்தது..!! உடைந்துபோன குரலில்.. மிக பரிதாபமாக சொன்னான்..!!

“இருபத்த்…தஞ்சு எடமா..?? அடங்கொன்னியா..!!! ஒரு போர்டை சுத்தி.. கொறைஞ்சது ஒரு ஆயிரம் ஜன்னலாவது இருக்குமே..?? ஒரு நாளைக்கு இருநூறு ஜன்னல்னு வச்சுக்கிட்டா கூட.. ஒரு போர்டுக்கு அஞ்சு நாளு.. இருபத்தஞ்சு போர்டுக்கு எழுபத்தஞ்சு நாளு..!! ஷ்ஷ்ஷ்ஷப்பா.. இப்போவே எனக்கு கண்ணைக்கட்டுதே..!!” புலம்பிய சாலமனை கண்டுகொள்ளாமல், அசோக் மோகன்ராஜிடம் கேட்டான்.

“இது மொத்த லிஸ்ட்தான ஸார்..??”

“ஆமாம்..!!”

“நான் உங்கட்ட சொன்னன்ல.. அந்த ரெயின் பேக்ரவுண்ட் ஸ்டில்..!! அந்த ஸ்டில் இருக்குற லிஸ்ட் மட்டும் எனக்கு போதும்..!!”

“ஓ..!! இரு வர்றேன்..!!”

சொன்ன மோகன்ராஜ் தனது இருக்கையை விட்டு எழுந்து வந்தார். அமர்ந்திருந்த அசோக்கிற்கு பின்புறமாக வந்து நின்றவர்,

“மொத்தம் நாலு விதமான ஸ்டில்ஸ் யூஸ் பண்ணினோம்.. அதுல நீ சொன்ன ஸ்டில் இருக்குற போர்ட்னா..”

என்று முனுமுனுத்தவாறே, லேப்டாப்பின் கீபோர்டை இரண்டு தட்டு தட்டினார். திரையில் தெரிந்த லிஸ்ட் இப்போது ஃபில்டர் செய்யப்பட்டு எண்ணிக்கை குறைந்தது..!!

“பதினொன்னு வருது..!!”

“ஹ்ம்ம்..!! லாஸ்ட் டூ வீக்ஸ்ல எரக்ட் பண்ணின போர்ட்லாம் லிஸ்ட்ல இருந்து எடுத்துடுங்க ஸார்..!! அதுலாம் வேணாம்..!!”

“எரக்ட்ஷன் கம்ப்ளீட்டட் டேட் இங்க இருக்கு பாரு..!!”

சொன்ன மோகன்ராஜ் லேப்டாப்பை மேலும் இரண்டு தட்டு தட்ட, எண்ணிக்கை இப்போது இன்னும் குறைந்தது.

“எயிட்..!!” என்றார்.

“Eight is also huge number மாப்ள..!!” சாலமன் இன்னுமே திருப்தியடையாமல் புலம்பலாக சொல்ல, அசோக் இப்போது அவனை ஏறிட்டு முறைத்தான்.

“ஏய்.. வாயை வச்சுட்டு கொஞ்ச நேரம் கம்முனு இருக்க மாட்ட..??”

எரிச்சலாக சொன்னவன், இப்போது தனது சட்டைப்பைக்குள் கைவிட்டு அந்த மேப்பை எடுத்தான். டேபிளில் விரித்து வைத்தான். ஸ்டாண்டில் இருந்து பேனா ஒன்றை உருவிக் கொண்டான். லேப்டாப் திரையையும், தான் வரைந்து வைத்திருந்த அந்த மேப்பையுமே மாற்றி மாற்றி பார்த்தான். அந்த மூன்று வழித்தடங்களில் அமைந்த ஏரியாக்களை உன்னிப்பாக பார்வையிட்டான். அந்த சிவப்பு எல்லையை தாண்டிய பகுதிகளை மட்டுமே கணக்கில் எடுத்துக் கொண்டான். மோகன்ராஜும், சாலமனும் ஒருவித குழப்பத்துடன் அசோக்கையே பார்த்துக் கொண்டிருந்தனர்.

ஒரு அரை நிமிடம் கூட ஆகி இருக்காது.. அசோக்கின் முகத்தில் திடீரென அப்படி ஒரு பிரகாசம்.. அவனுடைய உதடுகளில் ஒரு பெருமிதம் கலந்த வெற்றிப்புன்னகை..!! அந்த எட்டு இடங்களில் ஒன்று மட்டுமே.. அந்த மூன்று வழித்தடங்களில் சிவப்பு கோட்டுக்கு மேலாக அமைந்த ஒரு இடத்துடன் மேட்ச் ஆனது..!! ‘மாட்னடி மவளே..!!’ என்று முனுமுனுத்தவாறே, அசோக் மேப்பில் அந்த இடத்தை மார்க் செய்து வட்டமிட்டான்..!! ‘அட்வர்டைஸ்மன்ட் போர்டை பார்த்தே எனக்கு நீ அல்வா குடுத்தல.. இப்போ அதே அட்வர்டைஸ்மன்ட் போர்டை வச்சு நான் உன்னை அமுக்கி புடிச்சுட்டேன் பாரு..’ என்று மனதுக்குள் கர்வமாக சொல்லிக்கொண்டான்..!!

“மீராவோட பஸ் ரூட் செவன்டீன் மச்சி.. அவ வீடு சிந்தாதிரிப்பேட்டைல இருக்குது.. அதுவும்.. Just opposite to our advertisement board.. !!”

குரலிலும் முகத்திலும் ஒருவித பெருமிதத்துடன் அசோக் சொல்ல, மோகன்ராஜூம் சாலமனும் இப்போது அவனை பிரமிப்பாக பார்த்தார்கள்..!!

அசோக்கும் சாலமனும்.. வடபழனியில் இருந்து சிந்தாதிரிப்பேட்டை செல்வதற்கு.. மேலும் ஒரு மணி நேரம் ஆனது..!! அந்த ஃப்ளக்ஸ் போர்ட் வைக்கப்பட்டிருந்த.. நான்கு அடுக்குகள் கொண்ட.. அந்த தனியார் கட்டிடத்தின் மொட்டைமாடியை அடைய.. மேலும் ஐந்து நிமிடங்கள் ஆயின..!! இருவரும் போர்டை ஒருமுறை சுற்றி வந்து.. சுற்றுப்புறத்தை கவனமாக நோட்டமிட்டனர்..!!

ஒரு பக்கம் குடிசையும் கூவமுமாய் வறுமையான பகுதி.. இன்னொரு பக்கம் மாளிகை வீடுகளும் மரநிழலுமாய் வசதியான ஏரியா..!! தூரத்தில் தெரிந்த ரயில்வே ட்ராக்கில்.. மெட்ரோ ரயில் ஒன்று.. ‘ஊஊஊஊ’ என்று ஊளையிட்டவாறே.. உற்சாகமாக ஊர்ந்து சென்று கொண்டிருந்தது..!! அந்த ரயிலின் உற்சாகம் அசோக்கிடமும் எக்கச்சக்கமாய் பொங்கி வழிந்தது..!!

“அந்த குடிசை ஏரியாலாம் லாஸ்டா பாத்துக்கலாம் மச்சி.. மொதல்ல இந்தப்பக்கம் கவர் பண்ணிடுவோம்..!!” என்றான் சாலமனிடம்.

“ஹ்ம்ம்.. இது என்னவோ எனக்கு வேலைக்காவுற மாதிரி தெரியல..!!” சாலமன் இன்னுமே சலிப்புடன் சொன்னான்.

Updated: June 15, 2021 — 1:04 pm