எனக்கு இதுக்குலாம் நேரம் இல்ல தம்பி 10 38

“உன்கூட சேர்ந்து சிக்கிக்கிறதா இருந்தா.. இந்த சின்ன ஃப்ரேம் கூட எனக்கு சொர்க்கலோகம் மாதிரிதான்..!!” என்று கவிதையாக பேசினாள்.

ஆனால்.. தனது மனதில் இருக்கிற குழப்பத்தை பற்றி மட்டும் அவன் பேச்செடுத்தால்.. சரியான பதில் சொல்லாமல், சம்பந்தமில்லாமல் பேசி.. அவனை அலைக்கழிக்கிறாள்..!!

இப்போது.. ஃபோட்டோ எடுத்து முடித்ததும்.. எப்படி வந்திருக்கிறது என தனது செல்ஃபோன் டிஸ்ப்ளே பார்த்த மீரா.. முகத்தில் ஒரு புன்சிரிப்புடனும், குரலில் ஒரு குறும்புடனும்..

“கொஞ்சமாவது சிரிச்சிருக்கானா பாரேன்.. மூஞ்சியை அப்படியே உர்ருன்னு வச்சிருக்கான்.. உர்ராங்குட்டான் மாதிரி..!!” என்றாள்.

“நான் கேட்டதுக்குலாம் நீ பதில் சொல்ற வரைக்கும், நான் இப்படித்தான் இருப்பேன்.. போ..!!”

அசோக்கின் குரலில் ஒரு உச்சபட்ச உறுதி தெரிந்தது. இன்று எப்படியாவது இவளை பேச வைத்துவிடவேண்டும் என்ற தீவிரம் தெரிந்தது. மலர் உதடுகளில் ஒரு மயக்கும் புன்னகையுடன், மீரா அசோக்கின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள். அப்புறம் சேரில் இருந்து எழுந்தவாறே..

“ஹ்ம்ம்.. கெளம்பலாம் வா..!!” என்றாள். உடனே அசோக் கடுப்பாகிப் போனான். அவள் முகத்தை ஏறிட்டு சீற்றமாக கேட்டான்.

“என்ன நெனச்சுட்டு இருக்குற உன் மனசுல..?? நானும் காலைல இருந்து பைத்தியக்காரன் மாதிரி கேட்டுட்டு இருக்கேன்.. நீ என்னடான்னா… சும்மா சும்மா..”

“ஷ்ஷ்ஷ்.. நான்தான் சொல்றேன்னு அப்போவே சொல்லிட்டன்ல..??”

“சொல்றேன் சொல்றேன்னுதான் காலைல இருந்து சொல்லிட்டு இருக்குற.. ஆனா சொல்ற மாதிரி தெரியல..!! எனக்கு இப்போவே தெரிஞ்சாகனும் மீரா.. உன் மனசுல என்னலாம் இருக்குன்னு, இன்னைக்கு எனக்கு தெளிவா தெரிஞ்சாகனும்.. இல்லனா எனக்கு தலையே வெடிச்சிடும்..!! உக்காரு.. சொல்லிட்டு கெளம்பு..!!”

“ப்ச்.. சொல்றேன்டா..!! ஆனா இங்க வேணாம்..!!”

“வேற எங்க..??”

“எனக்கு மனசு விட்டு நெறைய விஷயம் பேசனும்.. அதுக்கு இந்த இடம் சரியில்ல..!! வேற எங்கயாவது தனியா.. டிஸ்டர்ஃபன்ஸ் இல்லாத எடத்துக்கு போயிடலாம்..!!”

“எங்க போகலாம்ன்ற..??”

“இங்க.. சத்யா கார்டன் பக்கத்துல ஒரு பார்க் இருக்குல.. அங்க போயிடலாம்..!!”

அசோக் சிலவினாடிகள் அவளுடைய முகத்தையே பார்த்தவாறு யோசனையில் இருந்தான். பிறகு ஒரு முடிவுக்கு வந்தவனாய் சேரில் இருந்து எழுந்தான்.

“போலாம் வா..!!’ என்றுவிட்டு முன்னால் நடந்தான்.

அடுத்த பத்து நிமிடங்களுக்கெல்லாம்.. அசோக்கின் பைக் சத்யா கார்டன் நோக்கி மிதமான வேகத்தில் விரைந்துகொண்டிருந்தது..!! என்றும் அசோக்கின் தோளைப் பற்றிக் கொள்கிற மீரா.. இன்று அவனுடைய இடுப்பில் கைபோட்டு இறுக்கியிருந்தாள்.. அவனுடைய முதுகில் முகம் சாய்த்து படுத்திருந்தாள்..!! வாகனங்களுக்கு இடையில் புகுந்து வண்டியை செலுத்திக்கொண்டிருந்த அசோக்.. தன் இடையை வளைத்திருக்கிற காதலியின் வளைக்கரத்தை சற்றே பெருமிதமாக பார்த்தான்..!! தான் உருவாக்கிய விளம்பரப்படம் சட்டென அவனுடைய நினைவுக்கு வந்தது.. அவனது மனதில் இருந்த குழப்பம் எல்லாம் அந்த கணத்தில் மறந்து போக.. உள்ளமெங்கும் ஒரு உற்சாக ஊற்று பீறிடுவதை அவனால் உணர முடிந்தது..!! அடக்க முடியாத புன்னகையை அதரங்களுக்கு தந்தவன்.. அழகு கொஞ்சும் அவளது முகத்தை கண்ணாடியில் தேடினான்..!! அவனுடைய முதுகில் புதைந்திருந்த மீராவின் முகம்.. அந்த கண்ணாடியில் காணக் கிடைக்கவில்லை..!!

அசோக்கின் முகம் பூரிப்பில் திளைத்துக்கொண்டிருந்த அதே நேரம்.. அவனது பின்புறம் படர்ந்திருந்த மீராவின் முகம் வேதனையில் துடித்துக் கொண்டிருந்தது..!! அவளுடைய கண்களில் கண்ணீர் தழும்பிக் கொண்டிருந்தது.. பார்வை ஏதோ ஒரு சூனியத்தை வெறித்துக் கொண்டிருந்தது.. மூக்கு சப்தமெழுப்பாமல் விசும்ப.. உதடுகள் கட்டுக்கடங்காமல் படபடத்தன..!! தாங்க முடியாத துயரத்துக்கு ஆளாகி.. தத்தளிப்பவள் போல காணப்பட்டாள்..!! அடிக்கடி ஒற்றைக்கையால் கண்களை துடைத்துக்கொண்டவள்.. அவ்வப்போது அசோக்கே உணராதவண்ணம், அவனது முதுகில் மென்மையாக முத்தம் பதித்தாள்..!! ஆகாயத்தில் ஒரு பருந்து.. சிறகசைத்து பறந்து.. அவர்கள் செல்கிற திசையிலேயே விரைந்தது..!!

1 Comment

  1. ?❤️❤️❤️❤️❤️❤️???

Comments are closed.