எனக்கு இதுக்குலாம் நேரம் இல்ல தம்பி 3 74

“ஹாஹாஹாஹா..!! ஹையோ ஹையோ..!! ஹ்ம்ம்…. உங்களைப் பாத்தா காமடியாத்தாண்டா இருக்கு.. சொன்னா எவனாவது கேக்குறீங்களா..?? அப்படி எதுக்கு மானங்கெட்டு லவ் பண்ணனும்.. அப்புறம் இப்படி மனசு உடைஞ்சு உக்காந்திருக்கணும்..?? ம்ம்..??” சிரிப்புடன் சொன்னவன் பிறகு கிஷோரின் பக்கமாய் திரும்பி,

“ஹ்ம்ம்.. நீ ஏண்டா பேயறைஞ்சவன் மாதிரி உக்காந்திருக்க..??” என்று கேஷுவலாக கேட்டான். ஏற்கனவே அசோக்கை முறைத்துக் கொண்டிருந்த கிஷோர் இப்போது இன்னும் அதிகமாக முறைத்தான்.

“ஏன்..?? உனக்கு தெரியாதா..??” என்று இறுகிப்போன குரலில் கேட்டான்.

கிஷோர் கேட்டுக்கொண்டிருக்கும்போதே, அவனுடைய செல்போன் கிணுகிணுத்தது. உடனே பதறிப்போய் அந்த செல்போனை எட்டி எடுத்தான். டிஸ்ப்ளே பார்த்தவன், ‘ஹையோ.. கடவுளே..!!’ என்று தலையை பிடித்துக் கொண்டான். அழுவது போல பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு, கால் பிக்கப் செய்து காதில் வைத்தான்.

“ஹலோ.. சொல்லும்மா..!!” என்றான் பம்மிக்கொண்டு.

“…………………………”

“ஐயோ.. என்ன சங்கிம்மா நீ..?? இன்னுமா என் மேல உனக்கு நம்பிக்கை இல்ல..??”

“…………………………”

“இல்லம்மா.. இல்லம்மா..!! சத்தியமா நான் அப்படி சொல்லவே இல்ல..!!”

“…………………………”

“ஹையோ.. எத்தனை தடவை சொல்றது..?? அந்த வார்த்தையை நான் யூஸ் பண்ணவே இல்ல.. உன் அண்ணன்தான் எக்கச்சக்கமா எக்ஸ்ட்ரா பிட்டு போட்டு சொல்லிருக்கான்..!! என்னை நம்பு சங்கிம்மா.. ப்ளீஸ்..!!”

அடுத்த முனையில் சங்கீதா அதன்பிறகும் அவனை விடவில்லை போலிருக்கிறது. வார்த்தைகளை தாளித்து அவன் மீது கொட்டிக்கொண்டே இருந்திருக்க வேண்டும். கிஷோர் அவஸ்தையாய் நெளிந்தவாறே, நண்பர்களின் முகத்தை மாறி மாறி பார்த்தான். அப்புறம் ஏதோ திடீர் யோசனை தோன்றியவனாய், செல்போனை காதில் இருந்து சற்று தள்ளிப் பிடித்துக் கொண்டான்.

“ஹலோ.. ஹலோ..” என்று போலியாக கத்தினான்.

“…………………………”

“சங்கிம்மா.. நான் ட்ராவல் பண்ணிட்டு இருக்கேன்மா.. இங்க சிக்னல் சரியா கெடைக்கல.. நான் அப்புறமா பேசவா..??”

என்று சொல்லிவிட்டு பட்டென காலை கட் செய்தான். செல்போனை ஸ்விட்ச் ஆஃப் செய்யாமல், நெட்வொர்க் கனெக்டிவிட்டி மட்டும் இல்லாமல் போகுமாறு, செட்டிங் மாத்தினான். செல்போனை தூக்கி ஓரமாய் போட்டுவிட்டு, ‘யப்பாஆஆ…!!’ என்று சலிப்பும், நிம்மதியுமாய் பெருமூச்சு விட்டான். தலையை இப்படியும் அப்படியுமாய் பரபரவென உலுக்கிக் கொண்டான். சாலமனை ஏறிட்டு பரிதாபமான குரலில் சொன்னான்.

“காலைல ஆறு மணில இருந்துடா மச்சி.. நான் ஸ்டாப்பா ஓடிட்டு இருக்கு இந்த நான்சன்ஸ்..!! ஒரு மனுஷன் எவ்வளவுதான்டா தாங்குறது..?? ச்ச…!!! ஒரே வெறுப்பா இருக்குடா..!! எல்லாம் இந்தப் பன்னாடையால…”

என்று அசோக்கை கை நீட்டி அவன் வெறுப்பாக கத்திக் கொண்டிருக்கும்போதே, டேபிள் மீதிருந்த டெலிபோன் இப்போது ‘கிர்ர்ர்ர்.. கிர்ர்ர்ர்..’ என்று அலறியது. கிஷோர் மீண்டும் மிரண்டு போனான். கிலியடித்த மாதிரி அந்த டெலிபோனையே பார்த்தான். அப்புறம் வேணுவிடம் திரும்பி அவசரமாய் சொன்னான்.

“டேய் மச்சி.. நீ எடுத்து பேசுடா…!! சங்கியாத்தான் இருக்கும்.. நான் இங்க இல்லைன்னு சொல்லிரு.. எங்க போயிருக்கேன்னு கேட்டா.. எங்கயாவது ஈரோடு பக்கம் தூத்துக்குடி பக்கம் போயிட்டேன்னு சொல்லிரு..!!”

வேணு கால் அட்டன்ட் செய்தான். ரிசீவரை காதில் வைத்து ‘ஹலோ..’ என்றான். ஓரிரு வினாடிகளுக்கு அப்புறம், ரிசீவரை காதில் இருந்து விலக்கி, அதன் வாயைப் பொத்திவிட்டு கிஷோரிடம் இளிப்பாக சொன்னான்.

“சங்கி இல்ல மச்சி.. அந்த மோகன்ராஜ் மங்கி..!!”

1 Comment

  1. Story Nalla Irukku , Konjam Naarayaa Elluthunga Admin !

Comments are closed.