எனக்கு இதுக்குலாம் நேரம் இல்ல தம்பி 3 73

“என்ன..??”

என்பது போல பார்த்தான். அவன் அவ்வாறு பார்த்ததும், இப்போது சங்கீதா தனது முகத்தை வேறெங்கோ திருப்பிக் கொண்டாள். சற்றே வீராப்பான, விறைப்பான குரலில் சொன்னாள்.

“ஸாரி..!!”

இப்போது அசோக்குக்கு மனதில் சில்லென்று ஒரு உணர்வு. அந்தப்பக்கமாய் திரும்பி நிற்கிற தங்கையையே அன்புடனும், உதட்டில் ஒரு புன்னகையுடனும் பார்த்தான். ஏதோ சொல்ல வாயெடுத்தான். அதற்குள்ளாகவே சங்கீதாவிடம் கிஷோர் ஃபோனில் ஏதோ கேட்டிருப்பான் போலிருக்கிறது. அசோக்கின் கையை பிடித்த பிடியை விடாமலே, சங்கீதா ஹெட்ஃபோனில் கத்த ஆரம்பித்தாள்.

“என்னது பரவால சங்கிம்மாவா..?? அப்படியே செவுளை சேர்த்து விட்டேன்னா..!! உன்கிட்ட போய் ஸாரி கேக்குறதுக்கு எனக்கு என்ன லூஸா பிடிச்சிருக்கு..?? நான் இங்க என் அண்ணன்ட்ட ஸாரி கேட்டேன்..!! உன்னை..????? நீ கொஞ்சம் வெயிட் பண்ணு.. நான் இங்க பேசிட்டு வரேன்..!! லைன்லேயே இரு.. கட் பண்ணிடாத.. புரியுதா..????”

கத்திமுடித்தவள், காதில் இருந்து ஹெட்போனை படக்கென்று கழற்றினாள். அப்புறமும் ஒருமாதிரி ரெஸ்ட்லசாய் அப்படியும் இப்படியுமாய் தலையை அசைத்தாள். பிறகு அசோக் பக்கமாய் திரும்பி பட்டென மீண்டும் சொன்னாள்.

“ஸாரிடா..!!”

“எதுக்கு ஸாரி..??”

“நே..நேத்து.. கோ..கோவத்துல.. நான் கொஞ்சம் ஓவரா பேசிட்டேன்..!! என்னதான் இருந்தாலும் நான் அப்படி பேசிருக்க கூடாது.. நான் பேசினது தப்புன்னு லேட்டாத்தான் எனக்கு புரிஞ்சது..!! ஸோ.. ஸாரி.. மன்னிச்சுடு..!!”

தன் முகத்தையே ஏறிடாமல், தலையை அப்படியும் இப்படியுமாய் சிலுப்பிக்கொண்டு, குரலில் மட்டும் குற்ற உணர்ச்சியுடன், தங்கை தன்னிடம் மன்னிப்பு கேட்டவிதம், அசோக்கிற்கு சிரிப்பை வரவழைத்தது. உதடுகள் பிரித்து மெலிதாக புன்னகைத்தான். அப்புறம் சற்றே குறும்பான குரலில் சொன்னான்.

“பரவால போ.. மன்னிச்சுட்டேன்..!!” அசோக் அவ்வாறு ஏளனமாக சொன்னவிதம், சங்கீதாவுக்கு சற்று எரிச்சலை கிளப்பியிருக்க வேண்டும்.

“ஆனா ஒன்னு மவனே.. தங்கச்சி ஸாரி கேட்டுட்டா.. நமக்கு பணிஞ்சு போயிட்டா.. இனி நம்ம வழிக்கே வரமாட்டா… அப்படிலாம் தப்பு கணக்கு போட்டுடாத..!!”

“ஓஹோ..!! சரி சரி… நீயும் அப்படிலாம் எதும் தப்பா நெனச்சுடாத சங்கு.. அண்ணன்ட்ட ஸாரி கேட்டாச்சு.. அவன் அப்படியே உருகிப் போயிட்டான்.. இனிமே நம்மள வம்பிழுக்கவே மாட்டான்..!! அப்படிலாம் மனசுல ஏதாவது நெனைப்பு இருந்தா.. இப்போவே அதை அணுகுண்டு போட்டு அழிச்சிடு..!!”

அசோக் பதிலுக்கு பதில் பேசவும், சங்கீதா அவனையே சில வினாடிகள் உர்ரென்று முறைத்துப் பார்த்தாள். அப்புறம் முகத்தை அசிங்கமாக சுளித்தவாறு,

“ஏ ச்சே.. போடா..!!” என்று அவனை பிடித்து தள்ளி விட்டாள்.

“அடச்சீய்.. போடீ..!!”

அசோக்கும் பதிலுக்கு கத்திவிட்டு, அறை வாசலை நோக்கி நடந்தான். அவன் அந்தப்பக்கம் நகர்ந்ததுமே, சங்கீதா ஹெட்ஃபோனை காதில் மாட்டிக்கொண்டு, பாதியில் விட்ட வேலையை மீண்டும் தொடர்ந்தாள்.

“டேய்…!! இருக்கியா..?? ம்ம்ம்… என்னது என்னது…??? ஏய்.. இரு இரு இரு.. நீ மொதல்ல இருந்து வா.. ப்ச்.. மொதல்ல இருந்து வா..!! நான் உன்கிட்ட ஐ லவ் யூ சொல்றதுக்கு முன்னாடி.. நீ என் பின்னாடி நாய் மாதிரி நாக்கை தொங்கப்போட்டுட்டு திரிஞ்சியா இல்லையா..?? அதுக்கு மொதல்ல ஆன்சர் சொல்லு இப்போ.. கமான்.. பேசு..!!”

அசோக் அந்த அறையை விட்டு வெளியே வந்தான். வெளியே வந்ததுமே ‘யப்பாஆஆ..’ என்று தலையை ஒருமுறை உலுக்கிக்கொண்டான். தங்கை கிஷோரை பின்னி பெடலெடுப்பாள் என்று அவனுக்கு முன்பே தெரியும். ஆனால் எந்த அளவிற்கு என்பதை இன்றுதான் கண்கூடாக காண்கிறான். தனக்கென்று ஒரு பெண் தேர்ந்தெடுக்கும்போது, தங்கை மாதிரி ஒரு ராட்சஸியிடம் மட்டும் சிக்கிக்கொள்ளக்கூடாது என்று நினைத்துக் கொண்டான்.

1 Comment

  1. Story Nalla Irukku , Konjam Naarayaa Elluthunga Admin !

Comments are closed.