லவ் டுடே 261

“ தம்பி நான் ஒரு பிசினஸ் மேன். எனக்கு மனுஷங்களை பத்தி நல்லா தெரியும். எவன் ஒருத்தனுக்கு பணத்தாசை இல்லையோ அவன் 99 சதவீதம் நல்லவனா தான் இருப்பான். அந்த வகைல நீங்க நல்லவன்தான். அதனால தான் நான் உங்கிட்ட கேக்குறேன். ப்ளீஸ். “

சிரித்து கொண்டே “ சரிங்க சார். என் பேரு மதி. “

“ சரி மதி. ரொம்ப நன்றி. “ அவர் சொல்லி கொண்டிருக்க அங்கே வந்த வாசுகி அவன் முகத்தை கூட பார்க்காமல் அவர்கள் அருகே அமர்ந்தாள்.

“ சாப்பிட்டியாமா. “

“ சாப்பிடேங்க. “ அவள் மேற்கொண்டு எதுவும் பேசாமல் இருக்க அந்த இடம் அமைதியானது.

,மதி அதற்கு மேல் அங்கு இருந்து அவர்களுக்கு தர்ம சங்கடத்தை கொடுக்க விரும்பாமல் அங்கிருந்து எழுந்து “ சரிங்க சார். நான் கிளம்புறேன் சார். வரேன் மேடம்” அவள் முகத்தை கூட பார்க்காமல் அங்கிருந்து நகர்ந்தான்.

“ வாங்க மதி. “ என்று அவர் சொல்ல

“ உள்ள வாங்க எவ்ளோ நேரம் இங்கயே இருப்பீங்க “ ன்னு சொல்லி கொண்டே வாசுகி அவரது சேரை தள்ளி கொண்டு ரூமிற்கு கூடி சென்றாள்.

மதி வீட்டை விட்டு வெளியே வந்து தெருவில் வந்தான். ஒரு முறை திரும்பி அவர்களது வீட்டை பார்க்க வள்ளுவன் இல்லம் என்று வெளியே காம்பவுண்ட் சுவரில் இருந்தது. அவர் வேண்டுமானால் வல்லுவனாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் அவள் நிச்சயமாக வாசுகி தான். பெயரில் மட்டும் அல்ல குணத்திலும் தான்.

தேவதை பார்க்கும் நேரமிது.

“ நம்ம வாழ்க்கை ஒரு கிறிஸ்டோபர் நோலன் படம் மாதிரி. படம் பார்த்தா ஒண்ணுமே புரியாது, திரும்ப திரும்ப பார்த்தா தான் புரியும். அதுல எமோஷன் இருக்கும். டிவிஸ்ட் இருக்கும், நல்ல கதை இருக்கும். அதே மாதிரி தான் வாழ்க்கையும். அதுக்காக நம்ம வாழ்க்கையை திரும்ப திரும்ப வாழ முடியாது. ஆனா புரியாத இடங்களை நாம திருத்திக்கலாம். “

“ இப்போ என்னடா சொல்ல வர மதி. “

“ உனக்கு புரியலையா. “

“ சத்தியமா ஒன்னும் புரியலடா. “

“ தெளிவா சொல்றேன். புரிஞ்சிக்கோ. நேத்து TENET படம் பார்த்தேன். ஒண்ணுமே புரியல. அதே மாதிரி தான் வாழ்கையும். புரியுதா. “

“ அப்பா சாமி நீ சொல்றது ஒண்ணுமே புரியல. நீ நல்லா பேசினாவே புரியாது. இதுல புத்தக புளுவா இருக்க. உங்கிட்ட பேசி ஜெயிக்க முடியாது. ஆளை விடு. நான் என்ன கேட்குறேன். நீ என்ன சொல்ற. “

“ என்னடா கேட்ட. “

“ நம்ம பண்றது ஒரு கேவலமான தொழில். அதுல எத்தனையோ பொம்பளைங்களை நாம பார்க்குறோம். அதுல ஒருத்திய கூடவே வச்சி நீ வாழணும்னு ஆசைபடுற நீ. உனக்கு என்ன பைத்தியமா. சரி ஒத்துகிடுறேன். அவங்களுக்கு புருஷன் இல்ல தான். ஆனா உனக்கும் அவுங்களுக்கும் வயசு வித்தியாசம் எத்தனைன்னு தெரியுமா. “

“ டேய் மாப்ள சச்சினுக்கும் அஞ்சலிக்கும்… “

“ டேய் பைத்தியம். நீ ஒன்னும் சச்சின் இல்லை. அவங்களும் அஞ்சலி இல்லை. எவ்ளோ எதார்த்தமா பேசுற. உன் வேலை என்ன அவங்க வேலை என்ன. அதுவும் இல்லமா அவங்களோட உடல் தேவைகளை தீர்த்துக்க ஒரு ஆள் தேவைபடுது அவுங்களுக்கு. அதுக்கு நீ மட்டும் தான் இருக்கன்னு நினைக்காத. உன்ன விட்டா இன்னொரு ஆள். உனக்கு அது புரியுதா. “

மதிக்கு வித்யா சொன்ன அதே எதார்த்தத்தை இபோது அம்மாவசையும் சொல்வது சற்று யோசிக்கவே வைத்தது.

“ என்ன பதிலே காணோம். “

விரக்தியாக அவனை பார்த்து சிரித்தான்.

“ மாப்ள இந்த சமுதாயத்துல நாமளா பிளைட் டிக்கெட் மாதிரி. நாம நினைச்சிட்டு இருக்கோம் டிக்கெட் இருந்தா தான் உள்ள போக முடியும்னு. ஆனா உள்ள போனதுக்கு அப்றம் கிழிச்சி குப்பையா மாத்திடுவாங்கடா. நாம வெறும் பேப்பர் தான். அந்த பேப்பர்க்கு வைக்கிற பெயரை பொருத்து தான் அது பணமா குப்பையானு இருக்கு. நமக்குன்னு எங்கையாச்சும் ஒரு கஸ்தூரியோ, ஒரு இசக்கியம்மாவோ, இல்ல ஒரு காமாட்சியோ இருப்பாடா. அந்த டவுன் பஸ்ல ஏறி போயிட்டே இருக்கணும். “

“ ஒன்னு மட்டும் நல்லா புரியுது. “

“ என்ன புரியுது “

“ நேத்து நீ சூரரை போற்று பார்த்துருக்கன்னு. “

“ டேய் …….”

இருவரும் சிரிக்க அப்போது மதியின் போன் ஒலித்தது.

“ டேய் ஹவுஸ் உணர் தாத்தாடா. “

“ எடுத்து பேசு மாப்ள நான் போய் குளிச்சிட்டு வரேன். “

அட்டென் செய்து காதில் வைத்தான். “ சொல்லுங்க தாத்தா .” என்றான்.

“ தம்பி நல்லா இருக்கீங்களா. வேலை எல்லாம் எப்படி போகுது. “

“ நல்லா இருக்கேன் தாத்தா. வேலை நல்லா போகுது. “

“ அப்றம் தம்பி நீங்க எனக்கு ஒரு உதவி செய்யணுமே. “

“ சொல்லுங்க தாத்தா என்ன பண்ணனும். “

“ தம்பி கீழ் வீட்டுக்கு எங்க ஊருல இருந்து ஒரு பொன்னும் அவுங்க அம்மாவும் அங்க குடி வராங்க. நீங்க கொஞ்சம் அவுங்களுக்கு கூட இருந்து பொருளை ஏத்தி வீட்ல வச்சி ரெடி பண்ணி கொடுக்கணுமே. “

“ ஒரு பிரச்சனையும் இல்ல தாத்தா. அவுங்க எப்போ வராங்கன்னு மட்டும் சொல்லுங்க. நான் கூட இருந்து செஞ்சி கொடுக்குறேன். “

“ இல்ல தம்பி உங்களுக்கு வேலை எதாச்சும் இருக்குமா “

“ வேலை இல்லை தாத்தா. நீங்க சொல்லுங்க. “

“ அவுங்க இந்நேரம் அங்க வந்து இறங்கிருப்பாங்க. உங்களுக்கு தொந்தரவு இல்லனா இப்போ நீங்க அங்க போகலாமா. “

“ இப்போ வேலை இல்லை. நான் உடனே போய் பார்க்குறேன். “

“ ரொம்ப நன்றி தம்பி. “

“ நான் முடிச்சி கொடுத்துட்டு உங்களுக்கு கால் பண்றேன். “

“ சரிங்க தம்பி. “

அவர் போனை கட் செய்ததும் மணியை அழைத்தான். இருவரும் உடை மாற்றி விட்டு படிக்கட்டு வழியாக கீழே வர அங்கு லாரியில் இருந்து பொருள்கள் இறக்கி வைக்கப்பட்டு இருந்தது.

அங்கு இறக்கி வைத்து கொண்டிருந்த நபர்களிடம் சென்று விபரத்தை சொல்லி விட்டு இருவரும் உதவி செய்து கொண்டிருந்தனர்.

தாத்தா சொன்ன இருவரையும் மதி தேட அவர்கள் வீட்டினுள் இருப்பதாக கூறினார்.

பழைய காலத்து மரத்தினால் செய்த பீரோவை மதி, அம்மாவாசை மற்றும் மற்றொருவர் சேர்ந்து தூக்கி கொண்டு வீட்டினுள் செல்ல அங்கு ஒரு அம்மா நின்று கொண்டு ஒரு இடத்தை காண்பித்து அங்கே இறக்கி வைக்குமாறு கூறினார்.

அவர் சொன்ன இடத்தில் இறக்கி வைத்த பின்பு அவரை பார்க்க “ தம்பி நீங்க ரெண்டு பேரும் “ என்று இழுத்தார்.

“ அம்மா நான் மதி. இவன் மணி. என் பிரண்டு. தாத்தா உங்க கிட்ட சொல்லிருப்பாங்களே. அது நாங்க தான். “

“ ஒஹ்,. சரி சரி. அப்பா சொல்லிருக்காங்க. வாங்க தம்பி. தப்பா எடுத்துக்காதீங்க. இப்போ உங்களுக்கு சாப்பிட எதுவும் கொடுக்க முடியல. “

“ அய்யோ அம்மா. அதெல்லாம் ஒரு பிரச்சனையும் இல்லை. வீடை பார்த்தீங்களா. வீடு பிடிச்சிருக்கா. “

“ நல்லா இருக்கு தம்பி. ஆனா இங்க எந்த பொருள் எங்க வாங்கணும். தண்ணி வசதி எப்படி இதெல்லாம் என்ன பண்றதுன்னே தெரியல. “

“ அம்மா அதை பத்தி நீங்க கவலையே பட வேண்டாம். தண்ணி கேன் போடுறதுக்கு ஆள் இருக்கு. மளிகை பொருள் வாங்க எதிர்த்த வீட்ல இருக்குற கமலா அக்கா கிட்ட சொல்லிடுறேன். அவுங்களை துணைக்கு கூப்பிட்டுகோங்க. நீங்க இங்க எந்த பயமும் இல்லமா நீங்க இருக்கலாம்.”

“ ரொம்ப நன்றி தம்பி. “

“ ஆமா அம்மா ரெண்டு பேரு சொன்னாங்க. நீங்க மட்டும் வந்துருக்கீங்க.”

“ தென்றலை கேக்குறீங்களா. அவ பால் பாக்கெட் வாங்க பக்கத்துல கடைக்கு போயிருக்கா. “

“ உங்க பொண்ணு பேரு தென்றலா. “

“ ஆமா தம்பி. இப்போ வந்துடுவா. “

“ சரிங்கமா. நாங்க மற்ற பொருள்களை இறக்குறோம். நீங்க எடுத்து வைங்க. “

“ சரிங்க தம்பி. “