கண்ணாமூச்சி 5 56

குறிப்பிட்ட தேதியில் அந்த கல்யாணம் நடப்பதற்குள்ளாகத்தான் தாமிரா மறைந்து போன சம்பவம்.. அந்த அதிர்ச்சியில் இருந்து அந்த குடும்பம் மீண்டு, சிபிக்கும் ஆதிராவுக்கும் கல்யாணம் நடக்க மேலும் ஒருவருடம் ஆகிப்போனது..!!

“ஆதிராம்மா.. என்னாச்சுமா..??” வனக்கொடி வந்து தோளைப் பற்றவும்தான் ஆதிரா பழைய நினைவுகளில் இருந்து மீண்டாள்.

“ஒ..ஒன்னுல்லம்மா..!!” என்றாள் தடுமாற்றமாக.

வெறுப்புடன் முனுமுனுத்தவாறே, அருகில் கிடந்த ஸ்டூலை இழுத்துப்போட்டு ஏறி.. சாய்ந்திருந்த கண்ணாடி சீஸாவை சரியாக நிமிர்த்தி வைத்தாள் வனக்கொடி..!! மனதில் ஒருவித குழப்ப சிந்தனையுடன் எங்கேயோ வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்த ஆதிரா.. வனக்கொடியின் பக்கமாக திரும்பாமலே அவளிடம் கேட்டாள்..!!

“இன்னைக்கு சாயந்திரம் கதிர் எங்கயும் வெளில போவாராம்மா..??”

“இல்லம்மா.. வீட்லதான் இருப்பான்.. ஏன் கேக்குற..??”

“எனக்கு அவர் கூட கொஞ்சம் பேசணும்மா..!!”

இறுக்கமான குரலில் சொல்லிவிட்டு.. சிவப்புமை படர்ந்த புத்தகத்தையும், தங்கையின் ஆட்டோக்ராஃப் புத்தகத்தையும் ஒரு கையில் பிடித்தவாறே.. அந்த அறையின் வாசலை நோக்கி நடந்தாள் ஆதிரா..!!

ஆதிராவுக்கு வியப்பாக இருந்தது.. தொலைந்துபோன ஒருவருட நினைவுகளில், தங்கையின் காதல் பற்றிய நினைவும் அடங்கியிருந்ததை எண்ணி ஒருவித அலுப்பு.. ‘அதையும் கூடவா மறந்து தொலைப்பாய் அறிவுகெட்ட மூளையே..?’ என்று தனது நிலையை தானே கடிந்துகொண்டாள்..!!

அன்று மாலை சிபி கண் விழித்ததுமே, ஆதிரா அவனிடம் அந்த விஷயம் பற்றி பேசினாள்.. தனக்கு ஞாபகம் வந்த தாமிராவின் காதல் பற்றிய நினைவை தெளிவாக விளக்கி கூறினாள்..!! தாமிரா கதிரை காதலித்த செய்தி சிபிக்கு புதிதாக இருந்தது.. ‘என்ன சொல்ற ஆதிரா..?? அப்படியா..?? கதிரையா..??’ என்று திரும்ப திரும்ப கேட்டான்..!! ‘ஆமாம் அத்தான், எனக்கு இப்போத்தான் ஞாபகம் வந்தது’ என்று அவனை நம்ப வைக்க முயன்றாள்.. அந்த ஆட்டோக்ராஃப் புத்தகத்தையும் ஆதாரமாக திறந்து காட்டினாள்..!! அவனும் சிறிதுநேர சிந்தனைக்கு பிறகு.. ‘சரிதான்’ என்று சமாதானம் ஆனதும்.. ஆதிரா அவனிடம் கேட்டாள்..!!

“அவ லவ் பண்ற விஷயத்தை அப்போதைக்கு யார்ட்டயும் சொல்லவேணாம்னு தாமிரா சொல்லிருந்தா.. அவ போனப்புறமும்கூட அதைப்பத்தி நான் உங்கட்ட சொல்லலையா அத்தான்..??”

ஆதிரா அவ்வாறு கேட்டதும் சிபி அவளுடைய கையை பற்றிக்கொண்டான். அவளது விரல்களை வாஞ்சையாக வருடிக் கொடுத்தவாறே சொன்னான்.

“இல்ல ஆதிரா.. சொல்லல..!! தாமிரா போனதுக்கப்புறம் நீ ரொம்பவே உடைஞ்சு போய்ட்ட.. யார்ட்டயும் சரியா பேசுறது கூட கெடையாது.. எந்த நேரமும் எங்கயாவது வெறிச்சு பாத்துட்டுதான் உக்காந்திருப்ப.. நீ கொஞ்சம் நார்மலுக்கு வர்றதுக்கே ஆறு ஏழு மாசம் ஆய்டுச்சுடா..!! அவளே நம்மள விட்டு போனப்புறம் அவ லவ் மேட்டரை வெளில சொல்லி என்ன ஆகப்போகுது.. ம்ம்..?? அது உனக்கு அவ்வளவு முக்கியமா பட்டிருக்காது..!!”

“ம்ம்.. ஆமாம்.. அப்படித்தான் இருக்கணும்..!! ஹ்ம்ம்.. அப்புறம்.. இன்னொரு விஷயம்..!!”

“என்ன..??”

“இன்னைக்கு அவரை நேர்ல போய் பார்த்து பேசலாம்னு இருக்கேன் அத்தான்..!!”

“யாரை.. கதிரையா..??”

“ம்ம்..!!”

“இந்த விஷயத்தை பத்தி பேசப் போறியா..??”

“ஆமாம்..!!”

“எதுக்கு ஆதிரா..?? அதெல்லாம் தேவையில்லாததுன்னு தோணுது..!!”

2 Comments

  1. Very very suspence

Comments are closed.