கண்ணாமூச்சி 5 56

சலிப்பாக சொல்லிக்கொண்டே வனக்கொடி ஜன்னலை நோக்கி நகர்ந்தாள்.. ஜன்னல் கதவுகளை இழுத்து தாழ் போட்டாள்..!! அதேநேரம் ஆதிராவின் பார்வை எதேச்சையாக வேறெங்கோ சென்றது.. தரையில் விரிந்து கிடந்த ஒரு புத்தகத்தின் மேல் சென்று படிந்தது..!! அறையை ஒட்டி நின்றிருக்கும் மரஅலமாரியில் அடுக்கிவைக்கப்பட்ட புத்தகங்களில் இருந்து.. ஒன்று மட்டும் கீழே நழுவி விழுந்திருந்தது..!! அந்த புத்தகத்தின்மீது ‘சத்.. சத்.. சத்..’ என சப்தம் எழுகிற மாதிரி.. சிவப்பு நிறத்தில் ஏதோ திரவம் மேலிருந்து துளித்துளியாய் சொட்டிக்கொண்டிருந்தது..!!

தாமிராவுக்கு ஓவியம் வரைவதில் ஆர்வம் உண்டு..!! அதற்கென அவள் உபயோகிக்கிற பலவகை வண்ண மைகள்.. கண்ணாடி சீசாக்களில் அடைக்கப்பட்டு.. அலமாரியின் மேலே வரிசையாக அடுக்கப்பட்டிருக்கும்..!! அந்த சீசாக்களில் ஒன்றுதான் இப்போது மேலேயே கவிழ்ந்து.. சிவப்பு மையை மட்டும் சொட்டு சொட்டாய் கீழே சிந்திக் கொண்டிருந்தது..!!

ஆதிரா பார்வையை கூர்மையாக்கி அந்த புத்தகத்தின் மீது வீசினாள்..!! பிரபல எழுத்தாளர் ஒருவரால் எழுதப்பட்ட நாவல் அது.. அதன் அட்டையில்.. கருப்புநிற பின்னணியில் சிவப்புநிற எழுத்துக்களாக கதையின் தலைப்பு மின்னியது..!!

ஆதிரா குனிந்து அந்த புத்தகத்தை கையில் எடுத்தாள்.. அந்த புத்தகத்துக்குள் இருந்த இன்னொரு சிறிய புத்தகம் இப்போது வெளியே நழுவி விழுந்தது..!! அது.. அவளுடைய தங்கை தாமிராவின் கல்லூரி ஆட்டோக்ராஃப் புத்தகம்..!!

அந்த ஆட்டோக்ராஃப் புத்தகத்தை பார்த்ததுமே ஆதிராவுடைய மூளையில் பளீரென்று ஒரு மின்னல்.. தொலைந்துபோன ஒரு சம்பவத்தின் நினைவுகளை அவளது மூளை இப்போது சட்டென மீட்டெடுத்தது.. ஒரு வருடத்திற்கு முன்பாக நடந்த அந்த சம்பவம்..!!

இதோ.. இதே அறையில்தான்.. அதோ.. அந்த கம்ப்யூட்டர் மேஜை முன்பாகத்தான்.. தாமிரா அமர்ந்து அவளது கம்ப்யூட்டரில் ஏதோ கட்டுரை டைப் செய்து கொண்டிருந்தாள்..!! இதே ஆட்டோக்ராஃப் புத்தகத்தைத்தான் ஆதிரா அந்த மேஜை மீது விசிறியடித்தாள்.. திகைத்துப்போய் நிமிர்ந்து பார்த்த தங்கையிடம், ஆதங்கம் நிறைந்த குரலில் கேட்டாள்..!!

“என்னடி இது..??”

“எ..எது..??” – தாமிராவிடம் ஒருவித குழப்பம்.

“ம்ம்ம்ம்..??? இது..!!!”

கடுப்பாக சொன்ன ஆதிரா.. அந்த ஆட்டோக்ராஃப் புத்தகத்தை திறந்து.. ஒரு குறிப்பிட்ட பக்கத்தை தங்கையிடம் விரித்து காட்டினாள்..!! அவ்வாறு விரித்து காட்டப்பட்ட பக்கத்தில்.. தாமிராவின் கல்லூரி தோழியால் கிறுக்கப்பட்ட அந்த வழியனுப்பு வாழ்த்து செய்தி..!!

“தெளிவாக யோசி பெண்ணே.. துணிச்சலாக ஒரு முடிவெடு.. உனது காதல் கைகூட என் மனமார்ந்த வாழ்த்துக்கள்..!! – அன்புத்தோழி அகல்விழி”

ஆதிரா அந்தப்பக்கத்தை திறந்து காட்டியதுமே.. தாமிராவின் முகத்தில் பட்டென ஒரு சோர்வு.. ‘பாத்துட்டாளா’ என்பது போல ஒரு சலிப்பு..!! அவஸ்தையாக இமைகளை மூடிக்கொண்டவள், எதுவும் பேசாமல் தலையை குனிந்துகொண்டாள்.. ஆதிரா அவளை விடவில்லை..!!

“கேக்குறேன்ல..?? சொல்லுடி..!!” – ஆதிராவின் குரலில் ஒரு எரிச்சல்.

“என்ன சொல்ல சொல்ற..??” – அதே எரிச்சல் தாமிராவின் குரலிலும்.

“அப்டியே அறையப் போறேன் பாரு உன்ன..!! இத்தனை நாளா யாரையோ லவ் பண்ணிக்கிட்டு.. எங்கிட்ட ஒரு வார்த்தை சொல்லனும்னு கூட உனக்கு தோணலைல..?? எல்லாம் நானே தெரிஞ்சுக்க வேண்டியிருக்கு..!!”

“ப்ச்.. புரியாம பேசாதக்கா..!!”

“யார்டி புரியாமப் பேசுறா..?? அமுக்குணி கழுதை..!!”

“…………………………”

“அத்தானை நான் லவ் பண்ற விஷயத்தை உன்கிட்ட சொன்னப்போ எனக்கு எத்தனை வயசுடி இருக்கும்..??”

“…………………………”

“சொல்லுடி..!!”

2 Comments

  1. Very very suspence

Comments are closed.