“ஆமாம்பா…”
“சீனு… அந்த பொண்ணு யாரா இருந்தாலும் சரிடா… அந்த பொண்ணு எந்த ஜாதியா இருந்தாலும் சரிடா… அவளை நான் என் மருமகளா ஏத்துக்க தயார்…
உன் சந்தோஷம்தான் எனக்கு முக்கியம்…” நிதானமாக பேசிய ராகவன் எழுந்தார். சீனுவாசனின் கையைக் குலுக்கினார்.
“அப்பா.. அப்டீன்னா அவளை நான் நம்ம வீட்டுக்கு அழைச்சிட்டு வரவா?”
“போய் அழைச்சிட்டு வாடா… இன்னைக்கு நாள் நல்லாத்தான் இருக்கு…”
“ரொம்பத் தேங்க்ஸ்ப்பா…”
அதே நேரத்தில் சீனுவின் செல் ஒலித்தது. செல்லில் மீனாவின் போட்டோ மின்னியதும், சீனுவின் மனசு குப்பென்று பற்றிக்கொண்டது. சீனு எழுந்து வெராண்டாவிற்கு வந்தான்.
“சொல்லு மீனா…நான்தான் சீனு பேசறேன்..” உற்சாகமாக ஆரம்பித்தான், அவன்.
“தெரியுது… நான் என்னா நீ சீனு இல்லேன்னு நினைச்சுக்கிட்டா போன் பண்ணேன்…?”
“என்னடீ… மீனு குட்டீ.. கோவமா இருக்கியா?”
“நீயெல்லாம் ஒரு மனுஷன்… நான் ஒரு கேனச்சி.. போயும் போயும் உன்னை மாதிரி ஆளை லவ் பண்றேன் பாரு… என் புத்தியை நானேதான் ஜோட்டால அடிச்சுக்கணும்..”
“ஏம்ம்மா இந்த ஃபீலிங் உனக்கு? நான் ரொம்ப ரொம்ப நல்லவன்டீ” சீனுவுக்கு திக்கென்றிருந்தது.
“நீ நல்லவன்னு ஊர்ல இருக்கற நல்லவன் எவனாவது சொல்லணும்… இல்லேன்னா நான் சொல்லணும்… நீயே சொல்லிக்கக்கூடாது..”
“என்னாச்சு செல்லம்…?”
“ஒரு வாரமாச்சே… இங்க ஒருத்தி உன்னையே நெனைச்சுக்கிட்டு இருப்பாளேங்கற எண்ணம் உனக்கு கொஞ்சமாவது இருக்காடா?”
“மீனு… ஐ லவ் யூ ஸோ மச்… இப்பத்தான் உனக்கு நான் போன் பண்ணணும்ன்னு நெனைச்சேன்… அதுக்குள்ள நீ முந்திக்கிட்டே….”
“இந்த பிட்டு போடற வேலையெல்லாம் என் கிட்ட வெச்சுக்காதே? எனக்கு கெட்ட கோவம் வரும்… இந்த ஒரு வாரத்துல என் கிட்ட ஒரு தரமாவது பேசினியா… நீ?”
“எந்தப் பக்கம் வந்தாலும் கேட்டை மூடறியேடீ…”
“எப்பவும் கேட்டை ஒடைக்கறது, ஜன்னல் வழியா எட்டிப்பாக்கறது… காம்பவுண்டு சுவத்தை எகிறி குதிக்கறது.. இதான் உன் வேலையா?… வெக்கமா இல்லே… உனக்கு?”