இதுக்கு முன்னாடி பொண்ணுங்கள பாத்தது இல்லையா? 6 126

நாகராஜன், கிஷோர் மற்றும் ராம் மூவரும் நிசப்தத்தை வீட்டில் பரவவிட்டு அமைதியாக ஒருவர் முகத்தை மற்றொருவர் பார்த்துக் கொண்டிருந்தனர.. கடந்த முப்பது நிமிடமாக பேசவேண்டிய அனைத்தையும் பேசி முடித்துவிட்டு முகத்தில் கவலையை அப்பிக்கொண்டு இருந்தனர்.

கிஷோரின் அறைக்குள் அவனின் அம்மா புவனேஸ்வரி முகத்தில் சோகத்தை அப்பியபடி மெத்தையில் உட்கார்ந்து இருந்தாள்.. அவளது மடியில் கலை தலை வைத்து குழந்தை போல படுத்திருந்தாள்.. கடந்த ஐந்து நிமிடமாக புவனேஷ்வரியின் அன்பு வார்த்தைகள் கலையின் செவியை ஊடுருவி அவள் மனதை தடவ, வெல்வெட்டால் ஆன கரமோ என்று வியப்பு கொள்ளும் மென்மை கொண்ட புவனேஷ்வரியின் உள்ளங்கை கலையின் தலையை தடவிக் கொடுக்க கலை இமைகளை மூடி நித்திரைக்கு சென்றாள்..

தாயின் கரமும், தந்தையின் கரமும் தனது கன்னத்தை பதம் பார்த்த பின்பு இரண்டு நாட்களாக சரியாக உணவு உட்கொள்ளாமல், அறைக்குள்ளேயே முடங்கி கிடந்து அழுது அழுது சோர்ந்து போனவளுக்கு புவனேஸ்வரியின் அரவணைப்பும் அவள் மடியில் ஆழ்ந்த உறக்கமும் மிக தேவையான ஒன்றாக இருந்தது.. கலை நித்திரையில் வீழ்ந்த பின்னரும் புவனேஷ்வரி அவள் முகத்தை ஏக்கமாக பார்த்து தடவிய வண்ணம் இருந்தாள்.. கலையின் கன்னங்களை மறைத்திருந்த முடியை விளக்கிப் பார்த்தாள், ஒரு பிளாஸ்திரி ஒட்டி இருந்தது..

அதை கண்டதும் புவனேஷ்வரிக்கு கண்களில் தேங்கிய நீரை புறங்கையால் துடைத்து விட்டு, கலையின் தலையை மெதுவாக தன் மடியில் இருந்து தூக்கி தலைகாணியில் வைத்து விட்டு அங்கிருந்து வீட்டின் கூடத்துக்கு வந்து அங்கு நிலவி கொண்டிருந்த நிசப்தத்தை கலைத்தாள்..

புவனேஷ்வரி: ஒரு காட்டு மிராண்டி குடும்பத்துக்குள்ள பூ ஒரு மாதிரி அப்பாவி பொண்ணு.. சீக்கிரம் கல்யாணத்தை முடிச்சு நம்ம வீட்டுக்கு கூட்டி வந்துரணும்..

கிஷோர்: ம்மா காட்டு மிராண்டி லாம் ஒன்னும் இல்ல.. எதோ கோவத்துல அடிச்சுட்டாங்க.. நீங்க ரெண்டு பேரும் என் மேல வச்சிருக்கிற பாசத்தை விட அவங்க அப்பா அவ மேல அதிகம் பாசம் வச்சிருக்கார்..

புவனேஷ்வரி: பொல்லாத பாசம், பாசம் இருந்த அளவுல பாதியாச்சும் நிதானம் இருக்கணும் டா.. அது இல்லாம தான் தங்க பிள்ளைய இப்படி கன்னத்துல ரத்தம் வர்ற மாதிரி அடிச்சுருக்காங்க..

கிஷோர்: ம்மா.. அவர் கைல ஒரு ஏதோ ஒரு சின்ன கண்ணாடித்துண்டு இருந்தது கவனிக்காம அப்படியே அடிச்சிட்டார்.. அதான் ரத்தம் வந்துருச்சு..

புவனேஷ்வரி: டேய் நீ என்னடா கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாம அந்த ஆளுக்கு சப்போர்ட் பண்ணி பேசிட்டு இருக்க..

கிஷோர்: சப்போர்ட் லாம் ஒன்னும் பண்ணல ம்மா.. அவ்ளோ கம்பீரமான ஆளு இன்னைக்கு அழுகாத குறையா என்கிட்டே வருத்தப்பட்டு பேசுனாரு.. நீங்க பக்கத்திலிருந்து பாத்தா இப்படிலாம் பேச மாட்டீங்க..

புவனேஷ்வரி: நான் அங்க இருந்தா அங்க வச்சே அந்தாள நாக்கை புடுங்கிற கேட்ருப்பேன்..

நாகராஜன்: ஏய் விடுடி.. தப்பு உணராமலயா அவரே இவனுக்கு போன் போட்டு கலையை கூப்பிட்டு போக சொல்லிருக்காரு.. ரொம்ப வேதனை பட்ருப்பாரு போல தான் தெரியுது..

1 Comment

  1. தலைப்பு பிழை

Comments are closed.