இதுக்கு முன்னாடி பொண்ணுங்கள பாத்தது இல்லையா? 6 126

மஞ்சு: (ஒரு பெரிய ஏளனச்சிரிப்புடன்) என்னது பாவமா? யாரு இவளா? பாவம்..

பொறுமையிழந்த கலை “நான் கேட்டது காதுல விழலையா? என்னை மதிக்காம அவன் கூட கொஞ்சிகிட்டு இருக்குற”

மஞ்சுவுக்கு எங்கிருந்து அவ்வளவு கோபம் வந்தது என்று தெரியவில்லை.. முகம் முழுக்க கோபத்துடன் “என்னடி ஓடுகாலி, கொஞ்சம் கூட மரியாதை இல்லாம பேசுற.. அவன் இவன் ன்னு சொல்லுற”

கைபேசி எதிர்முனை மஞ்சுவிடம் ஏதோ சொல்ல, மஞ்சு பதிலுக்கு “தெரியல திடீர்னு பைத்தியம் வந்தா மாதிரி கத்திக்கிட்டு இருக்குறா”

கலை “நான் சொல்ல சொல்ல பேசிட்டே இருக்குற” என்றபடி மஞ்சுவின் கையில் இருந்த கைபேசியை பிடுங்க முற்பட்டு அதன் பாதியை கையில் பற்றினாள். மீதமிருந்த பாதியை மஞ்சு கெட்டியாக பற்றி இருந்தாள்..

இருவரும் கைபேசியின் சமபாதியை கையில் கெட்டியாக பற்றி இழுக்க, கைபேசியில் இருந்து “ஹலோ ஹலோ” என்ற மிக மெல்லிய சத்தங்கள் வந்து கொண்டே இருந்தது..

இளமை துடிப்பும், ராகுலின் மேலிருந்த கோபமும் கலைக்கு சற்று வலு கொடுக்க, வெடுக்கென மஞ்சுவின் கையில் இருந்து கைபேசியை உருவி இழுத்தாள்.. இழுத்த வேகத்தில், கைபேசியானது கலையின் கையில் இருந்தும் நழுவி மேலே பறந்தது.. மேலே சுற்றி கொண்டிருந்த மின் விசிறியின் ரெக்கையில் மோத, தட் என்ற பெரிய சத்தத்துடன் கைபேசி சிதறி கூடத்தின் ஒரு ஒரு மூலைக்கும் பல துண்டுகளாய் பறந்து விழுந்தது.. கைபேசியை பலமாக அடித்து விட்டு மின்விசிறியும் சில சுற்றுக்கள் தள்ளாடிவிட்டு பின்பு பழைய நிலைக்கு மீண்டு சுற்றி கொண்டிருந்தது..

மின் விசிறியின் கீச் கீச் சத்தம், தொலைகாட்சி பெட்டியின் சின்ன பாடல் சத்தம் அனைத்தையும் தாண்டி மஞ்சுவின் சுவாசத்தின் ஒலி கூடத்தை நிறைத்து இருந்தது.. அந்த சில வினாடிகளில் என்ன நடந்தது என்பதை நம்ப முடியாமல், ஒவ்வொரு மூலையிலும் சிதறி கிடந்த கைபேசி துண்டுகளை ஏக்கத்துடன் பார்த்து கொண்டிருந்தாள்..

எதிரில் கலையின் முகத்தில் தெரிந்த நிம்மதி புன்னகையை பார்த்ததும் மஞ்சுவுக்கு ஏக்கம் கோபமாக உருவெடுத்தது..

“அது என் தம்பி வாங்கி கொடுத்த போனு டி” என்று மஞ்சு சொல்லிய அதே நொடியில், இவ்வளவு காலமாக கலையின் கன்னத்தை மென்மையாய் தடவிக் கொடுத்த அன்பை வீசிய மஞ்சுவின் கரமானது இப்பொழுது வேகமாக காற்றை கிழித்து கொண்டு கலையின் கன்னத்தை நோக்கி வந்து கொண்டிருந்தது..

கலை சுதாரித்து முகத்தை திருப்பும் முன்னரே மஞ்சுவின் கரம் கலையின் கன்னத்தில் கைரேகையே ஒட்டுமளவு பதிந்தது.. கலைக்கு பொறி கலங்கி ஒரு வினாடி கண்ணை கட்டியது.. அதில் சற்று தெளிந்து “ம்மா…” என்று சொல்ல, யானை தன் முன் காலால் ஒருவனை வதைப்பது போல, தன் இரு கைகளையும் மேலே தூக்கி ஒன்றாக கலையின் முகத்தில் அடித்தாள்.. கலையின் முன் முடிகள் கலைந்து அலங்கோலமானாள்..

“அவனுக்காக என்னை அடிக்கிறியா?” எனறு கலை கேட்க மறுபடியும் மஞ்சுவின் கைகள் கலையை தாக்க வந்தது.. இம்முறை மஞ்சுவின் கையை கெட்டியாக பிடித்த கலை, அவளை இரண்டடி நகர்த்தி கொண்டு போய் தள்ளி விட்டாள்.. மஞ்சு தடுமாறி கீழே விழுந்து கிடக்க.. கலை வேகமாக தன் அறைக்குள் சென்று கதவை மூடிக் கொண்டாள்..

ராம்: ண்ணே!! ஒண்ணுமே இல்லாம, ஒரு உப்பு சப்பும் இல்லாம உன்னால ஒரு மணி நேரம் பேச முடியுமா??

கிஷோர்: டேய் என்னடா சொல்ற?

ராம்: சரி விடு.. அப்படி பேசுறவங்க கிட்ட உன்னால காது கொடுத்து கேட்க முடியுமா?

கிஷோர்: ப்ப்ச்ச்!! கொஞ்சம் தெளிவா தான் பேசேன் டா..

ராம்: ஒன்னும் இல்லண்ணே!! வனிதாவையும் என்னையும் தான் சொன்னேன்.. சரி நீ ஏதோ பேசணும் ன்னு சொன்னியே.. என்ன விஷயம்?

கிஷோர்: (ராமின் கைபேசியை பார்த்தவாறு) மறுபடி வனிதா போன் போட மாட்டால்ல..

ஆனால் அந்த நொடியே கிஷோரின் செல் சிணுங்கியது.. எடுத்து பார்த்தால் “Pondati Calling” என்று திரை மின்னியது..

1 Comment

  1. தலைப்பு பிழை

Comments are closed.