அசுரன் Part 27 30

மதிவதனி எழுந்து அந்த பெண்ணிடம்”ஆதிசங்கரர் காசியில் ஒரு தெருவில் செல்லும் பொழுது ஒரு பிச்சைக்காரனை கண்டு ஒதுங்கி சென்றாராம்..அதை கண்ட பிச்சைக்காரன்,உன்னில் உள்ள பிரம்மம் தானே என்னில் உள்ளது..என்னை அவமானப்படுத்துவது நீ வணங்கும் அந்த பிரம்மத்தை அவமானபடுத்துவதை போல் அல்லவா…என்று கூறினார்..இந்த மேலான உபதேசத்தை கேட்ட உடன் அந்த பிச்சைக்காரன் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினார் ஆதிசங்கரர்.அதுபோல தான் பெண்ணே,என்னுள் இருந்த குழப்பத்தை நீ தான் போக்கி உள்ளாய்.நீயும் என்னோட குரு தான் என்னை ஆசீர்வதிக்க வேண்டும்” என மதிவதனி வேண்டினாள்..

அந்த பெண்ணும் ஆசீர்வதிக்க,மதிவதனி எழுந்து தன் தெய்வீக வில்லை எடுத்து நாணேற்றி இழுத்து விசை எழுப்ப,அந்த ஒலி காடு முழுவதும் எதிரொலித்தது..

சரியாக அந்த நேரம்,காத்தவராயன் அகோரியை விரட்டி பிடித்து இருந்தான்..அவனை முட்டி போட வைத்து,அவன் கழுத்தில் காலை போட்டு காத்தவராயன் மடக்கி நெரித்து கொண்டு இருக்க,அவனுக்கு அந்த வில்லின் சத்தம் கேட்டது..

“இது மதிவதனியின் வில்லின் சத்தம் அல்லவா…!”என அவன் திகைக்க,அகோரி சிரித்தான்..

அகோரி அவனை பார்த்து,”எனக்கு எமன் என் கண்முன்னே வருவது தெரிந்து விட்டது காத்தவராயா.அடுத்து எமன் உன்னையும் கொல்ல வருகிறான்”என சிரித்தான்.

காத்தவராயன் அவனிடம்,”உன்னை எமலோகம் அனுப்பிவிட்டு,அவளையும் உனக்கு துணையாக பின்னே அனுப்பி வைக்கிறேன்”என காத்தவராயன் அவன் தலையை பிடுங்கி இரு கைகளால் பிடுங்கி எறிந்தான்..

இரத்தம் குபுகுபுவென காத்தவராயன் முகத்தில் பாய்ந்தது..

இரத்தம் தோய்ந்த முகத்தோடு காத்தவராயன்,மதிவதனியை எதிர்கொள்ள சென்றான்..தன் குழந்தையை கொன்றவனை பழிவாங்க மதிவதனியும் குகையை விட்டு வெளியே வந்தாள்..

இருவரும் மீண்டும் ஒருவரையொருவர் எதிர்கொண்டனர்…
இருவருக்கும் மீண்டும் யுத்தம் ஆரம்பமாகியது..
இம்முறை மதிவதனி விட்ட அம்புகள் காத்தவராயன் உடம்பை பதம் பார்த்தன..ஆனால் அவன் மார்பை மட்டும் துளைக்கவில்லை.

மதிவதனிக்கு அவனை கொல்ல மட்டும் வழி கிடைக்கவில்லை..அவன் உடம்பு முழுக்க ரத்தம் வழிய மயங்கி விழுந்தான்..ஆனால் சிறிது நேரத்தில் எங்கிருந்தோ பறந்து வந்த தேனீக்கள் அவன் உடலில் பட்ட காயங்களுக்கு ஏதோ ஒரு மருந்தை இட்டன.அதை இட்டவுடன் அவன் காயங்கள் குணமாகி உடனே எழுந்து புத்துணர்ச்சி பெற்று மீண்டும் அவள் மீது கடுமையாக போர் செய்தான்.அங்கிருந்த பாறைகளை பெயர்த்து எடுத்து அவள் மீது எறிந்தான்..

“நீ எத்தனை முறை மூர்ச்சை ஆக்கி வீழ்த்தினாலும்,நான் மீண்டும் மீண்டும் புத்துணர்ச்சி பெற்று எழுவேன் மதி..!உன்னால் என்னை ஒன்றும் செய்ய முடியாது” என சிரித்தான்.

மதிவதனி மீண்டும் அவன் தாக்குதல்களை சமாளிக்க முடியாமல் தவித்தாள்.எப்படி அவன் காயங்கள் குணமானது என வேடிக்கை பார்த்த பெண்களுக்கு புரியவில்லை.அப்பொழுது மதிவதனிக்கு உபதேசம் செய்த பெண்ணுக்கு ஒரு யோசனை உதித்தது..

அதற்குள் மதிவதனி மீண்டும் காத்தவராயனை மூர்ச்சையாக்க,அந்த பெண் ஓடிவந்து,”தேவி,எப்படியாவது காத்தவராயனை எரிமலை அருகே கொண்டு செல்லுங்கள்..எரிமலை இருக்கும் இடத்தில் தேனீக்கள் வராது” என்று கூறிவிட்டு ஓடி மறைந்தாள்.

மதிவதனிக்கும் ,காத்தவராயனை கொல்ல ஒரு அற்புதமான யோசனை கிடைத்தது..

காத்தவராயன் மீண்டும் எழுந்து யுத்தம் செய்ய,மதிவதனி அம்பு மழை பொழிந்து கொஞ்ச கொஞ்சமாய் அவனை பின்வாங்க செய்தாள்..அவன் பின்னே செல்ல செல்ல எரிமலையின் குழம்பில் உருகி அவன் உயரத்திற்கு நிகராக இருந்த பாறையை நோக்கி அம்பு விட்டு கொண்டே அவனை பின்வாங்க செய்தாள்.

இம்முறை அவள் விட்ட அம்புகள் அவன் கையை துளைத்து மறுபக்கம் வந்தது..காத்தவராயன் அந்த அம்பை எடுக்க முயல,அதற்குள் இன்னொரு அம்பு வந்து அவன் இன்னொரு கையை துளைத்தது.சரமாரியாக அம்புகளை விட அவன் கை,கால்,முகம்,கழுத்து எல்லாம் இடத்திலும் அம்புகள் துளைத்து அந்த பாறையோடு சேர்த்து அவனை கட்டியது.அவன் பாறையில் இருந்து தன்னை விடுவிக்க முயல,அவனால் முடியவில்லை.ஏசுவை சிலுவையில் அறைந்தது போல அந்த பாறையில் நூற்றுகணக்கான அம்புகளால் காத்தவராயனை அறைந்து விட்டாள்..

“மதி,ஒழுங்கா என்னை இந்த பாறையில் இருந்து விடுவித்து விடு..நீ ஏற்படுத்திய காயங்களால் வலி உயிர் போகுது” என கத்தினான்..

“உன்னை கொல்லும் ஆயுதம் என்னிடம் இல்லை காத்தவராயா..நீயாக உன் உயிரை விட செய்வது தான் எனக்கு இப்போ தெரிந்த ஒரே வழி.. ஒரு சொட்டு தண்ணீ,உணவு கூட இல்லாமல் துடிதுடித்து நீ சாக வேண்டும்.உன் மார்பை துளைக்கும் ஆயுதம் என்னிடம் இல்லை.ஆனால் உன்னோட உயிர் அங்கு தான் உள்ளது.உன் உயிரை பறிக்க எனக்கு வேறு வழி இல்லை.நான் என்ன செய்ய…!”

காத்தவராயன் கோபம் பன்மடங்கு அதிகரித்தது.”இந்த உடலை விட்டு,என்னோட உயிர் போனாலும் நான் பிரேத ஆத்மாவாக வந்து மீண்டும் இந்த உடலை பெற முயற்சி செய்வேன் மதி,என் உடல் மீண்டும் கிடைக்கும் பொழுது இந்த உலகில் பெரும் அனர்த்தம் நிகழும்.என்னை அழிக்கும் சக்தி அப்போ அந்த இறைவனுக்கு கூட இருக்காது.அந்த நிகழ்வுகளுக்கு நீ தான் பொறுப்பு..”என கத்தினான்..

மதிவதனி அவனிடம் பொறுமையாக,”அப்படி ஒரு சம்பவம் நிகழும் என்றால் இந்த மதிவதனி அதை தடுப்பாள்.”

“அதையும் பார்க்கலாம்…”என காத்தவராயன் சீறினான்…

மதிவதனி அரண்மனை திரும்ப,சகுந்தலா தேவி வந்து அவள் காலில் வந்து விழுந்தாள்..

“என்னை மன்னிச்சிடு மதிவதனி,உன் குழந்தை என்னிடம் தான் இருக்கு..நான் செய்த சதிவேலையால் என்னோட குழந்தையை நான் இழக்கும் படி நேரிட்டு விட்டது.”

மதிவதனி புன்னகை மாறாமல்,அவளிடம் இருந்து குழந்தையை வாங்கி ஆசையுடன் பார்த்து,அந்த குழந்தைக்கு பால் புகட்டினாள்.பின் சகுந்தலா தேவியிடம் அந்த குழந்தையை கொடுத்து விட்டு,”நீ தெரிந்தோ,தெரியாமலோ இந்த குழந்தைக்கு தாயாகி விட்டாய் சகுந்தலா..!இதற்கு மேல் இவனுக்கு தாய் நீ தான்..!எனக்கு சில கடமைகள் இருக்கு,நீ இந்த குழந்தையை எடுத்து கொண்டு உன் நாட்டுக்கு உடனே சென்று விடு..எதிர்காலத்தில் நடக்கவிருக்கும் சில அனர்த்தங்களை தவிர்க்க நானும் தவம் செய்ய செல்ல வேண்டும்..என சொல்லிவிட்டு தான் காப்பாற்றிய நாலு பெண்களை மட்டும் அழைத்து சென்றாள்..

காத்தவராயன் உணவு,தண்ணீ இல்லாமல் துடித்து கொண்டு இருக்கும் பொழுதும் அவன் உடலை காக்க,அதர்வண வேதத்தின் ஒரு பகுதியை தினமும் ஜெபித்து கொண்டு இருந்தான்..தண்ணீ, உணவு இல்லாமல் அவன் ஏழு நாட்கள் வலியோடு துடிதுடித்து இறக்க,அவன் உடலில் இருந்து அவன் ஆத்மா வெளிவந்தது..அவன் ஜெபித்த மந்திரத்தால் அது மிகவும் சக்தி வாய்ந்ததாக இருந்தது.அவன் ஆவி வெளிவந்த உடன் முதல் வேலையாக அவன் உடலை பாறையில் இருந்து பெயர்த்து எடுத்து ஒரு இடத்தில் பத்திரப்படுத்தியது..

அதே ஏழாவது நாள் விடியற்காலையில் மதிவதனி தவம் செய்த இடத்தை அந்த நாலு பெண்கள் வந்து பார்க்க,அங்கே மதிவதனி இல்லை.மாறாக,அங்கே புதிய மாமரம் முளைத்து இருந்தது..

“இது என்னடி ஆச்சரியமா இருக்கு,இங்கே எப்படி ஒரே நாளில் புது மாமரம் முளைத்து இருக்கும்..நம் தேவி எங்கே..?”என அதிசயத்தினர்.

அப்பொழுது அங்கே ஒரு அசரீரி குரல் கேட்டது..அதை கேட்டு அவர்கள் கண்கள் ஆச்சர்யத்தில் விரிந்தன..

லிகிதா பாகம் இன்னும் கொஞ்சம் எழுதலாமா என்று கேட்டேன்..!இன்னும் யாரும் சொல்லவில்லை.நேரடியாக நிகழ் கால பிரியங்கா கதைக்கு சென்று விடலாமா..!

1 Comment

  1. அருணா டீச்சர்

    நான் எழுதும் கதைகளை உங்களுக்கு எப்படி அனுப்புவது?

Comments are closed.