வர்ணிகா 264

குளித்து முடித்து வந்த வர்ணிகா தன் அறைக்குள் சென்று கதவைச் சாத்திவிட்டு நிர்வாணமாக நின்றாள். தன் இளமையின் வனப்பை, அதன் செழுமையான அங்கங்களை கிறக்கத்துடன் ரசித்தபடி உடம்புக்கு நிறைய பவுடர் போட்டு உள்ளாடைகள் அணிந்தாள். பின் முழங்கால்வரை நீளும் மிடியும் டாப்ஸும் போட்டுக்கொண்டாள்.

ஈரக் கூந்தலை நன்றாக உதறியபடி கதவைத் திறந்து வைத்தாள். சாத்தியிருந்த ஜன்னலைத் திறந்து பின்பக்க வீட்டைப் பார்த்தாள். கூட்டம் மிகுந்திருந்தது. ஆண்களும் பெண்களுமான கூட்டம். அதிலும் வயது முதிர்ந்தவர்களே அதிகம்.

அவர்களுக்கிடையே அவள் கண்கள் ஒவ்வொரு முகமாக தொட்டுத் தொட்டுத் தேடின. அவள் தேடிய முகம் அங்கு இல்லை. அதைக் காணாத உணர்வில் அவள் முகம் சுருங்கியது. முதலில் அதில் ஏமாற்றமும் பின்னர் ஒரு சின்ன மகிழ்ச்சியும் எழுந்தது.
அவள் தாத்தா எதற்கோ யாருடனோ சத்தமாகப் பேசி வாக்குவாதம் செய்து கொண்டிருந்தார். பாட்டியையும் அம்மாவையும் காணவில்லை.

ஜன்னல் ஓரமாக கொஞ்சம் உள்ளே தள்ளி நின்று கூட்டத்திலிருப்பவர்களைப் பார்த்தபடியே கழுத்தை ஒரு பக்கம் சரித்து தலை முடியை மீண்டும் மீண்டும் உதறித் துவட்டினாள். சில நிமிடங்களில் மீண்டும் ஒரு கூட்டம் சேர்ந்தது. திடீரென வீட்டினுள் ஒப்பாரி துவங்கியது.

அந்த ஒப்பாரிச் சத்தம் அவளை என்னவோ செய்தது. நேற்று இரவிலிருந்தே அந்த ஒப்பாரிச் சத்தத்தைக் கேட்டுக் கேட்டு அவளுக்கே ஒரு மாதிரி ஆகிவிட்டிருந்தது. இரவு கொஞ்ச நேரம் தூங்கிய தூக்கத்திலும் அந்த ஒப்பாரி சத்தம்தான் தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருந்தது.. !!

இறந்தது அவள் அப்பாவின் பாட்டி. தாத்தாவின் அம்மா. அந்தக் கிழவிக்கு பிறந்த நாள் நேரமெல்லாம் தெரியாது. ஆனால் எப்படியும் தொண்ணூறு வயது கடந்திருக்கும் என்பது தாத்தாவின் கணிப்பு. தாத்தாவுக்கே இப்போது எழுபது வயது தாண்டிவிட்டது.

அந்த கிழவி கடந்த ஒரு மாதமாகத்தான் படுக்கையில் இருந்தது. மற்றபடி இவ்வளவு காலமும் தடியூன்றியபடி நடந்து கொண்டும் நன்றாக பேசிக்கொண்டும்தான் இருந்தது. நேற்றிரவு முன்னந்தி வேளையில் உயிரை விட்டு விட்டது. அப்போது வர்ணிகாவும் அந்த பாட்டி அருகில்தான் இருந்தாள். ஒரு உயிர் பிரிவதை அவள் கண்ணாரக் கண்டாள். ஆனால் ஆச்சரியமாக அது அவளை ஒன்றுமே செய்யவில்லை. வேறு எந்த பயமும் எழவில்லை. ஏதோ ஒரு ஜந்து செத்துப் போனதுபோல “பாட்டிக்கு உயிர் போறதை நான் பாத்தேன்” என்று இரவெல்லாம் சொல்லிக் கொண்டிருந்தாள்.. !!

பின்பக்க வீட்டில் ஒப்பாரி ஒலித்துக் கொண்டிருக்க அவள் ஜன்னல் கதவைத் சாத்தி விட்டு அங்கிருந்து அகன்றபோது அம்மா உள்ளே வந்தாள். கையில் நான்கைந்து பொட்டலங்கள் வைத்திருந்தாள். அவள் கண்கள் சிவந்து முகம் வீங்கியிருந்தது. அம்மா உண்மையாக அழுதிருக்க மாட்டாள் என்பது அவளுக்கே தெரியும். பலர் முன் அழ வேண்டிய கடமைக்காக அழுதாலும் கண்களும் முகமும் மாறித்தான் இருந்தது. அம்மாவும் குளித்த ஈரத் தலையுடன்தான் சுற்றிக் கொண்டிருந்தாள்.

“என்னமா அது?” எனக் கேட்டாள் வர்ணிகா.
“பொடிகள்ளாம் ஒண்ணுமேல்ல. போய் வாங்கிட்டு வந்தேன். நீ சிவகாமி அத்தை வீட்டு வரைக்கும் போயிட்டு வா”
“எதுக்குமா?”
“கொஞ்சம் பாத்தரமெல்லாம் வேணும். நான் சொல்லிட்டேன். சின்ன சில்வர் அண்டா ஒண்ணு ரெண்டு கும்பம் கரண்டிக எல்லாம் தரும். அதை வாங்கிட்டு வந்து நம்ம வீட்லயே வெய். அப்பறமா நான் வந்து எடுத்துக்கறேன். அதை சொல்லிட்டு போகத்தான் வந்தேன்” அம்மா சொல்லிவிட்டு உடனே திரும்பினாள்.
“அம்மா பசிக்குதுமா” என்றாள் வர்ணிகா. “நேத்து நைட் சாப்பிட்டது..”
அம்மா அவளைப் பார்த்து சிரித்தபடி “எல்லாருக்கும் பசிதான். சாப்பாடு கடைல சொல்லியாச்சு. இப்ப வந்துரும். நீ சிவகாமி அத்தை வீட்டுக்கு போயிட்டு வந்துரு” என்று விட்டுப் போனாள்.

அம்மா போனதும் வீட்டைச் சாத்திவிட்டு சிவகாமி அத்தை வீட்டிற்குச் சென்றாள் வர்ணிகா. அங்கேயும் கொஞ்சம் கூட்டமாக இருந்தது. எல்லோருமே குளித்த ஈரத்துடன்தானிருந்தனர்.

ஹாலில் தொப்பையுடனிருந்த மாமா “என்ன?” எனக் கேட்டார்.
“அத்தைகிட்ட அம்மா பாத்திரம் வாங்கிட்டு வரச் சொல்லுச்சு மாமா. அத்தை எங்க?”
“நேரா உள்ள போ. கிச்சன்ல இருப்பா பாரு”
கிச்சன் சென்றாள். சிவகாமி அத்தையும் குளித்த தலைமுடியை முதுகில் புரள விட்டபடி கிச்சனில் பிசியாக இருந்தாள்.
“வா வர்ணி”
“அத்தே அம்மா பாத்திரம் வாங்கி வெக்க சொல்லுச்சு”