எனக்கு இதுக்குலாம் நேரம் இல்ல தம்பி End 90

சென்ற அத்தியாத்திலேயே கதை முடிந்துவிட்டது..!! அறுசுவை விருந்தை பருகி முடித்த பின்பும்.. இறுதியில் கொஞ்சம் இனிப்பு சுவைக்க விரும்புவர்களுக்காக மட்டுமே இந்த அத்தியாயம்..!!

அடுத்தநாளே அசோக் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிவிட்டான்..!! ‘பின்னந்தலையில் அடிபட்டு அதிகப்படியான ரத்தம் வெளியானதால், ஒரு நீண்ட மயக்கம்..!! காயத்திற்கு கட்டு போட்டாயிற்று.. சிராய்ப்புகளுக்கு மருந்து பூசியாயிற்று..!! ஊடு கதிர்ப்படம் ஆராய்ந்து.. உட்காயம் ஏதுமில்லையென உறுதியும் செய்தாயிற்று..!! இனி அச்சப்படுவதற்கு அவசியம் ஒன்றும் இல்லை.. இரண்டு நாட்களில் இயல்பு நிலைக்கு திரும்பி விடுவார்..!!’ என்று சிகிச்சையளித்த மருத்துவர் தெளிவாகவே சொல்லிவிட்டார்..!!

சவூதியில் வேலைக்கான தனது ஒப்பந்தத்தை.. முறித்துக்கொள்வதாக மீரா முடிவெடுத்தாள்..!! அவளுக்கு வேலையும் விசாவும் ஏற்பாடு செய்திருந்த கன்ஸல்டன்ஸிக்கு.. நஷ்ட ஈடாக ஒரு கணிசமான தொகையை அழவேண்டி இருந்தது..!! கன்ஸல்டன்ஸியின் வாயை அடைக்கிற பணியை.. மீராவுக்கு அதிக சிரமம் தராமல், மணிபாரதியே கவனித்துக் கொண்டார்..!!

சவூதியில் உபயோகமாகும் என்று கருதி, மீரா வாங்கிய அந்த புத்தகம்.. திறக்கப்படாமல் மூடியே இருந்தது..!! செக்கின் செய்யப்பட்ட அவளுடைய ட்ராவல் பேக் மட்டும்.. ரியாத் வரை பயணித்து.. விமான நிலையத்தின் பொருள் பாதுகாப்பு அறையை நன்றாக சுற்றிப்பார்த்துவிட்டு.. ஒருவாரம் ஆனதும் வேறொரு ஃப்ளைட் பிடித்து சென்னை திரும்பியது..!!

மீராவின் வீடு அபகரிக்கப்பட்டதால்.. அசோக்கின் வீட்டிலேயே அவள் தங்கிக்கொள்ளுமாறு ஆகிப்போனது..!! சங்கீதாவின் அறையிலேயே அவளுக்கென்று ஒரு எக்ஸ்ட்ரா படுக்கை..!! மீரா அசோக்கிடம் சொன்ன நான்கு பெயர்களுடன்.. மீரா என்பதுமே அவளுக்கு ஐந்தாவது பெயராக மாறிப் போனது..!! அசோக்கின் குடும்பத்தினர்.. நித்தி என்று அழைப்பதைவிட.. மீரா என்றே பெரும்பாலும் அழைத்தனர்..!!

—————————–XXXXXXXXXXXXX—————————–

அசோக்கின் வீட்டில்.. மீராவை எல்லோரும் உள்ளங்கையில் வைத்து தாங்கினார்கள் என்றுதான் சொல்லவேண்டும்..!! அசோக்கிற்கு தான் பொருத்தமானவள் இல்லை என்று அவளுக்கு ஒரு நினைப்பிருந்தது அல்லவா..?? அந்த நினைப்பினை அவள் அறியாமலே தவிடுபொடியாக்க வேண்டும் என்பதுதான் அவர்களது திட்டமாக இருந்தது..!! சிற்சிறு உரையாடல்கள்.. சிற்சிறு நடவடிக்கைகள்.. சிற்சிறு அணுகுமுறைகள் என.. எல்லாவற்றின் மூலமாகவும்.. ‘அசோக்கிற்கு மிகப் பொருத்தமானவள் அவள்தான்..’ என்பதை அவளுக்கு உணர்த்திக்கொண்டே இருந்தனர்..!!

“உன்னை மாதிரி அகம் புடிச்ச கழுதைக்குலாம் மீரா மாதிரி ஆளுதான் சரி.. அவதான் பதிலுக்கு பதில் திருப்பி குடுப்பா..!!” – பாரதி மகனை செல்லமாக கடிந்துகொள்வாள்.

“இது உனக்கு சொந்தமானது மீராக்கண்ணு.. உன் கைல இருக்கனும்ன்றதுதான் விதி.. இனி எப்போவும் இதை கழட்டக் கூடாது.. சரியா..??” – அசோக்கின் பாட்டி அந்த பரம்பரை மோதிரத்தை, மீராவின் விரலிலேயே மீண்டும் மாட்டிவிட்டாள்.

“இது நான் எழுதுன லேட்டஸ்ட் நாவல்மா.. படிச்சு பாரு..!! ஹ்ம்ம்ம்ம்.. பிடிக்கலன்னா பிடிக்கலன்னு டீசண்டா சொல்லி பழகனும்.. கன்னாபின்னான்னு திட்டலாம் கூடாது.. மாமா பாவம்ல..!! ஹாஹா..!!” – சிரிப்புடனே மருமகளின் கையில் புத்தகத்தை திணித்து செல்வார் மணிபாரதி.

“எல்லாம்.. மீரா இந்த வீட்டுல அடி எடுத்து வச்ச நேரந்தான்..!!” – காதல் நாய்களுக்கு வாரிசு பிறந்தது முதல்.. காவிரி அணையில் தண்ணீர் திறந்தது வரை.. நடக்கிற நல்ல காரியங்கள் எல்லாவற்றையும்.. மீராவின் வருகையுடன் முடிச்சு போட்டார் அசோக்கின் தாத்தா..!!

அவர்களுடைய மாசற்ற அன்பு மீராவின் மனதை வெகுவாக மாற்றியது..!! தான் வாழவேண்டிய இடம் இதுதான் என்பதை.. அவளுடைய உள்ளமே மெல்ல மெல்ல நம்ப ஆரம்பித்தது.. இந்த இன்பம் என்றும் வேண்டும் என்று ஏங்க ஆரம்பித்தது..!! அசோக்கை விட்டு பிரிந்து செல்ல நினைத்தது, எவ்வளவு பெரிய முட்டாள்தனம் என்று.. அவளே விரைவில் புரிந்துகொண்டாள்..!!

—————————–XXXXXXXXXXXXX—————————–

7 Comments

  1. Good story boss ???????

    ??????????????

  2. Romba nalla kathai?? I loved it,
    Entha mathiri stories la enno naraiya podunga please? super ah eruku??..

  3. It’s a wonderful very nice to your story. I need more love story from you. Thanks

  4. Its not a sex story. Its beautiful awesome love story which melted me so much. I can’t believe that this story ended. I appreciate your work and please continue this story or new love story.

  5. கதை அருமை.

  6. super feeling ?

Comments are closed.