“
“அப்ப நேத்து சுந்தரி சொல்லிக்கிட்டிருந்தது உங்க காதுல விழலையா”
“நீயும் உன் மருமவளும் என்னமோ குசுகுசுன்னு ரகசியம் பேசிக்கிட்டு இருந்தீங்க … கேட்டா, பொம்பளைங்க ஏதோ எங்களுக்குள்ள பேசிக்கிறோம்பீங்க … நான் எதுக்கு குறுக்குல; சிவ சிவான்னு அப்படியே கூடத்துல ஓரமா கிடந்தேன்.”
“இது வரைக்கும் நான் உங்க பேச்சைக் கேட்டுக்கிட்டு இந்த வூட்டுல குப்பை கொட்டிட்டேன்.”
“ம்ம்ம் … இதுக்கு மேல வேற எங்கே போய் பெருக்கி மொழுகப் போறே?”
“இந்த வாய்தான் வேணாம்ன்னு சொல்றேன் நான்..?
“சரிடி நீ விஷயத்துக்கு வா?”
“சுகன்யா, தன் கூட வேலை செய்யற ஒரு பையனை ஆசைப்படறாளாம்…”
“ம்ம்ம் …”
“அந்தப்பையன் நம்ம ஜாதியில்லையாம் …”
“சிவ சிவா; சுகன்யா ஜாதகத்துல ஏழுல ராகு உக்காந்து இருக்கான்னு உனக்கு நான் எப்பவோ சொல்லி வெச்சிருக்கேன்டி…”
“உங்க ஜாதகத்துல ரெண்டுல சனி படுத்துக்கிட்டு இருக்கான்னும் சொல்லி இருக்கீங்க”
“ஏண்டீ… எனக்கே நீ ஜோஸ்யம் கத்துக்குடுக்கறீயா?”
“சிவ சிவா; அந்த தப்பை நான் பண்ணுவனா; உங்களுக்கு யாரு எதை கத்துக்குடுக்க முடியும்?”
“ம்ம்ம்ம் … அப்புறம்..”
“அதனாலத்தான் உங்க திருவாயைக் கொஞ்சம் மூடிக்கிட்டு இருங்கோன்னு சொல்றேன் … இருபத்தஞ்சு வருஷத்துக்கு அப்புறம் என் மருமவ என் வூட்டுக்கு வந்திருக்கா …”
“புரியுதுடி …”
“கடைசிக் காலத்துல அவ கையால ஒரு வாய் தண்ணி குடிச்சிட்டு மூச்சை வுடணும்ன்னு பாக்கிறேன் நான்..”
“சிவ சிவா; நான் மட்டும் என்னா கடைசீல பால் பாயசம் குடிச்சிட்டு மூச்சை வுடணும்ன்னா சொல்றேன்?”
“இந்த ராகு அங்க இருக்கான்; கேது இங்க இருக்கான்ற கதையெல்லாம் ஒரு ஓரமா மூட்டைக்கட்டி வெச்சுட்டு, கல்யாணத்துக்கு கூப்பிட்டாங்களா; ஒழுங்கு மரியாதையா பெரிய மனுஷனா சபையில உக்காந்தமா; அந்த குழந்தைங்க தலையில ரெண்டு அட்சதையை போட்டமா; மனசார ஆசீர்வாதம் பண்ணமான்னு இருங்க; புரியுதா நான் சொல்றது?”
“அப்புறம் …”
“அந்த புள்ளையைப் பெத்தவளும், ஜாதி ஜாதிங்கறளாம் … அவ ஜாதகத்துலேயும் வாக்குல சனியோ என்ன எழவோ தெரியலை … இந்த கல்யாணம் கூடாதுன்னாளாம்.”
“சிவ சிவா;”
“புள்ளை சுகன்யாவைத்தான் பண்ணிக்குவேன்னு ஒத்தைக்கால்லே நிக்கறானாம் … ரெண்டு மூணு நாள்லே அந்த பையனை பெத்தவங்க கும்பகோணத்துக்கு வரலாம்ன்னு சுந்தரி சொன்னா?