வயசு இதுக்கு முக்கியமில்லை பாகம் ஏழு 41

உணர்ச்சி வயப்பட்டு, நடுங்கும் உதடுகளால், வரவழைக்கப்பட்ட கோவத்துடன், அந்த நபர் பேசினார்.

நீ…. நீ பேசாத! நா… நான் உனக்கு ஃபோன் பண்ணியிருந்தேன்ல. நீ கூட ஹெல்ப் பண்ண முடியாதுன்னு சொல்லிட்டீல்ல? என்னை டிஸ்டர்ப் பண்ணாதன்னு சொல்ற அளவுக்கு நான் என்ன தப்பு பண்ணேன்? நா… நான் சாகலாம்னு கூட நினைச்சேன் தெரியுமா.

மதன், அவன் அக்கா, ஹரீஸ் எல்லாருக்கும், அது பெரிய அதிர்ச்சியாகவும், வருத்தமாகவும் இருந்தாலும், அவனுடைய அக்காவோ, இன்னும் நிதானமாகவும், தெளிவாகவும், பிரச்சினையை அணுக வேண்டிய அவசியத்தை உணர்ந்து, சொன்னாள்!

நீ சாகனும்னு நினைச்ச! ஆனா, நான் சாகறதுக்கு அட்டெம்ட்டே பண்ணேன். மதன் மட்டும் சரியான நேரத்துக்கு வந்திருக்காட்டி, இன்னிக்கு நான் இங்க நின்னு பேசிட்டிருக்கவே மாட்டேன். இதுல கூட நமக்கு எவ்ளோ ஒத்துமை பாத்தியா என்று கண்ணீருடன் கூடிய புன்னகையுடன் சிரித்தாள்!

மதனின் அக்கா காட்டும் பரிசுத்தமான அன்பிற்கு, சற்றும் குறையாமல் அதே சுத்தமான அன்பைக் கொடுக்கக் கூடிய அந்த நபருக்கும், இந்த பேச்சு கடும் அதிர்ச்சியை அளித்தது. இருந்த கோபம், பிரச்சினை, வருத்தங்களை எல்லாம் பின் தள்ளி விட்டு, மதனின் அக்காவின் கையைப் பிடித்த படி, புதிய கோபத்துடன் சொன்னார்!

ஏய்… அறைஞ்சுருவேன், இனிமே இப்படி பேசுனா! நாந்தான் லூசு மாதிரி பேசுனேன்னா, நீயும் அப்படியே பேசுவியா? இனி இப்டி பேசுன… படபடப்புடன் வந்த வார்த்தைகளில் தெறிந்த அன்பு அங்கு இருந்த அனைவருக்கும் நிறைவைத் தந்தது.

பதிலுக்கு புன்னகைத்தவள், உன் கூட கொஞ்ச நேரம் பேசனும். நான் பேசுனதுக்கப்புறம், நீ என்ன சொன்னாலும் நான் கேக்குறேன். சரியா? ப்ளீஸ் வா என்று அந்த நபர் கையைப் பிடித்த படி, தன் அறைக்கு அழைத்துச் சென்றாள்.

அவர்களிடையே, தனிமையான உரையாடல் அவசியம் என்பதை உணர்ந்த மதனும், ஹரீசும், பெருமூச்சு விட்ட படி அமர்ந்தனர். இனி, தன் மனைவி பார்த்துக் கொள்ளுவாள் என்ற நம்பிக்கை ஹரீசுக்கு வந்திருந்தது.

அந்த புதிய நபரிடம், ஹரீசுக்கு அதிகம் பழக்கம் இல்லாவிட்டாலும், ஏற்கனவே தன் மனைவியின் மூலம் முழுக்க கேள்விப் பட்டிருந்ததும், ஆரம்பத்தில் தான் போய் கூப்பிட்ட சமயத்தில் கூட நாசுக்காக வர மறுத்தாலும், தன் மனைவி மிகவும் மன வருத்தத்தில் இருப்பதாகச் சொன்ன அடுத்த நொடி கிளம்பிய நபர், இந்த வீட்டுக்கு வந்ததில் இருந்து வெளிப்படுத்திய அன்பு, அவனுக்கும் பெருத்த ஆச்சரியத்தைத் தந்திருந்தது. அவர்களுக்கிடையே இருக்கும் அந்த ஆத்மார்த்தமான அன்பு அவனுக்கும் நிறைவைத் தந்திருந்தது. இந்தப் புரிதல் மிகச் சாதாரணமானதல்ல!

மதன் இதை ஓரளவு எதிர்பார்த்திருந்தாலும், வந்த நபர் உள்ளே வந்ததில் இருந்து, தன்னைப் பார்க்கவோ, தன்னிடம் பேசவோ எந்த முயற்சியும் செய்யாததில், கொஞ்சம் வருத்தமாய் இருந்தாலும், உள்ளுக்குள், அவனும் நிறைவாய்தான் உணர்ந்தான்.

அந்த நபர் இன்னமும் அப்படியேதான் இருக்கிறார்.

அதே அள்ளிக் கொட்டும் அன்பு, முகத்தைப் போலவே, மாசு மருவற்ற மனம், நல்லதையே நினைக்கும் குணம், தனக்கு நெருக்கமானர்வகளிடம் மட்டும் செலுத்தும் அதிகாரம், அதே பட பட பேச்சு என்று அப்பொழுது போலே இப்பொழுதும் என்பதால் அவனுக்கும் மகிழ்ச்சியே!

பழைய மதனாக இருந்திருந்தால், கொஞ்சம் சலனம், ஒன்று கூட முடியுமா என்ற சந்தேகம், இதெல்லாம் வந்திருக்குமோ என்னவோ! ஆனால், இந்த புதிய மதன், மிகத் தெளிவாகவும், எதையும் சந்திக்கும் தைரியத்துடனும் இருந்தான்! ஆகையால் அவன் அமைதியாகவே இருந்தான்.

ஏறக்குறைய ஒரு மணி நேரத்துக்கும் மேல் கழித்து, கையைக் கோர்த்தவாறு வெளி வந்த அந்த இருவரது முகத்தில் பழைய கோபம், வருத்தம், கண்ணீர் எதுவும் இல்லை. அவர்கள் சமாதானமாகிக் கொண்டார்கள், புரிந்து கோண்டார்கள் என்பது தெளிவாக இருந்தாலும், இருவர் முகத்திலும் ஏதோ ஒரு யோசனை இருந்தது.

வெளியே வந்த நபர், சரி நான் கிளம்புறேன். நான் எல்லாத்தையும் அப்படியே விட்டுட்டு வந்துட்டேன். நான் போகனும் என்றார்.

ஏய்.. சாப்ட்டு போலாம் இரு! நான் உன் கூட நிறைய பேசனும்னு நினைச்சேன்.

பேசலாம், நாளைக்கு நான் வரேன். நானும் நிறைய பேசனும். ஆனா, இப்ப கிளம்புறேன்.

ம்ம்ம்.. ஓகே! மதன், போயி விட்டுட்டு வந்திடு!

கொஞ்ச நேரம் கூட அதைக் கேட்டு மதனால் மகிழ்ச்சியடைய முடிய வில்லை. ஏனெனில், பட்டென்று பதில் வந்தது அந்த நபரிடமிருந்து.

இல்லை தேவையில்லை. நான் பாத்துக்குறேன்.

ஏய், எதுக்கு ஆட்டோல போற? அதான் சொல்றேன்ல?

நான் எதுக்கு ஆட்டோல போகனும்?

பின்ன? மதனையும் வேணம்னு சொல்லிட்ட!

பதிலுக்கு, ஹரீசை நெருங்கிய அந்த நபரோ, நீங்கதானே அண்ணா என்னைக் கூட்டிட்டு வந்தீங்க? இப்ப என்னை கொண்டு போய் விட மாட்டீங்களா என்று உரிமையாய், கொஞ்சம் அன்பு கலந்த அதிகாரத்தில் கேட்க, ஹரீஸ் புன்னகையுடன் எழுந்தான். மதனைப் பார்த்து, என்கிட்ட கோவிச்சுக்காத என்று கையைத் தூக்கியவன், டிராப் செய்ய கிளம்பினான்.

சிரிப்புடன் அதனைப் பார்த்துக் கொடிருந்த மதனின் அக்காவைப் பார்த்து முறைத்த அந்த நபரின் பார்வையில், உன்னைப் பத்தி எனக்கு தெரியாதா? என்ற கேள்வி இருந்தது.

பின் திரும்ப, மதனை சட்டையே செய்யாமல், சிறிது தூரம் சென்ற அந்த நபர், தாங்க முடியாமல், திரும்ப மதனிடம் வேகமாக வந்து கோபமாகப் பேசினார்!

உன் கூட பேசக் கூடாது, உன் முகத்துலியே இனி முழிக்கக் கூடாதுன்னுதான் நினைச்சிகிட்டு இருந்தேன். ஆனா, அவ கூட பேசிட்டு, என்னால சும்மா போக முடியலை.

அவ பிரச்சினையை சால்வ் பண்ணிட்டா, நீ என்ன பெரிய இவனா?

நீ ஒழுங்கா இருந்திருந்தா, இந்தப் பிரச்சினையே வந்திருக்காது. அவ, த… தற்கொலை வரைக்கும் யோசிச்சிருக்க மாட்டா. எல்லாத்துக்கும் நீதான் காரணம். என்னிக்குதான் நீ மாறப்போற? இப்பிடியே அடுத்தவிங்க உணர்ச்சியைப் புரிஞ்சுக்காமியே இரு! ச்சே! என்று கோவமாகச் சொல்லிவிட்டு நகர்ந்தார் அந்த நபர்.

இவ்வளவு நேரம் வரை கொஞ்சம் குழப்பத்துடனும், சந்தேகத்துடனும், வருத்தத்துடனும் இருந்த மதனின் முகம், அந்த நபர் திட்டிவிட்டு சென்றவுடன், மிகவும் தெளிவும் மகிழ்ச்சியும் அடைந்தது. மதன் வாய் விட்டே சிரிக்கத் தொடங்கினான்.

ஹா ஹா ஹா!

ஏறக்குறைய அதே மனநிலையில் இருந்த, மதனின் அக்காவும் மகிழ்ச்சியாகக் கேட்டாள்.

என்னடா, திட்டுனதுக்கு இவ்ளோ சந்தோஷமா? அப்ப நானும் உன்னைத் திட்டுறேன்!

Updated: April 1, 2023 — 12:31 pm

1 Comment

  1. Raji ma

Comments are closed.