கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 37 6

“நாலு நாள் முன்னாடி, நான் உன் நிச்சயதார்த்தத்தையே நிறுத்தப் பாத்தேன். உன்னையும் செல்வாவையும் அழவெச்சு பாக்கணும்ன்னு நெனைச்சேன். நானும் நீயும் எட்டு வருஷமா ஒருத்தரை ஒருத்தர் காதலிக்கறோம்ன்னு பொய் சொன்னேன்…
“எங்க நடுவுலே நீ எங்கடா வந்தேன்னு?’ செல்வாகிட்ட உன்னைப்பத்தி தப்புத்தப்பா, தாறுமாறா அவதூறு பேசினேன்.”

“என்ன சொல்றீங்க சம்பத்..?” அவள் உதடுகள் முணுமுணுத்தன. இவன் என்ன சொல்றான்…? தன் மனதுக்குள்ளும் அலறினாள், சுகன்யா. அவள் குரலில் ஆச்சரியம், கோபம், குழப்பம், என பலவிதமான உணர்ச்சிகள் மொத்தமாக கலந்து கட்டி வெளி வந்தன.

“உங்க தாத்தா வீட்டுல உன்னை நான் பாக்க வந்த போது, என்னை, நீ யார்ன்னு, கதவுக்கு வெளியிலே நிக்க வெச்சேன்னு எனக்கு ரொம்பவே கோவம். நீ செவப்பா, அழகா இருக்கே; நான் கருப்பா இருக்கேன்.. அதனாலத்தான் நீ என் கையை பிடிச்சி குலுக்கலேங்கறங்கற, அர்த்தமில்லாத, சீற்றம், ஏமாத்தம், அதிர்ச்சி எனக்கு…”

“அத்தான்… நிஜமாவே நீங்க என்னைத் தப்பாத்தான் புரிஞ்சுக்கிட்டு இருக்கீங்க…?”

“நான் உனக்கு உறவுங்கறதையும் நீ பொருட்படுத்தாம, என் கிட்ட சாதாரணமாகூட பேசாம, என்னை மொத்தமா உதாசீனம் பண்ணிட்டு, உன் ரூமுக்குள்ள போயி, நீ கதவை என் மூஞ்சியிலே அடிச்சு மூடினேன்னு, உன் மேல எனக்கு அடக்கமுடியாத கோவம்…”

“சம்பத்… அன்னைக்கு தாத்தா வீட்டுல நடந்த விஷயங்களை நீங்க சரியா புரிஞ்சிக்கலைன்னு நான் நெனைக்கிறேன்..”

“உன்னைப் பாக்க வந்த என்னை, நீ அவமரியாதை பண்ணேன்னு நான் நெனைச்சேன்; அதுக்காக உன்னை பழிவாங்கணும்ன்னு அந்த இடத்துலேயே முடிவு பண்ணேன்…” சம்பத் தன் குரல் குளற, முகத்தில் வருத்தத்துடன் பேசிக்கொண்டிருந்தான்.

“அத்தான்.. வேடிக்கையா இருக்கு நீங்க பேசறது…. தெரிஞ்சோ, தெரியாமலோ உங்களை நான் இப்படி ஃபீல் பண்ண வெச்சதுக்கு, அயாம் சாரி…” சுகன்யாவின் முகம் தொங்கிப் போயிருந்தது.

“சுகா.. நான் அந்த நேரத்துல எதையும் முழுமையா சிந்திக்கல. மனசுக்குள்ள கோவம்.. கோவம்.. கோவம்… அன்னைக்கு மூர்க்கம் மட்டுமே முழுமையா எனக்குள்ள இருந்தது. அதே நேரம் செல்வாவோட போன் வந்தது… அவன் உன் கிட்ட முக்கியமா ஏதோ பேச விரும்பினான். வீட்டு ஹால்லே அந்த நேரத்துல யாருமே இல்லை. நான் அந்த வாய்ப்பை முழுசா யூஸ் பண்ணிக்கிட்டேன்…”

இவ்வளவு நடந்ததுக்கு அப்புறமும், என் செல்வா என்னை
“நிச்சயம்’ பண்ண கும்பகோணத்துக்கு வந்தானா? இந்த விஷயம் மல்லிகாவுக்கும், நடராஜனுக்கும் தெரிஞ்சுருக்குமா? சம்பத்தை நான் செல்வாவுக்கு அறிமுகம் பண்ணி வெச்சிருக்கேன்… ஆனா இங்க இருந்தப்ப அவன் என் கிட்ட இதைப் பத்தி ஒரு வார்த்தை கூட பேசவேயில்லையே??

எட்டு வருஷம் இவனை நான் காதலிச்சேன்னு சொல்லியிருக்கான்… செல்வா என்னை சந்தேகப்பட்டிருக்கணுமே? எந்த ஒரு ஆம்பளை மனசிலும் சந்தேகம் வரத்தானே செய்யும்? தான் காதலிக்கற பொண்ணைத் தன்னோட ஒருத்தன் இணைச்சுப் பேசினா அது அவனுக்கு அதிர்ச்சியாத்தானே இருக்கும்? சுகன்யாவுக்கு மேற்கொண்டு யோசிப்பதற்கே முடியவில்லை. அவளுக்குத் தன் கண்கள் இருளுவது போலிருந்தது. சம்பத்தை பளாரென அறையலாமா என்ற எண்ணம் வேகமாக அவள் மனதுக்குள் எழுந்தது.

நான் சென்னைக்கு போனதும், நிச்சயமா செல்வா இந்த விஷயத்தைப்பத்தி என் கிட்ட கேப்பானே… நான் அவனுக்கு என்ன பதில் சொல்றது.? சம்பத்துக்கும் எனக்கும் எந்த தொடர்பும் கிடையாதுன்னு அவனுக்கு எப்படி புரிய வெக்கறது? செல்வா எந்த விஷயத்திலும் சுலபமா குழம்பி போறவன். இந்த விஷயத்துல கேக்கவே வேண்டாம். அவன் நிச்சயமா குழம்பி போயிருப்பான். ஆனா இங்க வந்தப்ப ரொம்பத் தெளிவா இருந்தானே? சந்தோஷமா பேசினானே? ஆசையா என் விரல்லே மோதிரம் போட்டானே? திருட்டுத்தனமா என் ரூமுக்குள்ள நுழைஞ்சு, உரிமையா என்னை கட்டிப்புடிச்சி முத்தம் குடுத்துட்டுப் போனானே?