எனக்கு இதுக்குலாம் நேரம் இல்ல தம்பி 4 51

“ஹாஹாஹாஹாஹாஹா..!!!!”

அவள் அதற்கும் சிரித்தாள். மேலும் சிறிது நேரம்..!! நன்றாக ஆசைதீர மனம்விட்டு சிரித்தவள், பிறகு மெல்ல மெல்ல அந்த சிரிப்பை அடக்கிக் கொண்டாள். ப்ளேட்டில் கிடந்த அந்த மிளகாய் துகள் பாக்கெட்டை கிழித்து, அவள் தட்டில் மீதமிருந்த பிஸ்ஸாவின் மேனியெங்கும் மெல்ல தூவினாள். தூவிக்கொண்டே.. இவனை நிமிர்ந்து பாராமலே.. மிக கேஷுவலான குரலில் கேட்டாள்..!!

“லவ் பண்றீங்களா என்னை..??”

அசோக் சுத்தமாக அந்த கேள்வியை எதிர்பார்க்கவில்லை. பக்கென்று அதிர்ந்து போய் அவளை பார்த்தான். பட்டென்று அவனுக்கு நாக்கு வறண்டு போன மாதிரியிருந்தது.

“அ..அது… அ..அதுலாம்.. அது..”

என்ன சொல்வதென்று புரியாமல் தடுமாறினான். அவனுடைய விரல்கள் கூட இப்போது நடுங்க ஆரம்பித்திருந்தன. அவள் இப்போது நிமிர்ந்து இவனுடைய முகத்தை ஏறிட்டாள். இவனுடைய கண்களையே ஷார்ப்பாக ஒரு பார்வை பார்த்தாள். குரலில் ஒரு புதுவித கடுகடுப்புடன் சொன்னாள்.

“இங்க பாருங்க.. மனசுல நெனச்சதை வெளில சொல்ல துப்பு இல்லாதவன.. நான் ஆம்பளையாவே கன்சிடர் பண்றது இல்ல..!! அப்புறம் உங்க இஷ்டம்..!!”

அசோக்கிற்கு வேறு வழி இருக்கவில்லை..!! இப்போது இல்லை என்று சொல்லிவிட்டு.. பிறகு ஏதாவது வில்லங்கம் நேர்ந்துவிட்டால்..?? இவளுடைய குணம் வேறு படுடெரராக இருக்கிறது..?? கிடைத்த குறுகிய நேரத்திலேயே.. யோசித்து ஒரு முடிவுக்கு வந்தவன்.. இப்போது தட்டுத்தடுமாறி சொன்னான்..!!

“ஆ..ஆமாங்க.. ப..பண்றேன்…!!”

“பண்றீங்களா.. என்ன பண்றீங்க..?? தெளிவா சொல்லுங்க..!!” அவள் விரட்டினாள்.

“ல..லவ்வுங்க.. லவ் பண்றேங்க..” அவசரமாகவும், பரிதாபமாகவும் சொன்ன அசோக்..

“ஐ.. ஐ லவ் யூங்க..!!” என்றான் தாழ்ந்த குரலில்.

“ம்ம்.. தேட்ஸ் லைக் எ குட்பாய்..!!” அவள் புன்னகையும், திருப்தியுமாக சொன்னாள்.

சொல்லிவிட்டு மீண்டும் அவளது உணவுத்தட்டை பார்த்து குனிந்துகொண்டாள். பிஸ்ஸாவை துண்டம் செய்தாள்.. வாயில் திணித்து சுவைத்தாள்..!! ‘என் இதயத்தில் நீ இருக்கிறாய்’ என்று இவன் உரைத்திருக்கிறான். ஆனால்.. அவன் ஏதோ ‘எங்க ஏரியாவுல இன்னைக்கு பவர் கட்..’ என்று சொன்னதை போலத்தான் அவளுடைய செய்கை இருந்தது. அவன் சொன்ன விஷயத்திற்கு அந்த அளவிலான ஒரு உணர்ச்சியையே முகத்தில் பிரதிபலித்தாள். அசோக்கோ அவள் என்ன பதில் சொல்லப் போகிறாள் என்ற ஆர்வத்துடன், அவளுடைய முகத்தையே ஆர்வமாக, ‘பே’ என்று பார்த்தவாறு அமர்ந்திருந்தான். ஒரு சில வினாடிகளில் பொறுமை இழந்து போய்..

“எ..என்னங்க.. ஒண்ணுமே சொல்ல மாட்டேன்றிங்க..??” என்று கேட்டே விட்டான்.

“என்னை ‘நீ வா போ’ன்னே சொல்லலாம்..!!”

“ஐயையோ.. ப..பரவாலைங்க.. இருக்கட்டும்..”

“இல்ல.. நான் இனிமே உன்னை அப்படித்தான் கூப்பிடப் போறேன்.. வேணும்னா நீயும் என்னை அப்படி கூப்பிட்டுக்கோ..!! இல்ல கஷ்டமா இருக்குனா ‘நீங்க வாங்க’ன்னே கண்டின்யூ பண்ணு.. எதுனாலும் எனக்கு ஓகே..!!” அவள் கூலாக சொல்ல, ‘என்ன குசும்பு இவளுக்கு..’ என்று அசோக் மனதில் நினைத்துக் கொண்டான்.

“சரிங்.. சரி.. ட்ரை பண்றேன்..!!”

“குட்..!!”

“அதுலாம் இருக்கட்டுங்.. நான் கேட்டதுக்கு எதுவுமே சொல்லலையே..??”

“ம்ம்.. சொல்றேன்.. இரு..!! ம்ம்ம்ம்ம்… ஃபஜிட்டா பன்னீர் ஸ்டஃப்ட் பரிட்டோ.. அப்டின்னு ஒன்னு இருக்கு தெரியுமா..??”

“ம்ஹூம்.. என்ன அது..??” அசோக் நெற்றியை சுருக்கினான்.

“நெறைய வெஜிடபிள்ஸ்.. பன்னீர்.. பீன்ஸ்.. ரைஸ்.. ச்சீஸ்.. எல்லாம் உள்ளவச்சு.. சப்பாத்தி மாதிரி ஒன்னுல ரோல் மாதிரி ராப் பண்ணி தருவாங்க.. அதை ரெட் சில்லி சாஸ் தொட்டுக்கிட்டு ஒரு கடி கடிச்சோம்னு வச்சுக்கோ.. அப்படியே யம்மியா இருக்கும்..!!” அவள் அப்படியே அனுபவித்து ஆசையாக சொன்னாள்.

“ஓ..!! அ..அது சரி.. அதுலாம் எதுக்கு இப்போ எங்கிட்ட சொல்லிட்டு இருக்கீங்.. இ..இருக்க..??”

“அது.. அங்க டேகோ பெல்னு ஒரு ரெஸ்டாரன்ட் கவுன்ட்டர் இருக்குல.. அங்க கெடைக்கும்.. போய் எனக்கு ஒன்னு வாங்கிட்டு வர்றியா..??” அவள் மிக இயல்பாக சொல்ல, இவன் தலையை சொறிந்தான்.

“என்னங்க நீங்க.. நான் எவ்வளவு சீரியஸா பேசிட்டு இருக்கேன்.. நீங்.. நீ என்னடான்னா.. பரிட்டோ சொறிட்டோன்னுட்டு..??”

“இங்க பாரு.. மேற்கொண்டு நான் பேசணும்னா.. போய் எனக்கு ஒரு பரிட்டோ வாங்கிட்டு வா.. இல்லனா எடத்தை காலி பண்ணு.. கெளம்பு..!!”

சொல்லிவிட்டு அவள் பிஸ்ஸா சாப்பிடுவதில் கவனத்தை செலுத்த ஆரம்பித்தாள். இவனை கண்டுகொள்ளவே இல்லை. அசோக் என்ன செய்வது என்று தெரியாமல், சிறிது நேரம் திருதிருவென விழித்தபடி அமர்ந்திருந்தான். பிறகு வேறு எந்த வழியும் இருப்பதாக அவனுக்கு தோன்றாமல் போகவும், ஒரு முடிவுக்கு வந்தவனாய்..

“ச..சரி.. போய் வாங்கிட்டு வர்றேன்..” என்றுவிட்டு எழுந்தான். சலிப்பாக தலையை அசைத்தவாறே, அந்த கவுன்ட்டர் நோக்கி நடந்தான்.

“ஹலோ.. அப்படியே ஒரு கோக் டின்..!!” அவள் பின்னால் இருந்து இரைந்தாள்.

“சரீஈ..!!” அசோக் திரும்பி பார்க்காமலே வெறுப்பாக கத்தினான்.

“டயட் கோக்..!!” அவள் இன்னும் பெரிதாக இரைய,

“சரீஈஈஈ…!!”

அசோக் இன்னும் வெறுப்பாக கத்தியவாறே வேகமாக நடந்தான். ‘ஷ்ஷ்ஷ்ஷ்..’ என்று தலையை ஒருமுறை உலுக்கிக் கொண்டான். ‘ச்சே.. என்ன எழவுடா இது..?? கொஞ்ச நேரம் பேசுனதுக்கே காதுலாம் ‘கொய்ய்ய்ங்’னு இருக்குது.. இவனுகள்லாம் எப்படி மணிக்கணக்குல பேசுறானுக..?? இதுக்கே இவ்வளவு கஷ்டமா இருக்கே.. இவளை எப்படி பேசி சமாளிச்சு லவ் பண்ண வைக்கப் போறேன்..?? இவனுகள்லாம் எப்படி இந்த ஸ்டேஜை க்ராஸ் பண்ணி நெக்ஸ்ட் ஸ்டெப் போனானுக..?? பருப்பு பரதநாட்டியம் ஆடும்னு கிஷோர் சொன்னானே.. இதானா அது..??’

எரிச்சலுடனே சென்று அசோக் அந்தப்பெண் சொன்ன ஐட்டங்களை வாங்கிக்கொண்டான். திரும்பி நடந்து வருகையில், ‘என்னடா இதுலாம்..??’ என்று சைகையால் கேட்ட நண்பர்களுக்கு, ‘நத்திங்..’ என்று சைகையாலே தோளை குலுக்கி புன்னகைத்தான்.

1 Comment

  1. Varakkal thangal

Comments are closed.