எனக்கு இதுக்குலாம் நேரம் இல்ல தம்பி 18 49

அந்த காவல்துறை அதிகாரியின் கண்ணில் சிக்காமல் தப்பித்து.. கல்லிலும் முள்ளிலும் கால்கள் வதையுற ஓடிக்களைத்து.. சீற்றமாக எதிரே வந்த ஆட்டோவை கையசைத்து நிறுத்தி.. ‘சிந்தாதிரிப்பேட்டை போகணும்’ என்றபடி ஏறியமர்ந்தபோதுதான்.. கையிலிருந்த அந்த செல்ஃபோன் சப்தம் எழுப்பியது..!! பதற்றத்துடனேதான் செல்ஃபோன் டிஸ்ப்ளேயில் பார்வையை வீசினாள்.. பார்த்ததுமே அவளுடைய நெஞ்சுக்குள் ஒரு பனிச்சிதறல்..!!

எத்தனை நாட்கள் அந்த எண்களின் வரிசையை ஏக்கமாக பார்த்திருப்பாள்.. எவ்வளவு ஆசையாக அந்த எண்களை அவளது கட்டை விரல் டயல் செய்யும்..?? கண்ணில் விழுந்ததுமே காதலனின் தொடர்பு எண்கள் என்று பளிச்சென அவளுக்கு தெரிந்து போனது..!! பேசலாமா வேண்டாமா என மிகுந்த மனப் போராட்டத்துக்கு பிறகுதான்.. காலை பிக்கப் செய்து அவனுடன் பேசினாள்..!!

நேரில் அசோக்கின் முகத்தை பார்த்ததிலும், ஃபோனில் அவனது குரலை கேட்டதிலும்.. சிறிது நாட்களாக இறுகிப் போயிருந்த மீராவின் இதயம்.. இப்போது மீண்டும் இளக்கம் கொடுக்க ஆரம்பித்திருந்தது..!! அவளும்.. காதலுக்கும் கழிவிரக்கத்துக்கும் இடையில் சிக்குண்டு.. சிதையுற ஆரம்பித்திருந்தாள்..!!

‘மீ..மீரா.. ப்ளீஸ் மீரா.. கட் பண்ணிடாத மீரா..!!’

அசோக் சற்றுமுன் ஃபோனில் தவிப்புடன் கதறியது.. இப்போது மீராவின் காதுக்குள் மீண்டும் ஒலிக்க.. அவளது அழுகை ஒலியின் டெசிபல் மேலும் அதிகமாகவே செய்தது..!! அழுதவாறே ‘ஸாரிடா அசோக்’ என்று வாய்க்குள்ளேயே முணுமுணுத்தாள்.. புகைப்படத்தில் படிந்திருந்த கண்ணீர் துளிகளை, கட்டைவிரலால் துடைத்தெடுத்தாள்..!!

‘நம்ம காதல் உண்மையானது மீரா.. அது நம்மளை சேர்த்து வைக்கும்..!!’

அவளுக்குள் மீண்டும் அசோக்கின் குரல்..!! உடனே.. ‘அப்படி ஏதாவது ஒரு அதிசயம் நடந்து.. அவனுடன் இணைந்து விடமாட்டோமா..??’ என்றொரு ஏக்கமான உணர்வு.. மீராவின் மனதுக்குள் பரவியது..!! வேதனையில் பொசுங்கிக் கொண்டிருந்த அவளது இதயத்தை.. மெல்லிய மயிலிறகால் வருடிச் சென்றது அந்த உணர்வு..!!

‘உன்னோட பழைய வாழ்க்கை பத்தி எனக்கு எந்த கவலையும் இல்ல மீரா.. நீ எனக்கு வேணும்.. அவ்வளவுதான்..!!’

‘என்மீதுதான் அவனுக்கு எத்தனை அப்பழுக்கற்ற காதல்..?? விலகிச் சென்றாலும் விட மறுக்கிறானே..?? களங்கம் பொருட்டல்ல கலந்திடலாம் வா என்றழைக்கிறானே..?? கலந்திடலாமா.. காற்றென இப்போதே கிளம்பி சென்று, காதலனின் நெஞ்சில் சாய்ந்து கவலைதீர அழலாமா..??’

ஓடிச்சென்று அவனை அணைத்துக்கொண்டு மார்பில் முகம் புதைத்துக் கொள்வது மாதிரி.. அவள் மனதுக்குள் ஒரு கற்பனை ஓட.. அந்த நொடியில்.. அவளுடைய மனதை இறுக்கிக்கொண்டிருந்த அழுத்தம் மொத்தமும்.. இலவம்பஞ்சென மாறிச்சிதறி அவளை விட்டகன்று.. அவளுக்கும் அப்படியே காற்றில் பறப்பது போலொரு இலகுவான உணர்வு..!! ஆனால் அடுத்த நொடியே.. அந்த மாதிரி நினைத்ததற்காக தன்னைத்தானே அவள் கடிந்து கொண்டாள்..!!

‘ச்ச்சே.. ஏனடி பைத்தியம் இப்படி எல்லாம் மனதை அலைபாய விடுகிறாய்..?? ‘உடலை இன்னொருவனுடன் பகிர்ந்துகொண்டவள் என்கிற உண்மையறிந்தும்.. உன்னுடனே வாழ்வினை பகிர்ந்துகொள்வதில் அவன் உறுதியாக இருக்கிறான்..’ என்பதினால் உருவாகிட்ட உவகையோ..?? அவனுக்குத்தான் உன்மீது பித்து என்றால்.. உனக்கெங்கே போயிற்று புத்தி..?? அவனுடைய காதல் அழுத்தமானதுதான்.. ஆனால் அத்தகைய காதலுக்கு நீ பொருத்தமானவளா..?? யோசி..!!!!’

என்பது மாதிரி ஒரு எண்ணம் இப்போது அவளுக்குள் தோன்ற.. மீண்டும் கழிவிரக்கத்தின் பிடியில் சிக்கி கண்ணீர் வடிக்க ஆரம்பித்தாள்..!! அவளது உதடுகள் துடிக்க.. மூக்கு விசும்பிக் கொண்டது..!!

‘வேண்டாத நினைப்பெல்லாம் வெட்டி எறிந்துவிடு.. எடுத்த முடிவில் எப்போதும் உறுதியாக இரு..!! அவனுக்கு நீ வேண்டாம்.. அவனுடைய நல்ல மனதிற்கு தகுதியான ஒருத்தியுடன்தான், அவனது இல்வாழ்க்கை அமைந்திட வேண்டும்.. அதை என்றும் மனதில் நிறுத்திக்கொள்..!!’

திரும்ப திரும்ப அந்த மாதிரி தனக்குத்தானே சொல்லிக்கொண்டு.. அலைபாய்கிற மனதை ஒருநிலையில் நிறுத்தி வைக்க முயன்றாள்..!! ஆனால்.. அந்த முயற்சியில் அவளால் வெற்றி பெற முடியவில்லை..!! புள்ளிமானாய் துள்ளியோடிய மனதை கட்டிப்போட.. காய்ந்தகொடியாய் துவண்டிருந்த மீராவால் சற்றும் முடியவில்லை..!!