கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 39 12

“அண்ணா… யாரோன்னு மலைச்சுப் போயிருக்கீங்க.. உங்களுக்கு அடையாளம் தெரியலியா… நம்ம சீனுவேதான்… டேய் சட்டுன்னு குளிச்சிட்டு வாடா… டிஃபன் ரெடியா இருக்கு…” உஷா தன் மருமகனின் தலைக்குள் தன் இடது கை விரல்களை நுழைத்து அவன் முடியைக் விளையாட்டாக கலைத்தாள்.

“அத்தே குளிக்கறது எல்லாம் அப்புறம்… பசி உயிர் போவுது… நேத்து ராத்திரியே ஒண்ணும் சரியா சாப்பிடலே… முதல்ல நீங்க டிஃபனை குடுங்கோன்னா…” பிள்ளை செல்லமாக அத்தையின் இடுப்பைக் கட்டிக்கொண்டது. அவள் நெற்றியில் ஆசையாக முத்தமிட்டது.

“போன வேலையெல்லாம் நல்லபடியா முடிஞ்சுதாடா…” ஒரு வாரமாக வீட்டில் இல்லாத பிள்ளையை கண்களில் பாசத்துடன் பார்த்தாள், பத்மா.

“ஆச்சு… ஆச்சு.. அத்தே.. இன்னும் ரெண்டு வடையை தள்ளுங்க இப்படீ…”

முகத்தில் ஆச்சரியத்துடன் இன்னும் தன்னையே உற்று நோக்கிக்கொண்டிருக்கும் தந்தையை ஓரக்கண்ணால் பார்த்தவாறே, சீனு எப்போதும் போல் சாப்பாட்டு ராமனாக மாறி, தட்டிலிருந்த பொங்கலை, வேகமாக உருட்டி உருட்டி, மென்று திண்ணக்கூட பொறுமையில்லாமல், கோழியைப் போல் அவசர அவசரமாக விழுங்கிக்கொண்டிருந்தான். சட்டென ஒரு பருக்கை நெஞ்சுக்குழலில் சிக்கி பொறை ஏறி இருமினான்.

“யாரோ… என் புள்ளையை நெனைச்சுக்கறா?” பத்மா அவன் தலையைத் தட்டினாள்.

யாரு என்னை இப்ப நெனைச்சுக்கறது… மீனாவா இருக்குமா! கண்களில் கண்ணீர் ததும்ப சிரித்தான், சீனு.

“டேய் சீனு.. மெதுவா சாப்பிடுடா… சாப்பிடும் போது பேசாதடா.. தொண்டையில சிக்கிக்கும்ன்னு எத்தனை தடவைடா உனக்கு சொல்லியிருக்கேன்” ஏறக்குறைய ஒரு வருடத்திற்கு பிறகு ராகவன் தன் மகனிடம் அன்புடன் பேச ஆரம்பித்தார். பாசத்தில் அவர் குரல் தழதழத்தது.

“அப்பா…”

ஒரு நொடி விக்கித்துப் போனான், சீனு. அப்பாவா…!! அவர் கோபத்தையும், தாபத்தையும், விட்டுட்டு எங்கிட்ட பேசறார்..? அவன் இருமிக்கொண்டே எழுந்தான், தன் எச்சில் கையோடு தந்தையின் கழுத்தைக் கட்டிக்கொண்டான். அவர் கன்னத்தோடு தன் கன்னத்தை சேர்த்துக்கொண்டான். சட்டென கண்கள் குளமாக மாறி, ஒரு சொட்டு கண்ணீர், கன்னத்தில் இறங்கி ஓட, அம்மாவையும், அத்தையையும் மாறி மாறிப் பார்த்தான்.

“இப்பத்தான் நீ நம்மாத்து புள்ளையா இருக்கேடா… ம்ம்ம்.. உக்காந்து பரபரப்பில்லாம சாப்பிடுடா…” தழுதழுத்த குரலில் பேசிக்கொண்டே ராகவன் அவன் தோளில் கையை போட்டுக்கொண்டார்.

“அப்பா… நான் குடிக்கறதை விட்டுட்டேன்ம்பா.. சிகரெட் பிடிக்கறதையும் கொறைச்சுட்டேன்.. அதையும் சீக்கிரமே மொத்தமா விட்டுடறேன்.. அயாம் சாரிப்பா…” சீனு தீடிரென ஓசையெழுப்பாமல், தன் உடல் குலுங்க அழ ஆரம்பித்தான்.

“இவ்வளவு நாள் உங்க புள்ளைகிட்ட பேசாமலே இருந்து அவனை அழவெச்சீங்க.. இப்பதான் ஒரு வாரம் கழிச்சி வீட்டுக்குள்ளே நுழைஞ்சவனை இப்ப பேசியே அழவெக்கறீங்க…”

“நீ வாடா இப்படி.. எதுக்குடா அழுவுறே நீ… என் ராஜா” பத்மா விருட்டென எழுந்து தன் பிள்ளையை தன் தோளுடன் அணைத்துக்கொண்டாள்.

ஆஞ்சேனேயா… இந்த செவ்வாக்கிழமை நான் உனக்கு வடைமாலை சாத்தறேம்பா… உஷா தன் கண்களைத் துடைத்துக்கொண்டாள். மனதிலிருக்கும் பாசத்தை வார்த்தைகளில் கொட்டமுடியாமல் தவிக்கும் தன் அண்ணனையும், விசும்பிக்கொண்டிருக்கும், தன் ஆசை மருமகனையும், மனநிறைவுடன் மாறி மாறிப் பார்த்துக்கொண்டு நின்றாள்.
“சீனு…”

“சொல்லுங்க அத்தே…”

“குடிக்கறதை விட்டுட்டே; சிகரெட்டை விட்டுடப் போறேன்னு, நீ சொன்னதை கேட்டதுலேருந்து நாங்க ரொம்ப சந்தோஷமா ஆயிட்டோம்டா…”

“அத்தே.. இப்பத்தான் பத்து பதினைஞ்சு நாள் முன்னாடி, எப்படியாவது இந்த பழக்கம் என்னை விட்டு போனா சரின்னு, இனி குடிக்க மாட்டேன்னு சத்தியம் பண்ணிக்குடுத்துட்டேன்..” தலையை குனிந்து கொண்டு மெல்லியக் குரலில் பேசினான், சீனு

“கேக்கறதுக்கே ஆச்சரியமா இருக்குடா.. நாங்க சொன்னப்பல்லாம் கேக்காதவன், யார் சொல்லிடா இந்த குடி சனியனை விட்டே? அவங்க யாரா இருந்தாலும் நான் பாத்தே ஆவணும்..!” பத்மா வியப்புடன் கேட்டாள்.

“நிச்சயமா… அவளை நம்ம வீட்டுக்கு அழைச்சிக்கிட்டு வர்றேன்…” தன் காதல் கதையை வீட்டுக்குள் அவிழ்த்துவிட இதுதான் நல்ல சமயம் என புரிந்து கொண்டு உற்சாகமாக பேச ஆரம்பித்தான், சீனு.

“அவளா…?”

“ஆமா அத்தே… ஒரு பொண்ணு சொல்லித்தான் விட்டுட்டேன்..”

“சீனு… அந்தப் பொண்ணு யாராயிருந்தாலும், அவ மகராசியா நல்லா இருக்கட்டும்…” முகம் தெரியாத அவளை ஆசிர்வாதம் செய்தார், ராகவன்.

“நீங்க கொஞ்சம் சும்மா இருக்கீங்களா… அவன் ஏதோ சொல்ல வர்றான்… அடுத்தவங்களைப் பேசவிடாம குறுக்க பூந்துடுவீங்களே?” பத்மா அவர் வாயை அடைத்தாள்.