கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 39 11

ராகவன் குளித்துவிட்டு வந்தபோது, பத்மாவும், உஷாவும் டைனிங் டேபிளில் அவருக்காக காத்திருந்தார்கள்.

காலை டிபனுக்காக, சூடான வெண் பொங்கலும், மெது வடையும் தயாராக இருந்தது. தொட்டுக்கொள்ள தேங்காய் சட்னியும், சின்ன வெங்காயத்தை உரித்து, கறிவேப்பிலையை தக்காளியுடன் சேர்த்து வதக்கி, பருப்பை நன்றாக வேகவைத்து மசித்து கொட்டி, மல்லி விதை அதனுடன் வெந்தயத்தையும், தேங்காய் துறுவலையும் வறுத்து பொடி பண்ணிச் சேர்த்து, புளியை குறைவாக ஊற்றி, கலவையை நன்றாக கொதிக்க வைத்து, கடைசியில் கொத்தமல்லியை தூவி, ஹோட்டல் சாம்பாராக அதை இறக்கியிருந்தாள், உஷா.

“உஷா… பொங்கல் திவ்யமா இருக்கும்மா… இப்ப நீ என்னை என்னக் கேட்டாலும் குடுத்துடுவேன்..” ஒரு விள்ளலை சாம்பாரில் நனைத்து, வாயில் போட்டு சுவைத்தவர், நாக்கை சப்புக் கொட்டிக்கொண்டு, முகத்தில் திருப்தியுடன் தங்கையைப் பாராட்டினார்.

“ஆமாம்… பொழுது போனா பொழுது விடிஞ்சா இதே கதைதான்; நீங்களும் உங்களுக்கு இருக்கற ஒரே வீட்டை எத்தனை தரம்தான் உஷா பேருக்கு எழுதி வெப்பீங்க..” கலகலவென சிரித்தாள், பத்மா.

“மனசுல சந்தோஷமா எந்த காரியத்தை செய்தாலும்.. பகவானோட நாமத்தை சொல்லிண்டு சேஞ்சா அது நன்னாத்தான் வரும்.. என்ன மன்னீ நான் சொல்றது…?” உஷா அண்ணனைப் பார்த்து மென்மையாக சிரித்துக்கொண்டே, இன்னொரு கரண்டி பொங்கலை அவர் தட்டில் எடுத்து வைத்தாள்.

“போதும்டா… கண்ணு… வயிறு ரொம்பினாலும் கண்ணு நிறைய மாட்டேங்குது.. வரதராஜா.. பெருமாளே… கடைசி விள்ளலை வழித்து வாயில் போட்டுக்கொண்ட ராகவன் தட்டில் கையை உதறினார்.

“டொய்ங்க்க்க்… டிங்க்…” காலிங் பெல் ஒலித்தது.

“சீனுவாத்தான் இருக்கும்…” துள்ளி எழுந்து வாசலுக்கு ஓடினாள், சாப்பிட்டுக்கொண்டிருந்த உஷா.

தோளில் பழுப்பு நிறத்தில் தோல் பையும், கையில் மீடியம் சைஸ் டிராவலருமாக ஹாலுக்குள் நுழைந்த கீழப்பந்தல் நாராயனன் சீனுவாசனின் தலை முடி சீராக ஒட்டவெட்டப்பட்டு, முகத்தில் தாடி மீசை எதுவுமில்லாமல், பளிச்சென்று இருந்தான்.

என் புள்ளை சீனுவா இது? எப்படி இருந்தவன் இப்படி மாறிட்டான்? என்னால நம்பவே முடியலியே? எதனால இந்த மாத்தம்? சீனுவை ஓரக்கண்ணால் பார்த்த ராகவன் ஒரு நொடி திகைத்தார்.

“என் புள்ளையை ராத்திரி அவதாரம்ன்னு சொன்னீங்களே… இப்ப சொல்லுங்க…’ அவர் முகத்தில் எழுந்த ஆச்சரிய உணர்ச்சியை சட்டெனப் படித்த பத்மாவின் முகத்தில் புன்முறுவல் ஒன்று எழுந்தது.

“வாடா…வா… ஆட்டோவுல வந்தியா…?” பத்மா எழுந்து அவன் தோளிலிருந்த பையை வாங்கிக்கொண்டாள்.