கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 19 7

ஆட்டோ நகர்ந்ததும், தெருவின் இரு புறத்தையும் பார்த்துக்கொண்டே, அவர்கள் சிவதாணுவின் வீட்டை நோக்கி, சாலையை கடக்க ஆரம்பித்தவுடன், கனகாவின் மனம் துள்ளியது… நம்ம வீட்டுக்குத்தான் விருந்தாளியா … அவர் சொன்னது சரியாப் போச்சே? யாரு? … சுந்தரி மாதிரி தெரியுதே? சுந்தரிதானா? அப்ப கூட வர்றது … சுகன்யாவா? என் பேத்தியா? அவள் கண்களை அவள் நம்பவில்லை. உடல் பரபரக்க காம்பவுண்டு கதவை நோக்கி ஓடினாள் கிழவி.

“வாம்மா கண்ணு… சுகன்யா … வாடி என் கண்ணு … சுந்தரி … நீயும் உள்ள வாம்மா … வா..” கனகா, பதட்டத்தில் குரல் தடுமாற காம்பவுண்ட் கதவை திறந்து, சுகன்யாவை இழுத்து தன் மார்போடு அணைத்து நெற்றியில் முத்தமிட்டாள்.

“நல்லாயிருக்கீங்களா அத்தை …” சுந்தரி பரிவுடன் வினவினாள்.

“எனக்கென்னம்மா … நீ நல்லாயிருக்கியா … அதைச் சொல்லும்மா..” தன் மருமகளை ஒரு கையால் தன் புறம் இழுத்துக்கொண்டாள்.

“என்னங்க … தூங்கினது போதும் … எழுந்துருங்க … யார் வந்திருக்கறதுன்னு பாருங்க … நீங்க கொஞ்சம் தப்பா சொல்லிட்டீங்க; நீங்க சொன்ன மாதிரி விருந்தாளி வரலீங்க நம்ம வீட்டுக்கு; இந்த வீட்டுக்கு முழு உரிமை உள்ளவங்க வந்திருக்காங்க ..” கிழவி சின்னப் பெண்ணாக துள்ளினாள்.

“தாத்தா … உங்களைப் பாக்கறதுக்கு நான் சுகன்யா வந்திருக்கேன் தாத்தா …”

“வாடா கண்ணு … சுகன்யா … உன் அம்மா வல்லியாம்மா? கிழவர் பரபரத்தார்.

“வந்திருக்காங்க தாத்தா; இதோ பின்னாடி வர்றாங்க..” சுகன்யா, ஈஸிசேரிலிருந்து தட்டுத் தடுமாறி எழுந்த தன் தாத்தாவின் கையை பிடித்துக்கொண்டாள். சிவதாணுவின் உடல் சிலிர்த்தது. என் ரத்தம் இது. என் ரத்தம் என்னைத் தொட்டதும், என் உடம்பு அடையாளம் கண்டுகிச்சே? சுகன்யாவின் புறங்கையில் பாசமுடம் முத்தமிட்டார் சிவதாணு.

சுந்தரி காம்பவுண்ட் கதவை மூடிக்கொண்டு தன் வீட்டுக்குள் நுழைந்தாள். வாசல் படியில் ஒரு நொடி தயங்கி நின்றாள். அன்னைக்கு தாலி கட்டிக்கிட்டு, என் புருஷனோட இந்த இடத்துலதான் வந்து நின்னேன்! அப்ப இந்த கம்பி கதவு எதுவும் இல்லே; என் மாமனாரும், இன்னைக்கு எங்க நிற்கிறாரோ அங்கதான், கொஞ்சம் பின்னாடி, தலையில கையை வெச்சிக்கிட்டு, ஏதோ குடிமுழுகிப் போன மாதிரி, அந்த சுவத்துல சாய்ஞ்சு உக்காந்து இருந்தார். அன்னைக்கு எனக்கு இந்த வீட்டுல எந்த வரவேற்பும் இல்லை. இன்னைக்கு … சுந்தரியின் மனது பழைய நினைவில் ஒரு நொடி மூழ்கி நின்றது. அவள் கால்கள் சற்றேத் தயங்கி நின்றன.

“அம்மா சுந்தரி, ஏம்மா தயங்கி தயங்கி இன்னும் வெளியிலேயே நிக்கறே; உள்ள வாம்மா; இது உன் வீடும்மா; உள்ளே வாம்மா…” அன்று உள்ளே வராதே என்று சிங்கமாக கர்ஜித்தவர், இன்று கன்றுகுட்டியாக தன் குரல் தழுதழுக்க சுந்தரியை வீட்டுக்குள் அழைத்தவாறு அவளை நோக்கி ஒரு தப்படி எடுத்து வைத்தார். சுந்தரியை நோக்கி நடக்க ஆரம்பித்தவர், உடல் பரபரத்து நடை தடுமாறி, தன் மருமகளை நோக்கி இருகைகளையும் கூப்ப முயற்சித்தார்.

“மாமா … நான் தான் வந்துட்டேனே மாமா … நீங்க உக்காருங்க; தன்னை நோக்கி உயர்ந்த அவர் கரங்களை சுந்தரி தன் கையால் வேகமாகப் பிடித்துக்கொண்டாள். மருமகளின் கை தன் உடலில் பட்டதும், சிவதாணுவின் உடல் நடுங்கியது. சுந்தரி அவரை ஈஸிசேரில் உட்க்கார வைத்தாள். தானும் அவர் பக்கத்தில் தரையில் உட்க்கார்ந்து கொண்டாள். கண்கள் குளமாக உணர்ச்சிப் பெருக்கில் இருந்த தன் மாமானாரின் கையை தன் கைகளால் மெல்ல வருடினாள்.

“அம்மா சுந்தரி, நான் உன்னை தப்பா பேசிட்டேம்ம்மா… எங்க கிட்ட நீ கோவமா இருந்ததுல ஞாயமிருக்கு…. சிவதாணுவின் நாக்கு பேச முடியாமல் குழறியது. தன் இடது கையால் தன் மருமகளின் தலையை பாசத்துடன் வருடியவாறு பேசினார்.

“மாமா … ப்ளீஸ் … மாமா! நீங்க எனக்கு எந்த விளக்கமும் குடுக்க வேண்டாம். நீங்க தான் என்னை மன்னிக்கணும். அஞ்சு வருஷம் முன்னாடியே நீங்க என்னை ரகு மூலமா வீட்டுக்கு வான்னு கூப்பிட்டீங்க. அன்னைக்கே நான் இந்த வீட்டுக்குள்ள வந்திருக்கணும். ஆனா நான் தான் பிடிவாதமா வரலே. தப்பு என்னுதுதான். ஆனா அதுக்கு ஒரு காரணமிருந்தது.”

“என்னம்மா சொல்றே நீ”

“அப்ப உங்க மகன் என் கூட இல்லை. நான் எந்த உரிமையில நான் இந்த வீட்டுல நுழையறதுன்னு தயங்கினேன். ஆனா உங்க மகன், என் புருஷன் இப்ப என் கிட்ட திரும்பி வந்துட்டார். நானும் உடனே உங்களைப் பாக்க, உங்க பேத்தியையும் அழைச்சுக்கிட்டு ஓடி வந்துட்டேன். ப்ளீஸ் … இப்ப நீங்க எதுவும் பேச வேண்டாம். எனக்கு உங்க மேல எந்த கோபமும் இல்லை. சிவதாணு தன் கண்களைத் துடைத்துக்கொண்டு அமைதியாக தன் மருமகளைப் பாசத்துடன் பார்த்துக்கொண்டிருந்தார்.