கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 19 7

கனகா குளித்ததும், அவசரஅவசரமாக இட்லி குக்கரை அடுப்பில் ஏற்றினாள். பட்டுப்புடவையொன்றை எடுத்து உடலில் சுற்றிக்கொண்டு, ஈரத்தை இழுக்க ஒரு பருத்தி துண்டை தலையில் சுற்றியவாறு தெரு வரந்தாவிற்கு வந்தாள். மணி எட்டரை ஆயிடுச்சு. பசி தாங்க மாட்டாரே? சத்தத்தையும் காணோம், உக்காந்துக்கிட்டே தூங்கிட்டாரா? கிச்சனுக்கு சென்று வெந்த இட்லிகளை எடுத்து ஹாட் கேசில் வைத்து மூடினாள்.

கனகா திரும்பி வந்து பார்த்தப்போதும் சிவதாணு தூங்கிக்கொண்டிருந்தார். சிவதாணுவின் விழிகள் மூடியிருந்தது. சன்னமான குறட்டையொலி அவர் கண்டத்திலிருந்து வந்து கொண்டிருந்தது. தலை நிற்காமல் ஆடிக்கொண்டிருந்தது. பத்து நிமிடம் இப்படி தூக்கத்திலிருப்பார். தெருவில் ஸ்கூட்டர் வேகமாக சத்தத்துடன் போகும். சடக்கென விழித்துக்கொள்வார். சிவா சிவா; என் அப்பனே, வாய் முனகும்.

மனைவியை கூப்பிடுவார்.
“என்ன வேணும்?” குரல் மட்டும் வரும். கனகா வரமாட்டாள். கனகா டிவியில் எதையாவது பார்த்துக்கொண்டிருப்பாள். கூப்பிட்ட குரலுக்கு பதில் கிடைத்தால்,
“நீ இருக்கியான்னு பார்த்தேன் என்று முனகுவார்”. பக்கத்திலிருக்கும் கைவிசிறியை மெதுவாக சுழற்றிக்கொண்டிருப்பார். பின் தேவாரம், திருவாசம் என்று ஏதாவது ஒரு திருமுறையை கையில் எடுத்துக்கொள்வார். தூங்கி வழிவார். புத்தகம் கையிலிருந்து நழுவி கீழே விழும். ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை இந்த நாடகம் தவறாமல் அரங்கேறும்.

கம்பிக்கதவை திறந்துகொண்டு, காம்பவுண்டுக்குள் நின்றவாறு தலையை உலர்த்த ஆரம்பித்தாள் கனகா. தலை தும்பைப் பூவாக வெளுத்திருந்தது. நெற்றியில் விபூதியும், குங்குமம் பளபளத்தன. கைகள் அசையும் வேகத்திற்கேற்ப, மூன்று ஜோடி தங்க வளையல்கள் ஒன்றின் மேல் ஒன்று மோதி கிணுகிணுத்தன. கிழவியின் கழுத்தில் பத்து சவரனுக்கும் குறையாத கனத்தில் தாம்புகயிறு செயின் ஆடிக்கொண்டிருந்தது. அம்பாள் டாலருடன் அதை விட இன்னோரு மெல்லிய செயின் அதனுடன் பின்னி கொண்டு இளம் மஞ்சள் வெயிலில், மினுமினுத்துக்கொண்டிருந்தது. மஞ்சள் கயிற்றில் கோத்திருந்த தாலி மட்டும் ரவிக்கைக்குள் கனகாவின் மார்பில் எப்போதும் உறவாடிக்கொண்டிருக்கும்.

பேத்தியின் பிறந்த நாள் வரும். கனகா ஒரு தங்க காசை வாங்கி அவளுக்கென தனியாக வைத்து விடுவாள். பொங்கல், தீபாவளி, பண்டிகை நாட்க்கள், கணவருக்கு கிடைத்த போனஸ், சிறுக சிறுகத் தங்கமாக மாறி லாக்கரில் பேத்தியின் வரவை நோக்கி காத்திருந்தன. இதுவரைக்கும் எனக்கு இது வேணும் அது வேணும்ன்னு கேட்டது இல்லை. என்னவோ பண்ணிட்டுப் போறா? சிவதாணு தன் மனைவியின் இந்த விஷயத்தில் எப்போதும் தலையிட்டதில்லை.

எல்லாம் பேத்திக்குத்தான். என்னைக்காவது வீட்டுக்கு வரமாட்டாளா? பாட்டீன்னு ஆசையா கூப்பிடமாட்டாளா? இந்த ஒரு ஆசையைத் தவிர கனகாவின் மனதில் வேறு எந்த விருப்பமும் இல்லை. கனகாவுக்கு எதிலும் ஆசையில்லை. பற்றில்லை. எல்லாவற்றையும் உதறிவிட்டு ஓடுவதற்கு மனம் துடித்துக்கொண்டிருந்தது.

சீறிக்கொண்டு வந்த ஆட்டோ, எதிர் வீட்டு வாசலில் கீறிச்சிட்டு நின்றது. கனகா நிமிர்ந்தாள். ம்ம்ம்… விருந்து வருதுடீன்னு சொல்லிக்கிட்டு இருந்தார். காக்கா பட்டு மாமி வீட்டைப் பாத்து கரைஞ்சிருக்கு. அவங்க வீட்டுக்கு விருந்தாளி வந்திருக்காங்க. கனகாவின் உதடுகளில் புன்னகை மலர்ந்தது.

ஆட்டோவிலிருந்து இறங்கிய, மஞ்சள் நிற சுடிதாரும், பச்சை நிற கமீஸும் அணிந்திருந்த இளம் பெண், பர்ஸைத் திறந்து பணம் எடுத்துக்கொண்டிருக்க, சிவப்பு பட்டு உடுத்தி, வெள்ளை நிற ஜாக்கெட்டில், ஒரு நடுத்தர வயது பெண்மணி கையில் பையுடன் இறங்கிக்கொண்டிருந்தாள். யாருன்னுத் தெரியலையே, ஆள் தெரியுது, முகம் தெரியலையே … கண்ணாடி போட்டாத்தான் முகம் தெரியற நிலைக்கு பார்வை வந்தாச்சு… பகவானே இன்னும் எத்தனை நாளைக்கு … இதெல்லாம்..? கனகாவின் மனம் நொந்துகொண்டது.