கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 19 7

ஒரு வேலையும் செய்யாம, பென்ஷனை வாங்கி உக்காந்தே சாப்பிட்டுக்கிட்டு, பதினைஞ்சு வருஷத்தைக் கடத்தியாச்சு; மனசுல ஒரே ஆசைதான் பாக்கியிருக்கு. ஆசையா அது? கடமை; கடமையாச்சே? என் கடமையை நான் சரியா செய்யாமா போனா கட்டை வேகுமா? அந்த குழந்தைங்க கூட கொஞ்ச நாள் இருந்து, அதுங்களுக்கு செய்ய வேண்டியதை செய்துட்டா போய்கிட்டே இருக்க வேண்டியதுதான்.

நான் தயாரா இருக்கேன். அந்த சிவன் கூப்பிடமாட்டேங்கறான். கூப்பிட்டா உடனே போகறதுக்கு ரெடி; சிவாய நம … சிவாய நம … பழக்கத்தால் பரதேசியின் நாமத்தை வாய் மீண்டும் மீண்டும் முணுமுணுத்தது.

ம்ம்ம்ம் … வைராக்கியம்ன்னு சொன்னா, என் மருமகளைத்தான் அதுக்கு உதாரணமா காட்டணும். புதுப்புடவையோட, கழுத்துல தாலியும், முகத்துல மிரட்சியுமா, என் புள்ளை கையை புடிச்சுக்கிட்டு, பயந்து பயந்து இந்த வெராண்டா முனையிலத்தான் வந்து நின்னா! மானமுள்ளவளா இருந்தா இந்த வீட்டுக்குள்ள நுழையாதேன்னு கூவினேன். இருபத்தைஞ்சு வருஷமாச்சு. சிவதாணு! நான் மானமுள்ளவடா! இன்னும் இந்த தெருப்பக்கம் கூட அவ வந்தது இல்லே.

என் வீட்டுக்குள்ளத்தான் அவ நுழையலை. அவ வீட்டுக்காவது திரும்பி போனாளா? அதுவுமில்லே. நான் மானமுள்ளவன்னு தனியாவே நின்னு அவங்களுக்கும் சவால் விட்டு, எனக்கும் சவால் விட்டா. தனியா நின்னு ஜெயிச்சுக்கிட்டு இருக்க்கா!

என் புள்ளை உடம்புல என் ரத்தம்தானே ஓடும்? புடிச்ச தன் பொண்டாட்டி கையை கெட்டியா புடிச்சானா? ஒரே வருஷத்துல தங்கமா ஒரு பூங்கொத்தை பெத்து போட்டுட்டு, தறுதலையா அவளை விட்டுட்டு ஓடிட்டான். எப்படித்தான் குடிக்க கத்துக்கிட்டானோ? என்னாலத்தான் அவன் குடிக்க ஆரம்பிச்சான்னு கனகா சொல்றா. என் பொண்டாட்டியே கேக்கிறா இந்த பாவமெல்லாம் எங்களை விடுமான்னு? சிவாய நம; சிவாய நம.

வீடு இருக்கு; வாசல் இருக்கு; நீர் இருக்கு; நிலம் இருக்கு; பேங்க்குல பணமிருக்கு; என்ன இருந்து என்ன பலன்; என் மூஞ்சை நீ பாரு; உன் மூஞ்சை நான் பாக்கிறேன்; கிழவனும் கிழவியும், ஒருத்தர் கிட்ட ஒருத்தர் மல்லு குடுத்துக்கிட்டு நிக்கறோம். இதான் என் வாழ்க்கை; இது ஒரு வாழ்க்கையா?

ஜாடை மாடையா சொல்லி அனுப்பிச்சேன். மசியலையே அவ; பஸ் ஸ்டேண்ட் பக்கத்துல தாமு கடைக்கு பக்கத்துல நின்னு, அந்த குழந்தை என் பேத்தி … அழகா யூனிஃபார்ம் போட்டுக்கிட்டு, பள்ளிக்கூடம் போறதையும் வரதையும், திருட்டுத்தனமா கிழவனும், கிழவியுமா பாத்துக்கிட்டு நிப்போம். ஒரு தரம் வாம்மா நம்ம வீட்டுக்குப் போவலாம்ன்னு கூப்பிட்டேன்.

சிவ சிவா; நீ யாருன்னு கேட்டா? பேத்தி – பாட்டனைக் கேக்கற கேள்வியா? நான் இன்னும் உசுரோட இருக்கேன். நான் உன் தாத்தாம்மா; இது உன் பாட்டின்னேன். மாட்டேன். நீங்க கெட்டத் தாத்தாவாம். எங்க அம்மாவை வீட்டை விட்டே தொரத்தினீங்களாமே?

நான் ஏன் உங்க வீட்டுக்கு வரணும்? எங்கம்மா உங்களுக்கு வேணாம்? நான் மட்டும் வேணுமா?நான் உங்க வீட்டுக்கு வரமாட்டேன். என் அம்மா என்னைத் திட்டுவாங்கன்னு திரும்பிப் பாக்காம, ஓட்டமா ஓடுச்சு அந்த குழந்தை. அன்னைக்கு அந்த சின்னக்குழந்தைக்கிட்ட வாங்கின அடி; அந்த அடியோட வலி; இன்னைக்கும் என் மனசுல பாக்கியிருக்குது. இந்த நெஞ்சுவலி அந்தக் குழந்தை இந்த வீட்டுக்கு வந்தாத்தானே போகும்?

தனியா ஒத்தையில நின்னு பெத்தப் பொண்ணை; என் பேத்தியை; இந்த வீட்டு வாரிசை வளர்த்தா என் மருமவ! என் கூட்டாளிங்க அப்ப அப்ப சொல்லுவானுங்க; யோவ் சிவதாணு! உன் பேத்தி கிளி மாதிரி இருக்காய்யா; அப்படியே உன் மருமவ ஜாடை; போன வாரம் உன் பேத்தி வயசுக்கு வந்துட்டாளாம். இப்பவாவது வீம்பை விட்டுட்டு, அந்த பொண்ணு கையில கால்லே விழுந்து, அவளையும், பேத்தியையும், வீட்டுக்கு கூப்பிட்டுக்கிட்டு வாய்யா? ஏன்யா உனக்கு இந்த புடிவாதம்?