அவளின் வாழ்க்கை 93

…………

…………

பிறகென்ன..? “சங்கீத ஸ்வரங்கள் ஏழே கணக்கா, இன்னும் இருக்கா.. என்னமோ மயக்கம்” என்ற ரேஞ்ச்சுக்கு அவள் டூயட் பாடத் தொடங்கி விட்டிருக்க ” பொறுங்க. அம்மா கூப்பிடுறா, நான் பிறகு கதைக்கிறன்” என்று வைத்துவிட்டான்.

“ரிங்..ரிங்.. ரிங்..ரிங்.. ரிங்..ரிங்..” அந்த ரூமில்தான் போன் அடித்துக்கொண்டிருந்தது. அவளோ கேளாததுபோல் யன்னலுக்கு வெளியே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தாள்.

செத்துவிடலாம் போலிருந்தது. ஆனால் யாருக்கும் பிரச்சினை குடுக்காமல் சாகணும். அதுக்குத்தானே இங்கு வந்திருக்கிறாள். ஆனால் எப்படிச்சாவது எண்டு தான் தெரியவில்லை. தற்கொலை செய்யலாம் எண்டாலும், ஆசைகள் நிறைவேறாமல் செத்தால் ஆவியாய் அங்கயே அலைவார்கள் எண்டு எங்கையோ படிச்சதால அதுக்கும் விருப்பமில்லை. வாழவும் கூடாது ஆனால் தற்கொலையும் செய்யக் கூடாதெண்டால் எப்படி? யாராவது கொலை செய்தால் தான் உண்டு. ஆனால் அதுவும் பிறகு ஆவியாய் வந்து வஞ்சம் தீர்க்கப் புறப்பட்டு விட்டால் என்ன செய்வது? குழப்பமாய் இருந்தது அவளுக்கு.

சுப்பிரமணி, அது அவனது பட்டப் பெயர். அவர்களது டீச்சர் தான் வைத்தது. காரணம் மறந்துவிட்டது. அவனை அவளுக்கு சிறு வயதிலிருந்தே தெரியும். படிப்பில் கெட்டிக்காரன். வாழ்க்கையில் எப்படியாவது முன்னேறி பலர் போற்றும் ஒரு பெரிய புள்ளியாய் வந்துவிட வேண்டும் என்ற வெறி அவனிடம் சிறுவயதிலிருந்தே இருந்தது. ஆண்கள் என்றாலே கதைப்பதற்கு தயங்கும் இவளுக்கு அந்தநேரத்தில் ஒரு ஆண் நண்பன் என்று இருந்திருந்தால் அது இவனாகத்தான் இருந்திருக்கும். அவளது வாழ்க்கையின் பல முக்கிய கட்டங்களில் இவனது பிரசன்னமும் இருந்திருக்கிறது. ஆனால் இந்த முறைதான் அவளது வாழ்க்கையே புரட்டிப் போட்ட சில முக்கிய காரணிகளில் ஒருவனாய் வந்தான்.

“இன்று முதியோர் இல்லத்துக்குப் போகிறேன், உனக்கு விருப்பமெண்டால் கூட வரலாம்.” என்று அவன் சொன்ன போது, வீட்டில் சும்மாய் இருந்து மூளையைக் குழப்பிக்கொண்டிருக்காமல் கொஞ்சம் போய்ட்டுதான் வருவமே என்று தோன்றியது. அவளது அப்பா பல தொண்டு நிறுவனங்களில் வேலை செய்ததாலேயோ என்னமோ, சின்ன வயதிலிருந்தே அவளுக்கு தொண்டு செய்வதில் ஆர்வமிருந்தது.

அவன் வரச்சொன்ன இடத்தை பஸ் அடைந்ததும், வெளியே பார்த்தாள். அவன் பஸ் நிறுத்துமிடத்தில் நின்றுகொண்டிருந்தான். வழமையாய் அவன் கூடவே ஒட்டிக்கொண்டிருக்கும் அந்த பைக்கை காணவில்லை. அவனது கண்ணியத்தை எண்ணி மனதுக்குள் மகிழ்ந்து கொண்டாள்.

“என்ன இடம் பக்கத்திலையா?”
“இல்லை, கொஞ்சத்தூரம் தான். நடந்தே போய்டலாம்” சரியென்று கூடவே நடக்கத் தொடங்கினாள். சிறுவயதில் ஒரு fantasyயாய்த் தொடங்கி இப்ப ஒரு சில நாட்களாய்த்தான் மனம்விட்டு பகிரக்கூடிய ஒரு நெருங்கிய நண்பனாய் ஆகிவிட்டிருந்தான்.

“அதிசயமாய் பைக்கை விட்டிட்டு வந்திருக்கிறீங்க?”
“சர்வீஸ்க்கு விட்டிருக்கு. இன்னும் வரேல்லை.”
“ஒ.. மற்றவங்களை எத்திட்டுப்போனா உங்கடை லவர் ஏதாச்சும் சொல்லுவாங்கள் எண்டுதான் விட்டிடு வந்தீங்களோ எண்டு நினைச்சன்.”
“யார் லிசவா.. She is very broadminded”
அவளுக்குப் புரியவில்லை, ஆனால் தலையை மட்டும் ஆட்டிவைத்தாள்.

இன்னும் கனதூரம் நடக்க வேணுமே?” நேற்று முழுக்க karate பயிற்சி. இன்றுதான் கால் நோகத் தொடங்கி இருந்தது. சும்மா வாழ்க்கைக்குதவாத ஒன்றைப் படிக்கப் போய் வீட்டில வந்து அதுநோவுது இதுநோவுது எண்டு படுத்துக் கிடக்கிறதுதான் மிச்சம். அம்மாவின் திட்டல் நினைவுக்குவந்தது.

“இல்லை கொஞ்சத்தூரம் தான்..” சிறிது தயங்கிவிட்டுப் பின், “ஆனா அதுக்கு முதல்ல வேறை ஒரு இடத்துக்குப் போறம்”

“எங்க?”

“உனக்கு பிடிச்ச இடம் தான். போன பிறகு தெரிந்து கொள்ளுவாய் தானே..”

அதற்குமேல் ஒன்றும் கேட்கத் தோன்றவில்லை. சிறுவயதுக் கதைகளின் சுவாரசியத்தில் மூழ்கிவிட்டிருந்தாள். அதே டீச்சர்தான் இவளது எழுத்தைக் கிண்டல் பண்ணி ‘மாட்டுக்கொட்டில்’ என்றதும், அதுக்கு அவள் அழுததும், பிறகு அவரே வந்து சமாதனப் படுத்தியதும். எவ்வளவு நல்ல டீச்சர் மாணவர்களுடன் தானுமொருவராய் இருந்து அவர்களுக்கு பாடம் சொல்லிக்கொடுப்பார். இதுவரை அவரிடம் படித்த யாருமே அவவை மறந்ததில்லை.

அந்த உச்சி வெயிலிலும் கடற்கரைக் காற்று சில்லென்று உடம்பில் படத்தான் எங்கு வந்திருக்கிறோம் என்று புரிந்தது. ஆனால் ஏன் இங்கு கூட்டிவந்தான் என்று தான் புரியவில்லை. ஒருவேளை சுதாவை வரச்சொல்லியிருப்பானோ? ஒரு நிமிஷம் மனசுக்குள் மத்தாப்பு. ஆனால் அடுத்த நிமிசமே, அப்படி வந்தாலுமே.. “இட்ஸ் டூ லேட்”.. காரணம் இவனுக்கும் தெரியும். கண்ணீர்த்திரை கண்களை மறைத்தது.

யாரோ ஒருபெண் சிங்களத்தில் திட்டும் சத்தம் கேட்டு திரும்பியவளின் நெற்றியில் விழுந்த முடியை ஓரமாய்த் தள்ளிவிடும் அளவுக்கு, அந்த கடற்கரைக் காத்துக்கு வலிமையிருக்கவில்லை.

“டக்.. டக்..” கதவு தட்டும் சத்தம் கேட்டு சுயநினைவுக்கு வந்தவள் கடிகாரத்தைப் பார்த்தால் நேரம் நண்பகலைத் தாண்டியிருந்தது. எழுந்துசென்று கதவைத் திறந்தாள்.