அவளின் வாழ்க்கை 92

“இத்தினை நாளாய் எனக்கு தாறத்துக்குத்தான் உழைக்கிறன் எண்டு சொல்லிட்டு, இப்படி தூக்கிக் கொடுக்கிறத்துக்குத்தான் இத்தினை வருசமா தனிய இருந்து கஷ்டப்பட்டு சம்பாதிச்சநீன்களா?” அவளின் கடைசிக் கனவும் தகர்ந்ததில் கோபம் கோபமாய் வந்தது.
“எங்கடை கடமையைத்தான் செய்தம். கலியானத்துக்குப்பிறகு நீ கடன் அதிதெண்டு கஷ்டப்படக் கூடாது அதுதான்.” இவர் குடுத்தாலுமே, அவர்கள் கடன் வாங்கத்தான் போகிறார்கள். அவர்களைச் சொல்லிக் குற்றமில்லை. ஒரு பொம்பிளைபிள்ளையை வைச்சுக்கொண்டே அவளிண்ட அப்பாவுக்கு இவ்வளவு கனவெண்டா, அவர்கள் ரெண்டு பெடியங்களையுமேல்லே பெத்துவைச்சிருக்கினம்.

அவனைப்பிடிக்கும்.. நிறையவே.. இதுவரை கண்ணீரைத் தவிர வேறெதையுமே அறியாத அவளை தினம் தினம் சிரிக்க வைத்தான். பேச வைத்தான். மறுபடி எழுதவைத்தான். ஆனா அதுக்காக கலியாணம் எண்டபேரில யாரோட வாழ்க்கையையும் பாழாக்க முடியாது. அவனுக்குமெண்டு தன் மனைவியைப் பத்தி ஒரு கனவிருக்கும்தானே.

“அதுக்கு..? எனக்கெண்டு இதுவரைக்கும் பெரிசா எதுவும் கேட்டிருக்கிறனா? இதுவரைக்கும் படிச்சது கூட scholarshipல தானே..” அவள் அங்கை போய் ஒண்டும் படிச்சுக் கிழிக்கப் போறதில்லை. ஆனாலும் நிம்மதியா கொஞ்சநாளாச்சும் யாரோடை தொனதொனப்புமில்லாமல் இருக்கலாமே எண்டுதான். அவளால் எல்லாரையும் போல சராசரி மனைவியாய் ஒரு வட்டத்தைப் போட்டுக்கொண்டு இதுதான் வாழ்க்கை எண்டு அதுக்குள்ளயே சுத்திச் சுத்தி வரமுடியாது.

ஆயிரம் ஆயிரம் வேங்கைகளைப் போலவே அவளுக்குமொரு கனவிருந்தது. ஒரு தேசமிருந்தது. அது காலத்தின் கட்டாயத்தில் அழிக்கப்பட்டாலுமே அதன் வலியிருக்கிறதே. அதைப் பதிவு செய்ய வேண்டும். ஆழமாக.. மிக ஆழமாக.. அவளின் கனவுகளை.. அவர்களின் கனவுகளையும் சேர்த்தே..

“இது நீ கேட்காமலே நாங்கள் செய்யவேண்டியது. அது எங்கடை கடமை.” கடமையாவது மண்ணாங்கட்டியாவது. அவளது தோழிகள் பத்துப் பதினைஞ்சு பவுணிலை கழுத்தைச் சுத்திப் போட்டுக்கொண்டிருக்கிறதை அவளுக்கும் மாட்டி அழகுபாக்கவேனும். அதுதானே?
முந்தி அங்கை எண்டாலும் பரவாயில்லை அவங்கள் இருக்கேக்கை நடுநிசியிலையுமே நகையைப் போட்டுக்கொண்டு தைரியமாப் போகலாம். இங்கை இப்ப பொட்டுத் தங்கத்துக்காக பட்டப்பகல்லையே கொலை நடக்கிற இடத்தில இருந்தும் கூட ‘பொம்பிளைப் பிள்ளையள் நகை போடாமல் வெளிய போகக் கூடாது’ என்ற அம்மாவின் அரியண்டத்துக்காகவே இப்பகொஞ்சநாளா அவளுடன் ஒட்டிக் கொண்டிருக்கும் ஒருசோடித் தோடு, அந்த முக்கால் பவுண் சிங்கப்பூர் செயின், ஒரு ராசிக் கல்லுவைத்த மோதிரம். எல்லாம் சேர்த்து என்ன ஒரு ரெண்டு பவுன் இருக்குமா..?

*****

பாகம் இரண்டு : ஒரு கொடி

“எல்லாம் சரி தான். ஆனா கொடி வாங்கிறத்துக்கு எப்படியும் ஒரு ரெண்டு லட்சம் வரும். கடன் தான் எடுக்க வேணும்.” என்றபோதே கடன்தான் வாழ்க்கையாகிவிட்டிருன்தது புரிந்தது. வேறுவழியில்லை.

பேசாமல் முன்வீட்டு அக்கா போட்டுக்கொண்டிருந்ததைப் போல ரெண்டு பவுணிலை ஒருதாலிய வாங்கி மஞ்சள் கயித்தில கட்டிவிட்டா கலியாணம் எண்டு சொல்ல மாட்டினமே? தினமும் மஞ்சள் பூசிக் குளித்துவரும் அவவின் முகத்தைப் போலவே தாலியும் பார்க்க அழகா இருக்கும். எங்கடை தாலி மாதிரி இல்லாம அவங்கடை இலச்சினை பொறிச்சு, பாயும் புலியின் கண்களைப் போலவே சும்மா தகதகவென்று மின்னும். பத்துப் பவுனில தாலிய செஞ்சு பெட்டில பூட்டி வைக்கிறத்துக்கு, இது எவ்வளவோ மேல் என்று தோன்றியது.

ஒவ்வொரு முறையும் அவா வயலின் கிளாஸ்சுக்கு வரேக்க அவளுக்கு ஒருக்கா எடுத்து காட்டவேணும். இல்லாட்டி மூஞ்சிய தூக்கி வச்சுக்கொண்டு இருப்பாள்.

“உள்ளை யாரையேன் பாத்து வைச்சிருக்கிறியே என்ன? ” கடைசியாய் வந்தபோது அம்மா கேட்டதுக்கு
“அதெல்லாம் இல்லை..” என்று அவர் சொன்னதைக்கேட்டு கொஞ்சம் நிம்மதியாய்த்தானிருந்தது.
“போய் ஏழு வருசத்துக்கு மேலை தானே. கலியாணம் கட்டலாம் தானே?” அம்மா விட்டபாடில்லை.
“அதுக்கெல்லாம் எனக்கு இப்ப நேரமில்ல சும்மா போங்கோ” சிரித்துக்கொண்டே சொன்னபோது கொஞ்சம் கவலையாய் இருந்தது.

அடுத்தமுறை வரேக்கை அவரிட்டை சொல்லி இப்படி ஒரு தாலி செய்து கொண்டுவரச் சொல்லவேணும். ஆனா யாரேன் அறிஞ்சா இன்னும் பெரியவளே ஆகேல்லை அதுக்குள்ளை கலியாண ஆசையைப் பார் எண்டு கிண்டல் பண்ணுவினம். அதாலை அதுவரைக்கும் அவவிண்ட தாலியைப் பாத்துக் கொண்டிருக்க வேண்டியதுதான்.

“கொடியெல்லாம் வேண்டாம். பேசாமல் மஞ்சள் கயித்தில தாலியைக் கட்டலாம் தானே?” அவள்தான் கேட்டாள்.
“எங்கடை தகுதிக்கு சரிப்பட்டு வராது. நாலுபேர் நாலுவிதமா நாக்கிலை பல்லைப்போட்டு கதைக்குங்கள். குறைஞ்சது ஒன்பது பவுனிலையாச்சும் கொடி போட வேணும்.” அவள் அம்மா சொன்ன தகுதி என்னவென்று புரியவில்லை. ஒரு பத்துப் பவுன் கொடியிலை போற தகுதியைக் காப்பாத்த வாழ்க்கை முழுவதும் போராட வேணுமா என்ன?

ஒரு தொப்புள் கொடி உறவுக்காய்.. சமூகத்தில் அதன் அங்கீகாரத்திற்காய்.. சன்றோனாக்கும் அதன் கல்விக்காய்.. தொலைந்துபோன உரிமைகளுக்காய்.. வாழ்க்கைப் பாதையில் போராடிப் போராடி.. கடைசியில் என்னத்தைக் கண்டோம்?

“ஏற்கனவே போராட்டம் போராட்டம் எண்டு போய் எங்கடை சனம் இருக்கிறதையும் இழந்ததுதான் மிச்சம். வெளிநாட்டிலை போய் யாராருக்கெல்லாமோ கொடிதூக்கிக்கொண்டு அடிமையாய் இருந்து அவங்களுக்கு உழைச்சுக் கொட்டுறதை கொஞ்சம் பொறுமையாய் இருந்து சொந்த நாட்டிலையே செய்திருந்தால் இன்றைக்கு எங்கடை சனம் எவ்வளவு முன்னேறி இருக்கும்.” சொன்னது நிச்சயமாய் அவளில்லை.

அவளுக்கு உந்த அரசியல் தெரியாமலிருக்கலாம், புரியாமலிருக்கலாம். ஆனால் சாதாரண ஒரு பெண்ணாய் எல்லோர் வாக்குறுதிகளையும் நம்பி ஏமாந்த ஒரு சராசரித் தமிழன் போல அவளுக்குமெண்டு ஒரு பார்வை இருக்கும் தானே. அதைச் சொல்ல நிச்சயமாய் அவளுக்கு உரிமையுண்டுதானே?

“சிங்களவன் எங்களை அடிமைப் படுத்துறான் எண்டு சொல்லிக்கொண்டு தமிழனைத் தமிழனே ஏமாத்தி அடிமையாய் வைத்திருந்தது தான் மிச்சம். போராடிச் செத்ததைவிட, உரிமையை மீட்டுத் தருவதாய்ச் சொல்லிய அரசியல்வாதிகளால் வஞ்சிக்கப்பட்ட, நசுக்கப்பட்ட தமிழர்கள் தானே அதிகம்.” என்று அவள் சொல்லப்போனால் முளைச்சு மூணுஇல்லை விடேல்லை நீயெல்லாம் போய் அரசியல் தெரியுமெண்டு கதைக்கிறியா என்று அரசியலைக் கரைச்சுக் குடிச்ச மேதாவிப் பெரியவர்கள் சொல்லுவினம். அதுவேறை அவளின் வீட்டிலை நவக்கிரகம் மாதிரி ஒவ்வொருவருக்கும் தனித்தனி அரசியல் பார்வைகள். ஒரு வீட்டிலையே இப்படி ஒன்பதுபேர் எண்டா நாட்டிலை கேட்கவா வேணும்? மக்கள் பாவம்.

“அண்டைக்கு மட்டும் அமிர்தலிங்கத்தை சுடாமல் இருந்திருந்தால் எப்பவோ சமாதானம் வந்திருக்கும். எங்கடை உரிமையும் கிடைச்சிருக்கும்.” கூடவேயிருந்த பெரியண்னர் சொன்னபோது ஆச்சரியப்பட்டிருக்கிறாள்.

“அமிர்தலிங்கம் அற்ப சலுகைகளுக்கு விலைபோன ஒரு துரோகி.”
“நாங்கள் தான் முதல்ல போராட்டத்தை தொடக்கினம். அதிலை ஜெயிலுக்கெல்லாம் போயிருக்கிறம் தெரியுமே.”
“உங்கடை ஆக்கள் கொள்ளையடிச்ச நகையை எல்லாம் அவங்கள் தானே மீட்டது”
“காதலுக்காக துவக்கெடுத்து சுட்டவந்தானே.. இவன் எப்படி மக்களைக் காக்கிறது?”
“தலைவர் ஒழுக்கத்தைத்தான் முன்னிலைப் படுத்துறவர். அதாலைதான் இத்தினை வருஷ போராட்டத்திலயும் அவங்கள் பெண்கள் விசியத்திலை எல்லை மீறினதில்லை. மீறவிட்டதுமில்லை.”
“அதுக்கு நடுச் சந்தியில கட்டி வைச்சு அதில சுடுறதே. பாக்கிறதுகளுக்கு மனநிலை பாதிக்குமேல்லே”
“தண்டனை கூடவாயிருந்தால் தான் குற்றங்கள் குறையும். ஆனா அதுக்காண்டி எல்லாரும் நீதியைக் கையிலை எடுக்ககூடாது.”
சத்தியமாய் இவை ஒருவருக்கொருவர் முற்றிலும் மாறுபட்ட கருத்துக்களைக் கொண்ட நவக்கிரகங்களின் வாதப் பிரதிவாதங்கள். ஒருவரை ஒருவர் ஆமோதிப்பதுபோல் எதிர்ப்பது, எதிர்ப்பதுபோல் ஆமோதிப்பது. என்ன கன்றாவி அரசியலோ..?
“நாங்கள் எல்லாம் சேர்ந்து மக்களுக்கு நல்லதை நினைச்சுத்தான் தொடங்கினம். ஆனா இவங்கள் வந்து எல்லாரையுமே போட்டுத்தள்ளிட்டு தாங்கள் தான் மக்களிண்டை ஏகப் பிரதிநிதி எண்டு சொல்லிக்கொண்டு சனத்தைச் சாகடிச்சது தான் மிச்சம்.” என்ற சித்தப்பாவின் முப்பதுவருஷ அரசியல் அனுபவத்தில் வந்த வார்த்தைகளில் உண்மையாகவே ஆதங்கம் இருந்தது.