“இருந்து சாப்பிட்டுப் போவன்?”
“இல்லையக்கா. நான் அவசரமாப் போகவேணும்.”
“வீட்டை போட்டே வாறே?”
“இல்லை.. இனித்தான்.” எழுந்தவரை,
“இவ்வளவு தூரத்திலிருந்து வந்திட்டு.. ஒரு டீயாச்சும் குடிச்சிட்டுப்போ.”
“வேண்டாமக்கா. வெறும் தண்ணி மட்டும் குடுங்கோ..”
“சும்மாயிரு. கனநாளைக்குப் பிறகு வந்திட்டு.. இப்பல்லாம் என்ன குடிக்கிறனீ?  கோப்பியோ.. டீயோ?”
“எதெண்டாலும்..” என்று இழுத்தபடி, அருகிலிருந்தவனை என்ன என்பதுபோல் பார்க்க, அவன் பேசாமல் தலையாட்டினான். எப்படி இவரால் கண்களாலேயே கதைக்க முடிகிறது? வியந்தாள்.
“ரெண்டு போடுங்கோ..” சொல்லிவிட்டு ஷோகேசுக்கு மேலிருந்த ஒரு புத்தகத்தை எடுத்துக்கொண்டு போய்க் கதிரையில் அமர்ந்தார்.
“இஞ்சை வா.. வந்து உந்த வயலினில் ஏதோ இயக்கப்பாட்டு வாசிப்பியே அதை அவனுக்கு வாசிச்சுக் காட்டன்..” அவள் மாட்டேன் மாட்டேன் எண்ணவும் பிடித்து இழுத்துக்கொண்டுவந்து விட்டுவிட்டு கையிலை வயலின் பெட்டியை திணித்துவிட்டு குசினிக்குப் போய் விட்டார் அம்மா.
வெட்கத்தில் காலால் மார்பிள்நிலத்திலேயே கோலம் போட்டுக் கொண்டிருந்தவளைப் பார்த்தவர் புத்தகத்தைக் கீழே வைத்துவிட்டு, கைகளை நெஞ்சுக்குக் குறுக்கால் கட்டிக்கொண்டு, “என்ன பாட்டு? எங்கை எனக்கு வாசிச்சுக் காட்டு பாப்பம்?” அவருக்கேயுரிய அந்தப் புன்சிரிப்புடன் ஒருபக்கம் லேசாய் தலையைச்சரித்து கேட்டதை ரசித்தாள்.
அவள் வயலினை எடுத்து ஷோகேசுக்குப் பின்னால் மறைந்திருந்து “குயிலே பாடு..” வாசிச்சு முடிக்கவும், “இவள் இப்பெல்லாம் ஒரே இயக்கப் பாட்டுத்தான் வாசிச்சுக் கொண்டிருக்கிறாள். எக்ஸாம்ல கேக்குறதை வாசிச்சுப் பழகு எண்டு சொன்னாலுமே கேக்கிறாளில்லை. அதால எப்பவுமே செக்கன்ட் கிளாஸ்தான் வருகுது.” குசினியிலிருந்தவாறே அம்மா வத்திவைக்க, அவள் கோபமாய் வயலினின் சட்ஜ நரம்பை அறுத்துவிடுவது போல் தட்டினாள். வெளியில் நாய் குலைத்தது. கூடவந்தவன் எழுந்து சென்று என்னவென்று பார்க்கப் போய்விட,
அப்போதுதான் கிட்டவந்து, அவள் கைகளிலிருந்து மீளத்துடித்த வயலினுக்கு விடுதலை கொடுத்துவிட்டு, கோபத்தில் சிவந்திருந்த அவள் முகத்தைப் பார்த்துச் சிரித்தார். குனிந்ததலை நிமிராமலிருந்தவளின் நெற்றியில் விழுந்திருந்த முடியை விரல்களால் விலக்கி… “அம்மா சொல்றதைக் கேட்டு, நல்லாப் படிக்க வேணும் என்ன?” என்றபடி கன்னத்தை தட்டிவிட்டார். உடல்சிலிர்த்திட நிமிர்ந்தவள், அந்தக் கண்களை முதன் முதலாய் நேருக்கு நேர் இவ்வளவு அருகில் இப்போது தான் பார்க்கிறாள். எவ்வளவு தீர்க்கம்? காந்தக் கண்கள் என்பது இவைதானா? கண்ணன் என்பதன் காரணப்பெயர் இப்போது புரிந்தது.
ஒரு ஆணின் கண்களுக்கு இவ்வளவு சக்தியிருக்க முடியுமா என்ன?  அவை அவளை ஆழமாய் ஊடுருவிச் செல்லத் தயங்கித் தடுமாறியவள், ஒருவாறு சமாளித்துப் பின் எச்சிலை விழுங்கியபடி,
“நானும் உங்க கூட வரட்டுமா..?” வெட்கத்தை விட்டுக் கேட்டே விட்டாள்.
யாரோ கதவைத் தட்டினார்கள். திறந்தாள். மெலிதான தோற்றம், சற்றே உயரமாயிருந்த அவனை முன்பின் பார்த்ததில்லை. “எதுவும் கதைக்காமல் பின்னாலையே வா.” மெலிதான குரலில் சொல்லிவிட்டு திரும்பிப் பார்க்காமல் விறுவிறு எண்டு போய் இரண்டு ரூம் தள்ளி இருந்த ஒரு ரூமிட்க்குள் சென்று மறைந்து விட்டான்.
போவதா வேண்டாமா எண்டு யோசிச்சுக் கொண்டிருக்கையில் போன் அடித்தது.
“அவன் கூடப் போ. வன்னிக்குப் போகிறத்துக்கு ஹெல்ப் பண்ணுவான்.” சொன்னது யார்? தெரியவில்லை.
இதுவரைக்கும் வந்தாச்சு. பேசாமல் போய்த்தான் பாப்பமே? தைரியத்தை வரவழைத்துக் கொண்டு போய்ப் பார்த்தால் அங்கு ஏற்கனவே மூன்று பேர் இருந்தனர், ஒரு பெண் உட்பட.
ஒருவிதத் தயக்கத்துடன் உள்ளே சென்றதும் முதலில் வந்தவன் அவசர அவசரமாய்க் கதவைப் பூட்டி விட்டு,
“எங்கை வந்து என்ன சொல்லிக்கொண்டு இருக்கிறாய் எண்டு தெரியுமே? யாரும் கேள்விப் பட்டால் உன்ட  உடல்ல உயிர் இருக்காது.” அவன் குரலில் பதற்றமிருந்தது.
உயிருக்குப் பயந்தவள் எண்டால் இதுவரை வந்திருப்பாளா என்ன? அவர்களும் யோசித்திருப்பார்களோ?
சிறிது நேர அமைதியைக் கலைத்தபடி அந்தப் பெண்தான் கேட்டாள்.
“சரி, உமக்கு உள்ளை யாரையும் தெரியுமே?”
இப்போது அவளுக்குச் சந்தேகம் வந்தது. இவர்கள் உண்மையிலேயே தொடர்பா? இல்லை..?
“உங்களை நான் எப்பிடி நம்புறது?”, ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர்.
“நம்பத் தேவையில்லை, நீ போகலாம்..” அதுவரை அமைதியாயிருந்த அந்தப் பெரியவர் சொன்னார்.
அவரைப் பார்த்தால் வயது  ஒரு நாப்பதுக்கு மேலிருக்கும். தலைவரின் முகச்சாயல் இருந்தது. தலைவரை இதுவரை அவள் நேரில் பார்த்ததில்லை. என்ன ஆனாலும் சரி, சாவதுக்குமுன் எப்படியாச்சும் ஒருமுறை பாத்திட வேணும், அவரையும் தான்!
