நாள் – 37
அசோக்கும் மீராவும் கிழக்கு கடற்கரை சாலையில் அந்த மல்டிப்லக்ஸ் வாசலில் நின்றிருந்தனர்.
“தலைவர் படம் பாக்கலாம் மீரா.. சரியா..??”
“சொல்றேன்ல.. தனுஷ் படத்துக்கு போலாம்..!!”
“ப்ளீஸ் மீரா.. எனக்கு ரொம்ப ஆசையா இருக்கு.. இந்த ஒருதடவை எனக்காக.. ப்ளீஸ்..!!” அசோக் கெஞ்சலாகத்தான் சொன்னான். அதற்கே மீராவுக்கு சுருக்கென்று கோவம் வந்தது.
“ஓ.. அப்போ.. நான் சொல்றத கேட்க மாட்டேல..?? உனக்கு உன் விருப்பம் மட்டுந்தான் முக்கியம்.. அடுத்தவங்க விருப்பத்தை பத்தி எந்த அக்கறையும் இல்ல.. அப்படித்தான..??” என்று சீறினாள்.
அப்புறம்.. இருவரும் தனுஷ் படத்தைத்தான்.. ஒருவருக்கொருவர் பேசாமல் முறைத்துக் கொண்டே.. முழுவதும் பார்த்து முடித்து வெளியே வந்தார்கள்..!!
நாள் – 39
“என்ன சாப்பிடுற..??” மீரா மெனுகார்ட் புரட்டிக்கொண்டே கேட்டாள்.
“உனக்கு புடிச்சதை ஆர்டர் பண்ணு மீரா.. எனக்கு எதுனாலும் ஓகே..!!”
இரண்டு நாட்கள் முன்பு தியேட்டரில் கிடைத்த அனுபவத்தால் அசோக் இப்போது உஷாராக சொன்னான். ஆனால்.. மீரா இன்று என்ன நினைத்தாளோ..?? மெனு கார்டை மூடி வைத்துவிட்டு, அசோக்கை எரித்து விடுவது போல பார்த்தாள்.
“எ..என்னாச்சு மீரா..??” அசோக் பதற்றமாக கேட்டான்.
“எதுனாலும் ஓகேன்னா.. அரை கிலோ புண்ணாக்கு கொண்டு வர சொல்றேன் சாப்பிடுறியா..?? ஏன்.. உனக்குன்னு விருப்பு, வெறுப்பு, இன்டிவிசுவாலிட்டி.. எதுவும் இல்லையா..?? எல்லாத்தையும் தொலைச்சிட்டியா..??” மீரா படபடவென பொரிய, அசோக்குக்கு தலை வலிப்பது மாதிரி இருந்தது.
அசோக் புரிந்து கொண்டது: மீராவும் கழுதையும் ஒன்று. முன்னாடி போனால் கடிக்கிறாள். பின்னாடி போனால் உதைக்கிறாள்.
நாள் – 42
“ஹையோ.. நீ தப்பா புரிஞ்சுக்கிட்ட மீரா.. நான் ஒன்னும் கடைசி வரை இந்த சுடர்மணி பனியன் ஜட்டியோடவே நின்னுட போறது இல்ல..!! சினி இண்டஸ்ட்ரில நொழைய ட்ரை பண்ணிட்டு இருக்கேன்.. இன்னும் கொஞ்ச நாள்ல.. ஐ’ம் கோன்ன பி எ ஃபில்ம் மேக்கர் யு நோ..??”
“வாவ்.. ரியல்லி..??”
“எஸ்..!! அல்ரெடி மூணு ஸ்க்ரிப்ட் பக்காவா ரெடி.. யாராரை நடிக்க வைக்கிறது.. எங்கங்க ஷூட் பண்றது.. எல்லாமே டிஸைட் பண்ணிட்டேன்..!!”
“ம்ம்.. காசு போடுறதுக்குத்தான் எந்த லூசும் சிக்கலையாக்கும்..??”
“ஹிஹி.. ஆமாம்..!!”
“ஏன் அசோக்.. நீ டைரக்டர் ஆயிட்டா.. நீ சொன்ன பொண்ணைத்தான ஹீரோயினா போடுவாங்க..??”
“பின்ன..?? எல்லாமே என் டிசிஷன்தான்.. என்னோட சுதந்திரத்துல யாராவது தலையிட்டா.. அப்புறம் நான் மனுஷனாவே இருக்க மாட்டேன்..!!”
“ஹேய்.. அப்போ ஏன் நீ என்னையே ஹீரோயினா போட கூடாது..?? எனக்கு சின்ன வயசுல இருந்தே சினிமால நடிக்கனும்னு ரொம்ப ஆசை..!!”
“ஹ்ஹ.. ஹீரோயின்தான..?? போட்டுட்டா போச்சு..!! நீயும் அந்த கேரக்டருக்கு ரொம்ப பொருத்தமா இருப்பேன்னு எனக்கு தோணுது மீரா..!!”
“ஓ.. இஸ் இட்..?? என்ன மாதிரி ஸ்டோரி..??”