இந்த சம்பவத்தை மனசுக்குள் அசைபோட்ட காத்தாயி, ஆண்வாடை படாமல் ஆசையே இல்லாமல் இருந்த வைசாலி, மாறன்மேல் ஆசைப்பட்டு திருமணம் செய்துகொள்ள, பூசாரி கடம்பன்தான் காரணம் என்றும், அவனிடம் வசியப்பொடி வாங்கிதான் மாறன் வைசாலியை மயக்கினான் என்பதையும் யூகித்துக் கொண்டாள். அவளும் மலைவாசிதானே, கடம்பனுக்கு முன் காத்தாயியின் தந்தைதான் கோயில் பூசாரியாக இருந்தார். அவர், மலைவாசி இன தம்பதிகளுக்குள் பிணக்கு ஏற்பட்டால் வசியப்பொடி கொடுத்து இணக்கத்தை ஏற்படுத்துவார். அதனால் அவளுக்கும் வசியப்பொடி பற்றி தெரியும். அவர் இறந்தபின் கடம்பன் பூசாரியானான். இப்போது கடம்பனுக்கு வசியப்பொடி கிடைத்துள்ளதை தெரிந்துகொண்ட அவள், அதை வாங்கிச் சென்று லீலாவதியிடம் கொடுத்து, ஜெயராமை மயக்கி, மீண்டும் லீலாவதியுடன் அவனை சேர்த்து வைக்க முடிவு செய்தாள். அடுத்த நாள் காலை எழுந்து குளித்ததும், நேராக கோயிலுக்குச் சென்ற காத்தாயி, காத்தவராயனை வணங்கிவிட்டு, பூசாரி கடம்பனின் காலில் விழுந்து வணங்கினாள். அவளை ஆசீர்வதித்த கடம்பனிடம், லீலாவதியின் துயரத்தைச் சொல்லி, அவளுக்கு வசியப்பொடி கொடுத்து உதவும்படி காத்தாயி கேட்டுக் கொண்டாள். அடுத்த நாள் வரச்சொன்ன கடம்பன், அவள் கோயிலுக்கு வருவதற்கு முன்பே, பீடத்தில் இருந்த குடுவைகளை எடுத்து, காம வீரியப்பொடியையும் ஆண்பெண் வசியப்பொடியையும் மட்டும் சிறிது சிறிது எடுத்து, பொட்டலம் கட்டி வைத்துவிட்டு, குடுவைகளை பீடத்தின் உள்ளே பத்திரப்படுத்தினான். அவள் வந்ததும், இரண்டு பொட்டலங்களையும் காத்தாயியிடம் கொடுத்தான்.
“ந்தா புள்ள, இத வேற யாரு கேட்டிருந்தாலும் தந்திருக்க மாட்டேன். ஒன் அப்பாரு இந்த கோயில் பூசாரியா ரொம்பநாள் நம்ப சாமிக்கு பூஜை பண்ணிருக்கார். எனக்கும் அவர்தான் குருவா இருந்து, இந்த மூலிகைகளை அடையாளம் காட்டிக் கொடுத்து, நம்ப சனங்களுக்கு நல்லது செய்யச் சொல்லிட்டுப் போனார். இதுவரைக்கும் இந்த மூலிகையெல்லாம் நம்ம வனத்தைவிட்டு எல்லைதாண்டிப் போனதில்ல. இது நகரத்து சனங்ககிட்ட கெடச்சா வேண்டாத விளைவுகள்லாம் ஏற்படும். அப்பறம், இந்த மூலிகைங்கள அடையறத்துக்காக அவங்க நம்ப வனத்துமேல படையெடுத்து வந்து வனத்தையே தரைமட்டமாக்கிடுவாங்க. என் குரு மகள்ன்றதனால இத ஒனக்கு குடுக்கறேன். இத உபயோகப்படுத்தற விதம் தெரியுமில்ல. அந்த பொம்பளைக்கு (லீலாவதிக்கு) சொல்லிக்குடுத்துடு. ஜாக்கிரத”, என்று சொல்லி பொட்டலங்களை கொடுத்தான் கடம்பன். அதை வாங்கி இடுப்பில் சொருகிக்கொண்டு, கடம்பனை கும்பிட்டுவிட்டு தன் குடிசைக்கு போனாள் காத்தாயி. அடுத்த நாள்……
அடுத்த நாள், லீலாவதி மட்டும் வீட்டில் இருக்கும் நேரம் பார்த்து லீலாவதியின் வீட்டுக்குச் சென்று, அவளிடம் இரண்டு பொடிகளையும் கொடுத்தாள் காத்தாயி. அவைகள் என்ன என்று லீலாவதி கேட்டாள்.
“இந்தாம்மே, மொத ஒருநாள் எங்கிட்ட கேட்டியே வசிய மை இருக்குதான்னு. இருக்குது. ஆனா அது வசிய மை இல்ல. வசியப்பொடி. அந்த பொடிகள்தான் இது. எனக்கு நீ ரொம்ப உதவி செஞ்சிருக்கறதால நன்றிக்கடனா இத வச்சிக்க. இந்தா இருக்கு பாரு இளஞ்சிவப்பு நிறத்துல, இதும்பேரு காமவீரியப்பொடி. இத்த, பௌர்ணமி அன்னக்கி சாயங்காலம் யாருக்கு குடுக்கறியோ அவங்களுக்கு ஆசை உண்டாகி, யாருகூடனா படுக்கறதுக்கு வெறி வரும். தோ, கறுப்பா இருக்கு பாரு, இது ஆண்பெண் வசியப்பொடி. இத, திங்கக்கிழமைல ஆரம்பிச்சு, சனிக்கிழமை வரை, சாயங்காலம் சாப்பாட்டுலயோ தண்ணிலயோ பால்லயோ எதுலயாச்சும் ஒரு சிட்டிகை மட்டும் கலந்து குடுத்தோம்னா, யார் குடுக்கறாங்களோ அவங்க மேல, யாருக்கு குடுக்கறமோ அவங்க ஆம்பளயாவது பொம்பளயாவது இருந்தாலும், வசியப்பொடி குடுத்த ஆள்கிட்ட வசியமாகி, கொஞ்சம் கொஞ்சமா நெருங்கிப் பழக ஆரம்பிச்சு, ஞாயித்துக்கிழமை அன்னக்கி, வசியப்பொடி குடுத்த ஆளோட படுத்துடுவாங்க. நீ இத ரெண்டயும் ஒன் புருஷனுக்கு நான் சொன்ன மாதிரி குடுத்து, வசியம் பண்ணி அவரை உன்னோட பிடியில வச்சுக்கோ”, என்றாள் காத்தாயி. அதை வாங்கிக்கொண்ட லீலாவதி, காத்தாயியின் கையைப்பிடித்து நன்றி தெரிவித்தாள். அவளுக்கு திடீர்னு ஒரு சந்தேகம்.
