கண்ணாமூச்சி 3 78

ஆதிராவின் கால்கள் நடைபோட்டுக் கொண்டிருந்தாலும்.. அவளுடைய மனம் வேறெதையோ அசைபோட்டுக் கொண்டிருந்தது.. அந்த மனம் முழுதையும் அவளுடைய தங்கையே இப்போது ஆக்கிரமித்திருந்தாள்..!! ஆதிராவும் தாமிராவும் சிறுமிகளாக இருந்தபோது.. இந்த மலைப்பாதையிலும், அந்த காட்டுமரங்களுக்கு இடையிலும்.. இருவரும் ஓடித்திரிந்து விளையாடியதெல்லாம் இப்போது ஆதிராவின் ஞாபகத்திற்கு வந்தன..!!

அடர்ந்த மரங்களும் அதிகாலைப் பனியும் செறிந்திட்ட அந்த மலைப்பாதையில்.. ஆதிரா இப்போது நடந்துசெல்ல.. அவளுக்கு எதிரே உதயமானாள் சிறுமி தாமிரா..!! எட்டுவயது குட்டிப்பெண்ணாய்.. பட்டுப்பாவாடை கட்டிக்கொண்டு.. ரெட்டைஜடை போட்டுக்கொண்டு.. கைவிரல்களை விரித்து ஆட்டிக்கொண்டு.. கண்ணிமைகளை வெடுக்கென வெட்டிக்கொண்டு.. மழலைக்குரலில் பாட்டொன்றை பாடிக்கொண்டு..!!

“ஆக்குபாக்கு வெத்தலபாக்கு தாம்தூம் தஸம்..!!”

தங்கை பற்றிய நினைவுடனே நடந்து சென்ற ஆதிராவுக்கு.. எட்டுவயது தாமிரா நிஜமாகவே எதிரேதோன்றி பாடுவது போல ஒரு மாயத்தோற்றம்..!!

“தஸ்ஸைதூக்கி மேலபோட்டா செட்டியார்வீட்டு நண்டு..!!”

பாடலுடன் சேர்த்து நளினமாக ஆடிக்கொண்டே.. அந்த மலைப்பாதையில் ஆதிராவை வழிநடத்தி கூட்டிச்செல்வது போல ஒரு மருட்சி..!!

“நண்டைதூக்கி மேலபோட்டா நாகரத்ன பாம்பு..!!”

அழகாக கைவிரல்களை ஆட்டிஆட்டி குட்டித்தாமிரா பின்னோக்கி நடந்து செல்ல.. ஆதிரா அவளுடைய முகத்தை ஏக்கமாக பார்த்துக்கொண்டே முன்னோக்கி நடந்தாள்..!!

“பாம்பைதூக்கி மேலபோட்டா பஞ்சவர்ணக் கிளி..!!”

பச்சரிசி பல்வரிசை மின்ன காந்தச்சிரிப்பு சிரித்தாள் தாமிரா..!! தளர்வாக நடைபோட்ட ஆதிராவின் உதடுகள் இப்போது தடதடத்தன.. ‘தாமிராஆஆ’ என்று ஒருவித ஆதங்கத்துடன் முணுமுணுத்தன..!! நெஞ்சைப் பிசைவது மாதிரியாய் அவளுக்குள் ஒரு உணர்வு..!!

“கிளியைதூக்கி மேலபோட்டா கிருஷ்ணனோட கொண்டை..!! ஹாஹாஹாஹா.. ஹாஹாஹாஹா..!!” பாடிமுடித்த தாமிரா கலகலவென கைகொட்டி சிரித்தாள்.

“தாமிராஆஆஆ..!!”

வாய்விட்டே அழைத்துவிட்ட ஆதிரா, கைநீட்டி வேறு தங்கையின் மாயவுருவை பிடிக்க முயன்றுவிட்டாள்..!! அவளுடைய கைக்குள் அகப்படாமல் தாமிரா பட்டென்று மறைந்துபோக.. அடுத்தகணமே நிஜவுலகுக்கு வந்து ஆதிரா திருதிருவென விழித்தாள்..!!

11

“ஆதிராம்மாஆஆ.. என்னம்மா ஆச்சு..??” பின்னால் நடந்து வந்த வனக்கொடி, பதற்றத்துடன் வந்து ஆதிராவின் தோள்பற்றினாள்.

“ஒ..ஒன்னும்.. ஒன்னும் இல்லம்மா..!! ஏ..ஏதோ.. பழைய ஞாபகம்..!! வா..வாங்க.. போலாம்..!!”

தடுமாற்றமாகவும் சமாளிப்பாகவும் சொன்ன ஆதிரா.. தாமதம் சிறிதும் செய்யாமல் விடுவிடுவென முன்னால் நடந்தாள்..!! அவள் செல்வதையே ஓரிரு வினாடிகள் திகைப்பாக பார்த்த வனக்கொடி.. பிறகு ஓடிச்சென்று அவளுடன் இணைந்துகொண்டாள்.. ஆறுதலாக ஆதிராவின் கையை பற்றிக்கொண்டாள்.. இப்போது இருவரும் சேர்ந்து நடைபோட்டார்கள்..!! வனக்கொடி அவ்வாறு வந்து கைபற்றிக்கொண்டது, ஆதிராவுக்கு இதமாக இருந்தது.. அவளுடைய மனதில் மெலிதாக ஒரு நிம்மதி பரவியது..!!

வீட்டை நெருங்க சற்று தொலைவு இருக்கையிலேயே.. தோட்டத்தில் நின்றிருந்த சிபி இவர்களது பார்வையில் பட்டான்.. கூடவே.. அவனுடன் சிரித்துப் பேசிக்கொண்டிருந்த திரவியமும்..!! திரவியம் தணிகைநம்பியின் தொழில்முறை நண்பர்.. வயதில் அரைச்சதம் அடித்தவர்..!! தென்றல் இருவருக்கும் தேநீர் தயாரித்து கொடுத்திருக்கவேண்டும்.. இருவருடைய கையிலும் வெண்ணிற பீங்கான் கோப்பை..!!

அகழியில் தணிகைநம்பிக்கு சொந்தமாக ஒரு டீ எஸ்டேட் இருக்கிறது.. அதுவல்லாமல், திரவியத்தின் மேலாண்மையிலும் மேற்பார்வையிலும் இயங்குகிற டீ பேக்டரியிலும் கணிசமான ஒரு முதலீட்டுப்பங்கு அவருக்குண்டு..!! ஆதிராவின் குடும்பம் மைசூருக்கு புலம்பெயர்ந்தபிறகு.. அவர்களுடைய மாளிகைவீட்டை பராமரிக்கிற பொறுப்பு வனக்கொடிக்கு வழங்கப்பட்டது போல.. தணிகைநம்பியின் பிற சொத்துக்களை நிர்வகிக்கிற பொறுப்பு திரவியத்திற்கு வந்துசேர்ந்திருந்தது..!! தணிகைநம்பி அவ்வப்போது அகழி வந்து, ஓரிரு நாட்கள் தங்கியிருந்து, கணக்குவழக்கு பகுப்பாய்வதோடு சரி..!! மற்றபடி.. தணிகைநம்பியின் சொத்துக்கள் அனைத்தையும் முழுக்கட்டுப்பாட்டில் வைத்திருப்பது..

“என்னம்மா.. காலங்காத்தாலேயே காட்டுக்குள்ள போய் சுத்திட்டு வர்றீங்க..??” என ஆதிராவைப் பார்த்து இதமான புன்னகையுடன் கேட்ட இந்த திரவியம்தான்..!!.

“ஒ..ஒன்னும் இல்ல அங்கிள்.. சும்மா.. சிங்கமலை வரை போயிருந்தோம்..!! நீங்க எப்ப வந்தீங்க..??”

“வந்து அரைமணி நேரம் ஆச்சுமா.. காலைலயே உன்கையால சூடா ஒரு காபி குடிக்கலாம்னு நெனச்சு வந்தேன்.. கடைசில வழக்கம்போல தென்றல் போட்ட டீயையே குடிக்கவேண்டியதா போய்டுச்சு..!! டயர்டா தூங்கிட்டு இருந்த உன் புருஷனையும் தட்டியெழுப்புற மாதிரி ஆய்டுச்சு..!! காலங்காத்தாலேயே வந்து கடுப்பை கெளப்புற இந்த அடியேனை மன்னிச்சுக்கங்க ரெண்டுபேரும்….!! ஹாஹா..!!” சொல்லிவிட்டு வசீகரமாக ஒரு சிரிப்பு சிரித்தார் திரவியம்.

“நாங்க அகழி வந்திருக்கிறது உங்களுக்கு எப்படி தெரியும் அங்கிள்..??”

ஆதிரா திடீரென அவ்வாறு கேட்க, திரவியத்தின் சிரிப்பு பட்டென்று நின்று போனது.. அவருடைய நெற்றிப்பரப்பில் சுருக்கக் கோடுகள்..!! அவளிடம் இருந்து அந்த கேள்வியை அவர் எதிர்பார்க்கவில்லை என்பது.. திகைத்துப் போய் பார்த்த அவருடைய முகத்திலேயே தெளிவாக தெரிந்தது..!!

“அ..அது.. நம்ம வனக்கொடிதான்..”

என்று தடுமாற்றமாக அவர் இழுக்க, ஆதிரா உடனே திரும்பி வனக்கொடியை கேள்வியாக பார்த்தாள்..!! திரவியத்திடம் காணப்பட்ட அதே திகைப்பு, இப்போது வனக்கொடியிடமும்..!! ஆதிராவுக்கு அவள் சொன்ன பதிலிலும் அவருடைய அதே தடுமாற்றம்..!!

“அ..அது.. நேத்து மரகதம்மாவை மார்க்கெட்ல பார்த்தேன்மா.. அ..அப்படியே பேச்சுவாக்குல நீங்க ஊருக்கு வந்திருக்குறதையும் சொல்லிட்டேன்..!! சொல்லக்கூடாதுன்னு ஒன்னும் இல்லையே..??”

மரகதம் என்பது திரவியத்தின் மனைவி..!! வனக்கொடியின் முகத்தில் காணப்பட்ட அந்த அவஸ்தையை.. ஆதிரா ஓரிரு வினாடிகள் சலனமில்லாமல் பார்த்தாள்..!! பிறகு..