கண்ணாமூச்சி 3 78

“………………………”

“நம்ம தாமிராவை என்னால காப்பாத்த முடியல.. இந்தப்பாவியால உன் தங்கச்சியை காப்பாத்த முடியல ஆதிராம்மா..!!”

வனக்கொடி குலுங்கி குலுங்கி அழ ஆரம்பிக்க.. அதை எதிர்பாராத ஆதிரா திகைத்துப் போனாள்.. ஓடிச்சென்று வனக்கொடியை வாரி அணைத்துக் கொண்டாள்..!!

“அழாதிங்கம்மா..!! ஐயோ.. அழாதிங்க ப்ளீஸ்..!!”

“காட்டுக்குள்ள தெசை தப்பி போயிட்டேன்மா.. கொஞ்சம் அசந்துட்டேன்..!! நான் மட்டும் சரியான நேரத்துக்கு வந்திருந்தா.. நம்ம தாமிராவை காப்பாத்திருக்கலாம் ஆதிராம்மா..!! தப்பு பண்ணிட்டேன்.. தப்பு பண்ணிட்டேன்..!!” ஆதிராவின் மார்பில் முகம் புதைத்து அழுதாள் வனக்கொடி.

“ஐயோ.. என்னம்மா இது.. விடுங்க..!! உங்க மேல எந்த தப்பும் இல்லம்மா.. அழாதிங்க.. கண்ணை தொடைச்சுக்காங்க.. ப்ளீஸ்..!!” அவளை தேற்றினாள் ஆதிரா.

அதன்பிறகு அந்த இடத்தில் சிறிது நேரம் நிசப்தம்தான்..!! வனக்கொடியின் அழுகை கொஞ்சம் கொஞ்சமாக குறைய ஆரம்பித்தது.. ஆதிராவும் அவள் நிதானத்திற்கு வருவதற்காகத்தான் காத்திருந்தாள்..!! வனக்கொடி இயல்புக்கு திரும்பியதும்.. ஆதிரா அந்தக் கேள்வியை அவளிடம் கேட்டாள்..!!

“அப்போ.. தாமிராவையும் குறிஞ்சியும் ஒண்ணா சேர்த்து நீங்க பாக்கல.. தனித்தனியாத்தான் பாத்திங்க..!!”

“ஆ..ஆமாம்மா.. ஏன் கேக்குற..??”

“அப்புறம் எப்படி அவதான் தாமிராவை கொண்டு போயிருக்கனும்னு உறுதியா சொல்றிங்க..??”

“அவ இல்லனா அப்புறம் வேற யாரு..??”

வனக்கொடி அவ்வாறு திருப்பி கேட்க.. அவளுக்கு என்ன பதில் சொல்வதென்று ஆதிரா இப்போது தடுமாறினாள்..!! உறுதியான வாதம் எதையும் அவளால் முன்வைக்க முடியாமல் போனதால்.. அப்படியே அமைதி காக்க முடிவு செய்தாள்..!!

“ஒன்னும் இல்லம்மா.. விடுங்க..!!” என்று அந்த பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்தாள்.

12

தரையில் அமர்ந்திருந்த இருவரும் மெல்ல மேலெழுந்து கொண்டார்கள்..!! வனக்கொடி ஏதோ ஒரு சூனியத்தை வெறித்துக்கொண்டிருக்க.. ஆதிரா மட்டும் அந்த இடத்தை சுற்றி பார்வையை சுழற்றினாள்..!!

பாறையைக் குடைந்து செதுக்கப்பட்ட ராட்சதவடிவ சிங்கமுக சிலை ஒருபுறம்.. பாதாளத்தில் வீழ்த்திவிடும் சரேலென்ற மலைச்சரிவு மறுபுறம்.. பச்சைபச்சையாய் சுற்றிலும் அடர்ந்த காட்டு மரங்கள்..!! கோயில் என்று சொல்வதற்கான எந்த தனித்துவ அடையாளங்களும் அந்த இடத்தில் காணப்படவில்லை.. குங்குமத்தில் தோய்க்கப்பட்ட நான்கைந்து எலுமிச்சம் பழங்கள் சிலைக்கு அடியில் வீழ்ந்து கிடந்தன.. சிலைக்கு முன்புறம் கற்பாளங்களால் எழுப்பப்பட்ட ஒரு உயரமான மேடை.. அந்த மேடையின் அடிப்பாகத்தை சுற்றியிருந்த ஒரு சிவப்புத்துணி.. மேடையின் மேற்புறத்தில் காய்ந்தவிறகுகளின் உதவியுடன் எரிகிற ஜோதி.. மேடைக்கு வலப்புறமாக நட்டுவைக்கப்பட்டிருந்த ஒரு சூலாயுதம்.. அவ்வளவேதான்..!!

ஆதிராவுக்கு அந்த இடத்தை பார்க்க பார்க்க.. அவளும் தாமிராவும் அந்த இடத்துக்கு முன்பு வந்து சென்ற ஏதேதோ நினைவுகள் எல்லாம்.. அவளுடைய மனத்திரையில் குழப்பமாக ஓடின.. அந்த குழப்பத்தை தாங்கமுடியாதவளாய் படக்கென தலையை உதறிக்கொண்டாள்..!!

அவ்வாறு உதறி ஒரு நிதானத்துக்கு வந்தபோதுதான்.. ஆதிரா அதை உணர்ந்தாள்.. அந்த இடத்தை நிறைத்திருந்த அந்த இனிய வாசனையை.. நேற்று குளித்துவிட்டு வந்தபோது குப்பென்று நாசியில் ஏறிய அதே வாசனை..!! நாசியில் புகுந்து.. நாடி நரம்பெல்லாம் ஓடி.. மனதை கொள்ளை கொள்கிற அற்புத வாசனை..!! தனக்கு பழக்கமான வாசனைதான் என்று நேற்று நினைத்தாளே.. அவளுக்கு அந்த வாசனை அறிமுகமான இடமே இதுதான்..!! அந்த வாசனையை அறிந்துகொண்டதுமே அவளுடைய கண்களில் ஒரு மிரட்சி.. உடலில் ஒருவித நடுக்கம்..!! கலவர முகத்துடன் அப்படியே வனக்கொடியிடம் திரும்பி..

“அ..அம்மா.. இது.. இ..இந்த வாசனை.. என்ன வாசனை இது.. எ..எங்க இருந்து வருது..??” என்று திணறலாக கேட்டாள். உடனே நாசியை சற்று கூர்மையாக்கிய வனக்கொடி,

“இதுவா..?? இது மகிழம்பூ வாசனைம்மா.. மகிழமரம் அந்தா வளர்ந்திருக்கு பாரு.. அதுல இருந்துதான் இவ்வளவு வாசனை வருது..!! வாடிப்போனாலும் வாசம்போகாத ஒரே பூ.. மகிழம்பூதான் ஆதிராம்மா.. வாசத்துக்கு பேர்போனது..!!” என்று இயல்பாக சொன்னாள்.

வனக்கொடி கைகாட்டிய திசையில் பார்வையை வீசினாள் ஆதிரா.. மகிழம்பூ மரத்தின் மேற்புறம் அங்கே காட்சியளித்தது..!! மலைச்சரிவில் வேரூன்றி.. மேல்நோக்கி உயரமாக வளர்ந்து.. மலைவிளிம்பில் தனது கிளைக்கைகளை படரவிட்டிருந்தது அந்த மகிழமரம்..!! மரத்தின் மேற்புறத்தில் பச்சைபச்சையாய் இலைகள்.. கொத்துக்கொத்தாய் வெள்ளைப்பூக்கள்.. மஞ்சள் மஞ்சளாய் மகிழம்பழங்கள்..!!

“இ..இது.. இந்த மகிழமரம்.. நம்ம வீட்டுக்கு பக்கத்துல இந்த மரம் இருக்குதா..??” ஆதிராவிடம் இன்னுமே ஒரு தடுமாற்றம்.

“இல்லையே.. நம்ம வீட்டுப் பக்கத்துல மகிழமரம் எதுவும் இல்லையே..!! ஏன்மா கேக்குற..??”

வனக்கொடி குழப்பமாக ஆதிராவிடம் திரும்ப கேட்டாள்.. அதை கேட்கும்போதே ஆதிராவின் இதயத்தில் குபுகுபுவென ஒரு கொந்தளிப்பு..!! பதில் எதுவும் சொல்லத் தோன்றாதவளாய்.. அந்த மகிழமரத்தையே மிரட்சியாகப் பார்த்தாள்..!!

அகழி வந்து ஒருநாள் கூட ஆகவில்லை.. அதற்குள்ளாகவே ஆதிராவின் மனதில் ஒரு கலக்கம் உருவாகி இருந்தது.. அவளுடைய மனம் ஒருவித குழப்பத்தில் உழல ஆரம்பித்திருந்தது..!! அகழி வருவதற்கு முன்பாக.. குறிஞ்சிதான் தாமிராவை கொண்டுபோய் விட்டாள் என்று கூறப்பட்டதை.. அவளால் அவ்வளவு எளிதாக ஏற்றுக்கொள்ள முடியாமலிருந்தது..!!

10

ஆனால் இப்போது.. வனக்கொடி தான்கண்ட காட்சியினை மலையுச்சியில் வைத்து அவளுக்கு விவரித்தபிறகு.. வீட்டுக்குள் வீசிய அதே வாசனையை இந்த சிங்கமலையிலும் நுகரநேர்ந்தபிறகு.. ஆதிராவின் மனதில் சற்று ஆழமாகவே குறிஞ்சி இறங்கியிருந்தாள்.. குழப்பத்தை ஏற்படுத்தியிருந்தாள்..!! மனதில் இருந்த குழப்பத்தை வெளியில் சொல்ல ஆதிரா விரும்பவில்லை.. அதேநேரம், அந்த குழப்பத்திற்கான விடையை தெரிந்துகொள்கிற ஆர்வமும், அவளுக்குள் இப்போது மூண்டிருந்தது..!! குழப்பத்தையும் ஆர்வத்தையும் மனதுக்குள் போட்டு மூடியவள்.. வனக்கொடியிடம் திரும்பி வறண்ட குரலில் சொன்னாள்..!!

“நேரமாச்சும்மா.. கெளம்பலாம்..!!”

“ம்ம்.. சரி ஆதிராம்மா.. கெளம்பலாம்..!! சிபித்தம்பி வேற எந்திரிச்சிருக்கும்னு நெனைக்கிறேன்..!!”

ஆதிராவும் வனக்கொடியும் சிங்கமலையில் இருந்து வீட்டுக்கு புறப்பட்டார்கள்.. சரிவாகவும் சறுக்கலாகவும் இருந்த அந்த குறுகியபாதையில் மிகப்பொறுமையாக இறங்கினார்கள்.. ஆதிரா முன்னால் நடக்க, அவள் பின்னே வனக்கொடி..!!