“இங்க பாருங்க முதல்ல இந்த கல்யாணம் பண்ணிக்கிறதுல எனக்கு விருப்பம் இல்ல. உங்கள மட்டும் வச்சு சொல்லல. பொதுவாவே எனக்கு கல்யாணம் பண்றதுல விருப்பம் இல்ல.”
“கல்யாணம்றது ஒவ்வொரு பொண்ணுக்கு ஒரு மாதிரி. சிலருக்கு அது சந்தோஷத்தை குடுக்கும். சிலருக்கு துக்கத்த குடுக்கும்.” சொல்லிக் கொண்டிருக்கும் போதே நான் அவளின் பேச்சை இடைமறித்து
“இல்ல அகல்யா நா உன்ன ரொம்ப லவ் பண்றேன். உன்னைய மேரேஜ் பண்ண வாழனும் ஆசைபடுறேன்.”
“இங்க பாருங்க மிஸ்டர் நீங்க என் மேல ஆசைபட்டத நா தப்பு சொல்லல. உங்க மனசுல அப்படி ஒரு ஆசை தோணியிருக்கு. அதுக்கு நா எதும் சொல்ல முடியாது. பட் என் மனசுல இருக்குறத நீங்க கன்சிடர் பண்ணனும்.”
“இங்க இருக்குற குழந்தைகள், என்னை மாதிரி பெண்கள் உருவாக இந்த இடத்துக்கு வர காரணமே இந்த காதல், கல்யாணம் தான். அதனால தான் சொல்றேன் என்னைய மாதிரியான பெண்களுக்கு இந்த ரெண்டுமே வாழ்க்கையில கசப்ப மட்டுமே தரும். எனக்கு முன்னாடி இருந்தவங்க செஞ்ச தப்பா நானும் திரும்பி செய்ய விரும்பல. சோ என்னைய விட உங்களுக்கு நல்ல பொண்ணு கண்டிப்பா கிடைப்பாங்க. கவலைபடாதீங்க”
“ஏதோ ஒன்னு ரெண்டு பேர் செஞ்ச தப்புக்காக எல்லாருடைய காதல் தப்பு சொல்ல கூடாதுல.”
“காதலும் பால் மாதிரி தாங்க.. போக போக புளிச்சி போய்டும். ஏன் எத்தனையோ காதல் கல்யாணத்துக்கு முன்னாடியே புளிச்சி போயிருக்கு. காரணம் அப்போ அவங்க தேவைகள் முடிஞ்சிருக்கும். இல்ல புதுசா ஏதோ தேவையோ, அவசியமோ, நிர்பந்தமோ வந்து உள்ளே நுழைஞ்சிருக்கும்.”
“பெண்கள காதல் பண்ணி ஏமாத்தறது ஆண்கள் மட்டும் தான் காரணம் சொல்றீங்களா?”
“இங்க இருக்கிற குழந்தைகள், பெண்கள் யாருக்கும் அம்மா, அப்பா ஏன் எந்த ஒரு உறவும் வெளியில இருந்து இல்ல.. இங்க இருக்குறவங்க தான் உறவு. இதுக்கு ஆண்கள் மட்டுமே காரணம் சொல்ல முடியாது. பெண்களும் தான் காரணம்.”
“காரணம் சொல்லனும்னா காதல், கல்யாணம், தவறான வழியில பிறந்த குழந்தை, ஏன் இயற்கையா நடக்குற விபத்து கூட ஒரு காரணம் தான். ஆனா யாராவது ஒருத்தர் இந்த காரணத்துக்கு பொறுப்பு எடுத்திருந்தா இன்னிக்கு இந்த மாதிரி ஹோம் இருக்கவே இருக்காது.”
காதல், கல்யாணம் இதனால் அரிதாக ஏற்படக் கூடிய பாதிப்புகள் தான் அவளுடைய மனதில் பிரதானமாக இருந்தது. அதற்கு காரணம் அவளுடைய வாழ்க்கை முறை, வாழ்வில் நடந்த கசப்பான சம்பவங்கள் தான் என்பதை என்னால் புரிந்துக் கொள்ள முடிந்தது. அதற்கு மேலும் அவளிடம் வாதாட விரும்பவில்லை.
எப்போதும் இயற்கையின் விதியின்படி எல்லாமே இரண்டு வகை தான். அது மனிதர்களாகட்டும் அவர்களின் குணநலன்கள், வாழும் வாழ்கை, மதிப்பு, மரியாதை இவைகள் எல்லாம் இருவகை தான். இதற்கு காரணம் மனிதர்களா? இல்லை கட்டமைக்கப்பட்ட இந்த சமுதாயமா? என தெரியவில்லை. பல குழப்பங்களும், சிந்தனைகளுக்கு மத்தியில் அங்கிருந்து வீட்டிற்கு வந்து சேர்ந்தேன். அடுத்து என் வாழ்க்கை எப்படி இருக்க போகிறது ஏன் இந்த நொடி அடுத்த என்ன செய்ய வேண்டும் என்று கூட தெரியாத குழப்பமான மனநிலையில் உட்காந்திருந்தேன்.
அப்போது தான் என்னில் இருந்து என் மனசாட்சி வந்து பேச ஆரம்பித்தது.
“என்ன குழப்பமாக இருக்கா? ரொம்ப எல்லாம் மனச போட்டு குழப்பிக்காத. அகல்யா சொன்னது அவளை பொறுத்தவரை சரி தான். ஏன்னா அவளும் பாதிக்கபட்டுருக்கா. அவள மாதிரி இந்த ஹோம்க்கு வர உன்ன மாதிரி ஆண்களும் புருசன் சுகம் சரியா குடுக்கலனு உன் தேடி வந்த கற்பகம் மாதிரி பெண்களும் தான் காரணம்.” சொல்ல அப்போது தான் எனக்கு புரிய ஆரம்பித்தது.
நான் இதுவரை வாழ்ந்த வாழ்க்கைக்கு திருப்பி பார்த்தால் அதில் வெறும் காமம் மட்டுமே நிறைந்திருந்தது. அதை தவிர வேறெதுவும் இல்லை. வாழ்க்கையில் காமம் என்பது வெறும் ஒரு சிறிய பகுதி தான் என்பது தெரிந்தது. இந்த சிறிய பகுதிக்காக இவ்வளவு நாள் வாழ்க்கை வீணாக்கி இருக்கிறேன் என்பது அப்போது தான் புரிந்தது.
மீண்டும் என் மனசாட்சி என்னிடம்
“என்ன யோசிச்சு பாக்கிறியா? பாரு. பாரு.. என்ன பாத்தாலும் சுகம்.. சுகம்.. காம சுகம் இதை தவிர வேறெதுவும் உன் வாழ்க்கையில சொல்ற மாதிரி பண்ணியிருக்கியா?” கேட்க ‘இல்லை’ என்ற பதில் என்னையும் அறியாமல் வாயிலிருந்து வந்தது.
“அகல்யா பாத்ததும் வேணா உனக்கு புடிச்சு போய் கல்யாணம் பண்ணியிருக்கனும் தோணியிருக்கலாம். ஆனா இதுக்கு முன்ன பாத்து பழகி காதலிக்கிறேன் சொல்லி அனுபவிச்ச பெண்கள் நெலமைய கொஞ்சம் யோசிச்சு பாரு.”
“கர்மா எக்காலத்துக்கும் பொருந்தும்.. நீ செய்த வினைகள் உன்னை ஒருநாள் தேடி வந்து உனக்கே எமனாக நிற்கும்.”
“அகல்யா பத்தி நெனைக்கும் போதெல்லாம் இந்த சமுதாயத்தில இருக்கிற ஒட்டு மொத்த பொண்ணுங்கள பத்தி நெனச்சியா இல்லையா?”
“ம்ம்.. ஆமா நெனப்பு வந்துச்சு. நெனச்சு பாத்தேன்.”
“சும்மா எப்படி நெனப்பு வரும்.. நீ செய்த கர்மா உன்னைய நெனக்க வச்சு அத அகல்யா மூலமா உனக்கு தெரியபடுத்தியிருக்கு.. இந்த உலகத்துல நிகழ கூடிய எல்லா சம்பவத்துக்கும் ஒரு கர்ம காரிய காரணங்கள் இருக்கத்தான் செய்யும்.. அது வெளிவர வேண்டிய நேரத்துல கண்டிப்பா வெளிவந்தே ஆகும்.”
“மனச போட்டு குழப்பிக்காம அமைதியா இரு. அகல்யா உன் வாழ்க்கைக்குள்ள வரனும் எழுதியிருந்தா கண்டிப்பா வருவா.” என்றது என் மனசாட்சி.
“ஓ.. அப்போ அகல்யா என்னைய கல்யாணம் பண்ண சம்மதிப்பாளா?” மனசாட்சியிடம் கேட்க
“நா உன் மனசாட்சி தான். அடுத்து என்ன நடக்கும் உனக்கே தெரியாதப்ப உனக்குள்ள இருக்குற எனக்கு எப்படி தெரியும்.” சொல்லி மறைந்தது.
அகல்யாவின் பார்வையிலிருந்து…
என் மனநிலைமையும் ஒரு குழப்பத்தில் தான் இருந்தது. அவர் மனதில் இருந்ததை நேரடியாக ஒளிவுமறைவின்றி பேசியதற்கு யாரையும் கல்யாணம் செய்யும் எண்ணம் இல்லை என சொல்லியிருக்கலாம். அதை விட்டு தேவையில்லாமல் ஏதோ ஏதோ பேசி அவரின் மனதை நோகடித்துவிட்டமோ என்ற குற்ற உணர்ச்சி தான் என் மனதில் மேலோங்கி இருந்தது.. இப்போது அவருடைய மனநிலையை நினைக்கும் மிகவும் கஷ்டமாக இருந்தது. நான் உடனே எழுந்து என் மனதில் இருக்கும் பாரத்தை இறக்கி வைக்க ப்ரேயர் ரூம் நோக்கி விறுவிறுவென நடந்தேன்..
அங்கு கடவுளின் முன்பு மண்டியிட்டு என் மனதில் இருப்பவைகளை எல்லாம் சொல்லி புலம்பிக் கொண்டிருந்தேன். அப்போது அந்த பக்கம் வந்த மதர் என் மனபுலம்பலை நின்று கேட்டு கொண்டிருந்திருக்கிறார். அப்போது நான் இருந்த நிலையில் சுற்றி இருப்பவர்களை பற்றி எந்த கவலையும் படாமல் என் மன கவலையை மட்டும் சொல்லி புலம்பிக் கொண்டிருந்தேன்..
கடவுளின் முன் மண்டியிட்டு சொன்னதால் என்னவோ என் மனத்தின் பாரம் கொஞ்சம் குறைந்தது போல் இருந்தது. அதனால் எழுந்து வந்த போது அந்த ரூமை கடந்து மதர் எனக்காக நின்றுக் கொண்டிருந்தார். என்னை இந்த ரூமில் பார்த்ததும் அவருக்கு அதிர்ச்சியாக இருந்திருக்கும். இதுவரை எந்த கஷ்டமான சூழ்நிலையிலும் இங்கு வந்து முறையிட்டதே கிடையாது.
