பார்.. !!! கூட்டம் அவ்வளவாக இல்லை!!! ஒரே தம்மில் முக்கால் பியரை தொண்டைக்குள் சரித்த பின்.. கடைக் கண்ணில் வழிந்த கண்ணீரை இடக் கையின் சுண்டு விரலால் சுண்டி விட்டுக் கொண்டு.. பாட்டிலை டேபிள் மீது வைத்தான் நவநீதன் .!!!
அவனுக்கு எதிரில் உட்கார்ந்து கொண்டிருந்த கர்ணா.. சிகரெட் புகையை இழுத்து நெஞ்சை நிறைத்தபடி.. நவநீதனையே பார்த்துக் கொண்டிருந்தான்.. !!!
” இதை நான் எதிர் பாக்கவே இல்ல கர்ணா..”
” எதை பாஸ்.. இந்த பீரையா.. ??”
” கிண்டல் பண்ணாத கர்ணா.. கிருத்தி இப்படி சொல்லுவானு நான் எதிர் பாக்கல… ”
” ஸாரி பாஸ்.. !!!” சிகரெட்டை இழுத்தான் ”நான் கூட எதிர் பாக்கல பாஸ்.. !! என்ன பொண்ணு பாஸ் உங்க கிருத்தி. ? நீங்க சொன்னதெல்லாம் வெச்சு பாக்றப்ப.. அவங்களும் உங்கள லவ் பண்றாங்கனு நான் நினைச்சிட்டேன் பாஸ்… அவங்களுக்கு உங்கள விட வேற ஒருத்தன புடிச்சிருக்குனு இப்பல்ல தெரியுது.. ”
” அவளுக்கும் என்னை புடிச்சிருக்கு கர்ணா.. புடிக்காம இல்ல.. !! ஆனா அது லவ் இல்ல கர்ணா.. ஒரு அன்பு.. பாசம்.. உரிமை.. இந்த மாதிரி உறவு முறைல என்னை புடிச்சிருக்கு…”
” பாஸ்.. ஒண்ணு சொல்றேனு தப்பா நினைச்சுக்காதிங்க. கடைசில எல்லா பொண்ணுங்களும் சொல்ற.. ஒரு தற்பாதுகாப்பு சென்ட்டிமெண்ட் டயலாக்தான் இது.. !”
” அப்ப இதை நம்ப வேண்டாங்கறியா. ??” எனக் கேட்டு விட்டு.. பியரின் மீதியையும் இடக்கையில் எடுத்து.. முகத்தை அன்னாந்து தொண்டைக்குள் சரித்தான் நவநீதன். இந்த முறை அவன் பாட்டில் காலியான பின்தான் வைத்தான்.
கர்ணா சிகரெட்டை நீட்ட.. அதையும் வாங்கி வாயில் வைத்து சுர்ரென.. கண்கள் சுருங்க இழுத்தான். புகை போய் சிறு மூளையை தாக்க… அவனுக்கு கிர்ரென்று இருந்தது.
” இந்த பொண்ணுங்களவே நம்பக் கூடாது.. இல்ல கர்ணா…???”
” அத நான் எப்படி பாஸ் சொல்றது .? இது உங்க அத்தை பொண்ணு.. நாளைக்கே அவங்களுக்கு உங்க மேல திடீர்னு ஒரு லவ் வந்தாலும் வரலாம். இல்ல.. உங்க சொந்த பந்த பிரச்சினைல.. அவங்க லவ் பிரேக்கப் ஆகி.. நீங்களே மேரேஜ் பண்ற மாதிரி ஆனாலும் ஆகலாம்…”
” சே.. சே… நீ ஏன் கர்ணா…?? அவ நல்லா வாழட்டும் கர்ணா. அவ எனக்கு முன்ன வேற ஒருத்தன லவ் பண்ணிட்டா.. அவதான் என்ன பண்ணுவா.. ? நா விரும்பின பொண்ண அடைய முடியலையேன்னு வருத்தம்தானே தவிற… அவ லவ் கட்டாகனும்னு எல்லாம் நான் நினைக்கல கர்ணா..”
தனது பியரை எடுத்து பொருமையாக குடித்த படி.. நவநீதனையே பார்த்துக் கொண்டிருந்த கர்ணா மெல்லச் சிரித்தான். ஆனால் பேசவில்லை.
” என்ன கர்ணா.. இவன் ஹீரோ ரேஞ்சுக்கு.. சினிமா வசனமெல்லாம் பேசறானேனு சிரிக்கறியா.. ?”
” பின்ன என்ன பாஸ்.. ??”
” சரி விடு. அது எப்படியோ இருந்துட்டு போகட்டும்.. இப்ப எனக்கு அதுகூட பிரச்சினை இல்ல கர்ணா.. ”
” ம்ம். . சொல்லுங்க பாஸ்.. வேற என்ன பிரச்சினை.. ??” பியரை டேபிள் மீது வைத்து விட்டு கேட்டான் கர்ணா.
அவன் மிச்சம் வைத்த கொஞ்ச பியரையும் எடுத்து தொண்டைக்கு கொடுத்தான் நவநீதன்.!!! டேபிள் சர்வரை கை தட்டி அழைத்து.. இன்னும் இரண்டு பியர்களுக்கு ஆர்டர் செய்தான் கர்ணா.!!
காலி பாட்டிலை கீழே வைத்தான் நவநீதன்.
” சொல்லுங்க பாஸ்..இப்ப வேற என்ன உங்க பிரச்சினை.. ??”
” ஒன் சைடு லவ்வுன்னாலும் ரொம்ப சின்சியரா.. டீப்பா.. அவள நான் லவ் பண்ணிட்டேன் கர்ணா… இனி மறுபடி அவ கூட பழைய மாதிரி என்னால பழக முடியாது. அவள பாக்கறப்ப எல்லாம் என் மனசு நோகுது கர்ணா.. இந்த ரெண்டு நாள்ளயே.. நான் ரொம்பவே வேதனை பட்டுட்டேன். என்னால நார்மலா இருக்கவே முடியல.. அவள பாக்கவே புடிக்கல.. ” என… குரல் கம்ம.. மெல்லிய வேதனையுடன் சொன்னான் நவநீதன்… !!!
” விடுங்க பாஸ்.. லவ்னாலே அப்படித்தான் எல்லாம் ஒரு கொஞ்ச நாளைக்கு..”
” இல்ல கர்ணா. இது நீ நினைக்கற மாதிரி இல்ல..! இந்த ரெண்டு நாளும் நான் எப்படி இருந்தேன் தெரியுமா..? சொன்னா நம்ப மாட்ட கர்ணா.. நேத்து நைட் பூரா நான் தூங்கவே இல்ல..! அவள நான் ரொம்ப டீப்பா லவ் பண்ணிட்டேன். அதான்.. அவ வேற ஒருத்தன லவ் பண்றது என்னை ரொம்ப கஷ்டப் படுத்துது. இது பொறாமை இல்ல கர்ணா. வலி.. !!!”
”சரி பாஸ்.. அவங்க எப்படி இருக்காங்க வீட்ல.. ??? அவங்களும் உங்கள மாதிரி ஏதாவது… கொஞ்சம் சோகமா.. ???”
” நல்லா கேட்ட கர்ணா… அத எப்படி சொல்றதுனு தெரியல.. முன்னவாவது வீட்டுக்குள்ள.. அளவாதான் சிரிப்பா.. சத்தமா பேச மாட்டா.. ஆனா இப்ப.. இந்த ரெண்டு நாளா.. எதுக்கெடுத்தாலும் விழுந்து விழுந்து சிரிக்கறா.. சத்தமா பேசறா.. ஏதாவது பாட்ட முனுமுனுக்கறா…? என்னை நோகடிக்க பிளான் போட்ட மாதிரி பண்றா..!!! ஆனா.. எனக்குத்தான் அவளை பாக்கவே கஷ்டமா இருக்கு.. வீடே எனக்கு நரகமா மாறிப் போச்சு… !!!” என்றான்.
இரண்டு பியர் வந்தது. இரண்டு பேரும் ஒரே நேரத்தில் ஆளுக்கு ஒன்றாக எடுத்து குடித்தார்கள் . கதகதவென கலங்கிய கண்களை துடைத்து மூக்கை உறிஞ்சிக் கொண்டான் நவநீதன்.!!!
” விடுங்க பாஸ். நம்ம கமல் பாடின மாதிரி சல்வார் போனா தாவணி உள்ளதடானு வேற எதையாவது பிக்கப் பண்ணிக்கங்க.. ”
” ம்ம். . என்னால அவ்வளவு சுலபமா.. இவள மறக்க முடியாது கர்ணா.. இந்த ரெண்டு நாள்ள எனக்கு வீடு சுத்தமாவே வெறுத்துருச்சு.. ”
” அதுக்காக.. இப்படி டெய்லி பார்ல வந்து உக்காந்துக்க போறிங்களா.. ?”
” இல்ல கர்ணா.. நான் மறுபடி ஊருக்கே போய்டலாம்னு இருக்கேன்..!!” என்று நவநீதன் தீவிரமாக முகத்தை வைத்துக் கொண்டு சொன்னான்.
” பாஸ்ஸ்…!!!” என சத்தமாக அலறினான் கர்ணா. ”என்ன பாஸ்… ஏன் பாஸ்.. ???”
” இல்ல கர்ணா.. இங்கருந்தா.. அவள நான் டெய்லி பாக்க வேண்டி இருக்கும்.. அப்பல்லாம் எனக்கு மனசு நோகும்.. வலிக்கும்.. அவ சந்தோசமா இருக்கறத பாத்தா எனக்கு பொறாமை வரும்.. அது எங்க ரெண்டு பேருக்குமே நல்லதில்ல கர்ணா.. அதான்…”
” பாஸ்… அதுக்காக….??? வேணா கொஞ்ச நாள் ஊர்ல போய் இருந்துட்டு… அப்பறம் உங்க மனசு சரியானப்பறம் வாங்களேன்…???”
” இல்ல கர்ணா.. ஒடைஞ்ச கண்ணாடிய ஒட்ட வச்சா அது நல்லாருக்காது.. என்ன பண்ணாலும் என்னால இனி அவகூட பழைய மாதிரி பழக முடியாது.. அதுக்கு நான் விலகிப் போறதுதான்.. ஒரே வழி..!!!” நவநீதன் பொருமையாக சொல்ல… இப்போது தனது பியரை எடுத்து கடகடவென தொண்டைக்குள் சரித்தான் கர்ணா…!!!
இரவு எட்டு மணி !!! ஜன்னல் ஓரமாக உட்கார்ந்து.. இருட்டை வெறித்துக் கொண்டிருந்தான் நவநீதன்.!!! வெளியில் இருந்து வந்த கிருத்திகா அவன் பக்கத்தில் வந்து நின்று.. மெதுவாக அவன் தோளில் கை வைத்தாள். சட்டென நிமிர்ந்து அவளைப் பார்த்தான் !!!
” பெரியம்மா வந்துருக்கு ” என அவன் கண்களைப் பார்த்துச் சொன்னாள்.
அவன் மேல் பதிந்த அவளின் பார்வைக்கு என்ன பொருள் என அவனுக்கு விளங்கவில்லை. பரிதாபமாகவும் தோன்றியது.. கருணையாகவும் தோன்றியது.
அவன் உட்கார்ந்த இடத்தில் இருந்தே மெதுவாக எட்டிப் பார்த்தான். அவனுடைய பெரிய அத்தை. அவளும் இதே ஊரில்தான் இருக்கிறாள். ஆனால் வேறு இடம்.
” வாங்கத்தே ” மெதுவாக எழுந்தான்.
அத்தை உள்ளே வந்தாள்.
”என்னடா.. ஊருக்கு போறியா ?”
” ஆமாத்தே ” தர்மசங்கடத்துடன் பதில் சொன்னான்.
”ம்ம். . ஏன்டா.. அந்த கம்பெனில வேலை இல்லேன்னா என்ன..? வேற கம்பெனியா இல்ல.. அங்க வா.. நிறைய கம்பெனி இருக்கு.. நான் சேத்து விடறேன். பெரிய பாப்பாவோட வீட்டுக்காரர் மூணு கம்பெனில காண்ட்ராக்ட் போட்றுக்காரு.. உனக்கு வேலை இல்லேங்காம இருந்திட்டிருக்கும்.”
” இருக்கட்டும்த்தே.. நான் ஊருக்கு போய்ட்டு வந்து.. அப்பறம் வரேன்..”
” ஏன்டா ஒரு மாதிரி பேசற.. ஏதாவது சங்கட்டமா ?”
”ச்ச.. அதெல்லாம் இல்லத்தே..”
” இவ ஏதாவது சொன்னாளா.. ஏன்டி எங்கண்ணம்பையன எவன்டி பேசினது.. ? சொல்லுடா ராஜா.. ஆத்தாளையும் மகளையும் இன்னிக்கு உண்டு இல்லேன்னு பண்ணிர்றேன்.. ஏய் கிருக்கி.. நீ ஏதாவது சொன்னியாடி ?” என்று அத்தை கிருத்திகாவைப் பார்த்து சிரித்துக் கொண்டே கேட்டாள்.
Admiring story