ஒரு நாள் கூத்து 3 148

சொன்னவர், நான் தயாராக எடுத்து வைத்திருந்த பேகை தூக்கி, அவருடைய பின்பக்கமாக மாட்டிக் கொண்டார். சேர் இழுத்துப் போட்டு ஷூ அணிந்து கொண்டார். நான் அசையாமல் அப்படியே அழுதுகொண்டே கிடந்தேன். ஷூ அணிந்ததும், லேப்டாப் பேகையும் எடுத்து தோளில் மாட்டிக் கொண்டார். கதவை நெருங்கியவர், அப்படியே திரும்பி என்னை பார்த்து சொன்னார்.

“நீ இப்டிலாம் பேசுவேன்னு சத்தியமா நான் நெனச்சே பாக்கலை பவி..!! இன்னும் மூணு நாள் தனியாத்தான இருக்கப் போற..? நான் போனப்புறம் நிதானமா யோசி.. நீ பேசுனதுலாம் கரெக்டான்னு யோசி..!!”

சொல்லிவிட்டு, அவர் கதவை அறைந்து சாத்தி வெளியேறினார். மூன்று நாட்கள் நிதானமாக யோசி என்று அவர் சொன்னதை, அடுத்த நொடியே நான் யோசிக்க ஆரம்பித்தேன். சற்று பொறுமையாக யோசிக்க ஆரம்பித்ததுமே, நான் பேசிய பேச்சில் இருந்த தவறு எனக்கு புரிந்தது. அதிலும் இறுதியாக என் வாயில் இருந்து வந்து விழுந்த அந்த வார்த்தைகள்.. நான்தான் அவ்வாறெல்லாம் பேசினேனா என நம்ப முடியாத மாதிரி இருந்தது. ஏன் அப்படி எல்லாம் பேசினேன் என என் மீதே எனக்கு கோபம் வந்தது.

ஆனால், அதே நேரம் அவர் மீது எந்த தவறும் இல்லை எனவும், என் மனம் ஒத்துக் கொள்ள மறுத்தது. என்னைப் பற்றி நன்றாக புரிந்து வைத்திருப்பவரானால், அந்த மாதிரி பொய் சொல்லியிருக்க மாட்டார் என்று நினைத்தேன். அவர் சொன்ன பொய்யால் என் மனம் எப்படி துடித்துப் போகும் என்று அவர் உணரவில்லையே என வருந்தினேன். இந்த மாதிரி எண்ணங்கள் மனதுக்குள் மோதிக்கொண்டிருக்க, என்னையும் அறியாமலே, விழுந்து கிடந்த சோபாவிலேயே உறங்கிப் போனேன்.

காலையில் எழுந்து குளித்து முடித்து வெளியே வந்தபோது, மனதும் கொஞ்சம் தெளிவாக இருந்தது. நேற்று இரவு என் கணவர் மீது இருந்த கோபம் வெகுவாக குறைந்திருந்தது. அவர் பேசியதில் இருந்த நியாயத்தையே என் மனம் அசை போட்டுக் கொண்டிருந்தது.

இரவு சாப்பிடாமல் படுத்தது வயிற்றை பிசைவது மாதிரி இருந்தது. காபி போட்டு எடுத்துக் கொண்டு ஹாலுக்கு வந்தேன். ஜன்னலுக்கு அருகில் சென்று, ஸ்க்ரீனை விலக்கியவாறே, கப்பை வாயில் வைத்து உறிஞ்சினேன். கீழே கேட்டுக்கு அருகில் அந்த கால்டாக்சி நின்றிருந்தது. டாக்சிக்கு அருகில் நின்றிருந்த அந்த ஆள், பர்சை திறந்து பணம் எடுத்துக் கொண்டிருந்தார். இதுவரை அவரை நான் பார்த்ததில்லை. உயரமாய்.. உப்பலான தேகத்துடன்.. மீசை, தாடி மழிக்கப்பட்ட முகத்துடன்..!! முன்தலையில்.. விழமாட்டேன் என விடா முயற்சியுடன் சில முடிகள் மட்டும் போராட்டம் நடத்திக் கொண்டிருக்க, மிச்ச முடிகள் வீழ்ந்திருந்தன..!!

பணம் எடுத்துக் கொடுத்தவர், டாக்சிக்குள் இருந்த பெட்டியை வெளியே எடுத்து வைத்தார். நான் நின்றிருந்த ஜன்னல் பக்கம் எதேச்சையாய் அவருடைய பார்வை திரும்ப, நான் பட்டென ஸ்க்ரீன் இழுத்து போர்த்தினேன். நடந்து வந்து சோபாவில் அமர்ந்து கொண்டேன். டிவி ஆன் செய்துவிட்டு, மிச்ச காபியை உறிஞ்ச ஆரம்பித்தேன். ‘யாராய் இருக்கும்..?’ என்று கேள்வி கேட்ட மனதை, ‘யாரோ..!!!’ என வடிவேலு மாதிரி சொல்லி வாயடைத்தேன்..!!

சாலமன் பாப்பையாவின் அமுத மொழிகளில் மனம் லயிக்க ஆரம்பிக்கவும், அந்த ஆளைப் பற்றி சுத்தமாய் மறந்து போனேன். ஆனால், அடுத்த அரை மணி நேரத்திலேயே அந்த ஆள், என் வீட்டு காலிங் பெல் அழுத்தி, ‘ஹாய் பவித்ரா..’ என்று கன்னத்தில் குழி விழ சிரிப்பார் என சத்தியமாய் நான் எதிர்பார்க்கவில்லை. குழம்பிப் போனேன்.

“நீ..நீங்க..?”

“ஐ’ம் பாலமுரளி..!! ரேணுகாவோட ஹஸ்பண்ட்..!!”

அவர் சொல்லிக்கொண்டு இருக்கும்போதே, அவருக்கு பின்னால் ஒரு பெரிய பையை, தூக்க முடியாமல் தூக்கிக்கொண்டு, ரேணுகா வருவது தெரிந்தது. அடுத்த வாரம் கணவர் வருவதாக அன்றொருநாள் சொன்னாளே..? வந்துவிட்டாரா..? எப்படி மறந்தேன்..? நான் ஒருகணம் எழுந்த திகைப்பை உடனடியாய் மறைத்துக் கொண்டு, முகத்தில் புன்னகையை வரவழைத்தவாறு அவரிடம் சொன்னேன்.

“வா..வாங்க.. உள்ள வாங்க.. எப்போ வந்தீங்க..?”

“ஜஸ்ட் இப்போதான்.. காலைலதான் இண்டியால லேண்ட் ஆனேன்..”

அவர் சொல்லிக்கொண்டே உள்ளே வர, அவரை தொடர்ந்து ரேணுகாவும் வீட்டுக்குள் நுழைந்தாள். பாலமுரளி வீட்டை ஒருமுறை பார்வையால் அளந்துவிட்டு, சோபாவில் அமர்ந்து கொள்ள, ரேணுகா கொண்டு வந்த பையை அந்த சோபாவுக்கு அருகில் வைத்தவாறு சொன்னாள்.

“இதை எடுத்து உள்ள வச்சிடு பவி..”

“என்னக்கா அது..??” நான் குழப்பமாக கேட்க,

“இவர் இண்டியா திரும்புறதா சொன்னதும்.. அசோக் கால் பண்ணி இதெல்லாம் வாங்கிட்டு வர சொல்லிருப்பான் போல..!! யப்பா.. செம வெயிட்டு..!!” அவள் சொல்லிவிட்டு தன் கணவருக்கு அருகில் சோபாவில் அமர்ந்து கொண்டாள். உற்சாகமான குரலில் என்னிடம் சொன்னாள்.

அசோக் இப்போத்தான் கால் பண்ணினான்.. புனே போய் சேர்ந்துட்டானாம்.. ப்ரசண்டேஷனுக்கு ப்ரிப்பேர் பண்ணிட்டு இருக்கேன்னு சொன்னான்.. உனக்கு கால் பண்ணிருப்பானே..?”

ம்ம்.. ஆ..ஆமாம்.. பண்ணினாரு..” நான் பொய் சொன்னேன். பிறகு பேச்சை மாற்றும் எண்ணத்தில்,

“அப்புறம்.. என்ன சாப்பிடுறீங்க..? காபி.. டீ..” நான் கேட்டதும் உடனே பாலமுரளி மறுத்தார்.

“ஐயோ.. இப்போதான் வீட்ல சாப்பிட்டு வந்தோம் பவி..”

“இல்ல.. முதமுதல்ல வீட்டுக்கு வந்திருக்கீங்க..”

“நோ ஃபார்மாலிட்டீஸ் ப்ளீஸ்..!! எங்களுக்கு ஒன்னும் வேணாம்.. உக்காரு..!!”

நான் சிலவினாடிகள் தயங்கிவிட்டு, அப்புறம் அவர்களுக்கு எதிர்ப்புறம் கிடந்த சோபாவில் அமர்ந்து கொண்டேன். பாலமுரளி முகத்தில் புன்னகையுடன் என்னையே கொஞ்ச நேரம் பார்த்துக் கொண்டிருந்தார். அப்புறம் மெல்லிய குரலில் ஆரம்பித்தார்.

“ரேணு உன்னைப் பத்தி நெறைய சொல்லிருக்கா பவி..”

1 Comment

Comments are closed.