ஒரு நாள் கூத்து 2

“என்னங்க.. கெளம்பிட்டீங்களா.. எப்போ வருவீங்க..?”

ஆனால் மறுமுனையில் இருந்து அவருடைய குரலுக்கு பதிலாக அந்த ரேணுகாவின் குரல் தயங்கி தயங்கி ஒலிக்க, நான் பட்டென முகம் சுருங்கினேன்.

“ப..பவி.. நான் ரே..ரேணு..”

“ஓ… நீ..நீங்களா..? அ..அவரு..” நான் தடுமாற்றமாய் கேட்டேன்.

“அ..அசோக் கார் ஓட்டிட்டு இருக்கான்.. அதான் என்னைப் பேச சொன்னான்..”

“ம்ம்ம்.. சொல்லுங்க..”

“ஆபீஸ்ல திடீர்னு ஒரு பார்ட்டி அரேஞ்ச் பண்ணிட்டாங்க பவி.. ரெண்டு பேரும் அங்கதான் போயிட்டு இருக்கோம்.. நைட்டு வர்றதுக்கு கொஞ்சம் லேட் ஆயிடும்.. அதான்.. உ..உன்கிட்ட சொல்லலாம்னு..”

“ஓ.. பா..பார்ட்டியா..? போ..போறீங்களா..? ஓகே.. போ..போயிட்டு வாங்க..!! வேற..?”

“வே..வேற ஒன்னும் இல்ல..”

அவள் சொல்லி முடிக்கும் முன்பே நான் பட்டென காலை கட் செய்தேன். செல்போனை தூக்கி வீசினேன். நெஞ்சில் அடைத்த துக்கத்தை அடக்க முடியாதவளாய், கண்ணில் நீர் வார்க்க ஆரம்பித்தேன். அவருடன் வெளியே செல்கிற என் ஆசை கலைந்தது ஒருபுறம் வதைக்க, அவளும் அவரும் சேர்ந்து பார்ட்டி சென்று கூத்தடிக்கப் போகிறார்கள் என்ற எண்ணம் இன்னொரு புறம் என்னை வாட்டியது. கண்ணீர் மட்டும் வடிக்கவில்லை என்றால்.. உயிரற்ற ஜடம் என்று என்னை முடிவு கட்டிவிடலாம். அந்த மாதிரிதான் அவர்கள் வரும்வரை அசையாமல் சோபாவில் அமர்ந்திருந்தேன்.

கீழே காரின் ஹார்ன் கேட்டதும், தலை திருப்பி மணி பார்த்தேன். பதினோரு மணிக்கு மேலாகி இருந்தது. எழுந்து ஜன்னல் திரையை விலக்கிப் பார்த்தபோது, அவர்கள்தான் என்று புரிந்தது. இருவரும் முகமெல்லாம் சிரிப்பாக காரில் இருந்து இறங்கினார்கள். அசோக் நன்றாக குடித்திருப்பார் என்று தோன்றியது. தள்ளாடினார்..!! நானே சென்று அவரை மேலே அழைத்து வரலாம் என்று நினைத்தேன். படியிறங்கி கீழே சென்றேன்.

நான் அவரை நெருங்கவும்.. அவர் கோணலான வாயுடன் என்னை பார்த்து புன்னகைத்தவாறு, கால் இடறி தடுமாறவும் சரியாக இருந்தது..!! நான் ‘பாத்துங்க..’ என்றவாறு அவருடைய இடுப்புக்கு கை கொடுத்து தாங்கிப் பிடிக்க, அதே நேரம் அந்த ரேணுகாவும் ‘டேய்..’ என்றவாறு அவருடைய தோளைப் பற்றினாள். அவ்வளவுதான்..!! எங்கிருந்துதான் எனக்கு அப்படி ஒரு ஆத்திரம் வந்தது என்று தெரியவில்லை. பட்டென அவளுடைய கையை அவருடைய தோளில் இருந்து தட்டிவிட்டேன். உக்கிரமாக அவளை பார்த்து முறைத்தவாறு, வெறுப்பில் நனைந்த வார்த்தைகளை உதிர்த்தேன்.

“எல்லாம் எனக்கு பாத்துக்க தெரியும்..!!!!”

அவள் வாயடைத்துப் போனாள். கடுமையான காயம்பட்டவள் மாதிரி, பரிதாபமாக என் முகத்தை பார்த்தாள். ‘ஸாரி பவி..’ என்கிறாள் என அவளுடைய உதட்டசைவில் இருந்தே உணர்ந்து கொண்டேன். வார்த்தை வெளியே வரவில்லை. மேலும் உக்கிரமாய் ஒரு முறைப்பை அவள் மீது வீசிவிட்டு, என் கணவரின் ஒரு கையை எடுத்து என் தோளில் போட்டுக் கொண்டேன். ஒரு கையால் அவருடைய இடுப்பை பற்றி, அவர் படியேறி மேலே செல்ல உதவினேன்.

“ஸா..ஸாரி பவி.. நி..நியூ இயர்னு… கொ..கொஞ்சம் ஓவரா.. இனிமே இப்டிலாம்.. இன்னும் ரெ..ரெண்டு மாசம் நான் குடிக்கவே மாட்டேன்… சரியா..?”

அவர் வாய் குழற சொன்னபடியே, ஹாலில் கிடந்த சோபாவில் தொப்பென அமர்ந்தார். நான் கதவை அடைக்க மீண்டும் வாசலுக்கு வந்தேன். வெளியே அடிபட்ட பறவை மாதிரி பரிதாபமாக பார்த்துக்கொண்டிருந்த ரேணுகாவை, வெறுப்புடன் பார்த்தவாறே கதவை ஓங்கி அறைந்து சாத்தினேன். திரும்ப நடந்து வந்து, என் கணவருக்கு எதிரே கிடந்த சோபாவில் அமர்ந்து கொண்டேன். போதையில் அவருடைய தலையும், கண்களும் நிலை கொள்ளாமல் சுழன்றதை சில வினாடிகள் அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தேன். அப்புறம் இறுக்கமான குரலில் அவரிடம் சொன்னேன்.

“கூடிய சீக்கிரம் வேற வீடு மாறிடலாங்க..”

அவர் அதை எதிர்பார்த்திருக்க மாட்டார் போலும். படாரென ஒரு அதிர்ச்சி ரேகை அவருடைய முகத்தில் ஓடுவதை என்னால் உணர முடிந்தது. ஏற்றிய போதையும் அந்த கேள்வியால் அவருக்கு வெகுவாக குறைந்திருக்க வேண்டும். சற்றே தெளிவான குரலில் கேட்டார்.

“எ..என்னடி சொல்ற..?”

“புரியலையா..? இந்த வீட்டை காலி பண்ணிட்டு வேற வீடு போயிறலாம்னு சொல்றேன்..!!”

“ஏன்..?”

“ஏன்னா.? எனக்கு இந்த வீடு புடிக்கலை..!!”

“அதான்.. ஏன் புடிக்கலைன்னு கேக்குறேன்..? சின்னதா இருந்தாலும் அழகான வீடு.. என்ன தேவைன்னாலும் எல்லாமே பக்கத்துலயே கெடைக்குது.. தண்ணி பிரச்னை இல்லை.. கம்மி ரெண்ட்.. ஆபீசுக்கும் ரொம்ப க்ளோஸ்.. எல்லாத்துக்கு மேல என்ன ஹெல்ப் வேணுன்னாலும் கேக்குறதுக்கு பக்கத்துலயே ரேணுகா..” அவர் சொல்லிக்கொண்டே போக,

“அவ பக்கத்துல இருக்குறதாலதான் புடிக்கலை..!!” நான் பட்டென இடைமறித்தேன்.

“எ..என்ன சொல்ற நீ..?” அவர் இன்னும் என் எண்ணம் புரியாமல் கேட்டார்.

“புரியலையா இன்னும்..? எனக்கு அந்த ரேணுகாவை புடிக்கலை.. அதான் வேற வீடு மாத்தலாம்னு சொல்றேன்.. முடிஞ்சா வேற வேலை கூட மாத்திடுங்க..!!” நான் படபடவென சொல்ல, அவர் சில வினாடிகள் என் முகத்தையே கூர்மையாக பார்த்துக் கொண்டிருந்தார். அப்புறம்,

“ரேணுகாவை ஏன் உனக்கு புடிக்கலை..?” என்றார்.

ஏன்லாம் காரணம் சொல்லிட்டு இருக்க முடியாது.. புடிக்கலை..!! அவ்ளோதான்..!! வீட்டைத்தான உங்களை மாத்த சொல்றேன்.. மாத்துங்களேன்..!!”

“இந்த மாதிரி வசதியான இன்னொரு வீடு கெடைக்கிறது கஷ்டம் பவி.. இந்த வீட்டை புடிக்கவே நான் எவ்ளோ கஷ்டப் பட்டேன் தெரியுமா.?”