“பழைய ஆல்பம்னா..?”
“அவன் ஸ்கூல்.. காலேஜ் படிக்கிறப்போ எடுத்த போட்டோஸ்..”
“வச்சிருக்கியா நீ..? எங்க இருக்கு..?” எனக்கு பட்டென ஒரு ஆர்வம் வந்து தொற்றிக் கொண்டது.
“இருங்க எடுத்துட்டு வர்றேன்.. அண்ணன் அதுலலாம் இன்னும் ஸ்மார்ட்டா இருப்பான்..”
ஒரு நான்கைந்து ஆல்பங்கள்..!! அவருடைய பள்ளிக்காலம் முதல் எடுத்த படங்கள். வொயிட் ஷர்ட், ப்ளூ ட்ராயர் என கைகள் ரெண்டும் தொடைகளுடன் ஒட்டி வைத்துக் கொண்டு, போட்டோவிற்கு போஸ் கொடுத்த, என் பத்து வயது கணவரை பார்த்தபோது உதட்டில் புன்னகை அரும்புவதை தவிர்க்க முடியவில்லை. கரிச்சான் குருவி கிராப்புடன்.. கட்டுரைப் போட்டி சர்ட்டிபிகேட்டுடன்.. ஹை ஜம்ப்பில் வென்றதுக்கான கோப்பையுடன்.. கவிதை பாடும் பாரதியாக..!! எந்த மனைவியுமே பார்க்க விரும்பும் படங்கள்..!!
பள்ளிப்பருவ படங்கள் என்னை பரவசம் கொள்ளச் செய்தது எனில், அவருடைய கல்லூரி கால படங்கள், காதில் புகை வர செய்தன. இப்போது இருப்பதை விட இளமையாக, சற்றே மெல்லிய மீசையுடன், அந்த வயதிற்கே உரிய துடிப்புடன், அழகாய்த்தான் இருந்தார். ஆனால்.. அவர் போட்டோவில் எங்கு நின்றிருந்தாலும், அவரை சுற்றி இரண்டு, மூன்று பெண்டுகள் நின்றிருந்தன. அவருடைய கையை பிடித்துக் கொண்டு.. அவர் தோள் மீது கை போட்டுக் கொண்டு.. அவருக்கு பின்னால் நின்று கொம்பு காட்டிக் கொண்டு.. வெக்கங்கெட்ட தனமாய் இளித்துக் கொண்டு..!!
நான் அந்தப் படத்தை முறைப்பதை பார்த்ததும், வீணா பட்டென்று அடுத்த பக்கத்தை புரட்டினாள். நான் மீண்டும் முந்தய பக்கத்துக்கு தாவி, மீண்டும் அந்த போட்டோவை முறைத்தேன். ஒரு மாதிரி உடைந்து போன குரலில் அவளிடம் கேட்டேன்.
“இ..இது யாரு வீணா..?”
“இ..இது.. எங்க சுஜி அண்ணி..!!”
“யார் அது..? நான் பாத்ததே இல்ல..?”
“அத்தை பொண்ணு.. அப்பாவோட தங்கச்சி பொண்ணு.. கான்பூர்ல M.Tech படிக்கிறாங்க..!!”
“மேரேஜுக்கு இவங்க வரலையா..?”
“வரலை.. அவங்களுக்கு எக்ஸாம் டைம்.. அதான்..”
“ம்ம்ம்.. நல்லா அழகா இருக்குறாங்க..” நான் உள்ளப் புகைச்சலை அடக்கிக் கொண்டு சொன்னேன்.
“ஆக்சுவலா.. சுஜி அண்ணியைத்தான் அண்ணனுக்கு முடிக்கிறதா பேச்சு இருந்தது..”
“ம்ம்.. அப்புறம் என்னாச்சு..?”
“ஜாதகம் பொருந்தலை.. அம்மா கூட.. ‘அதெல்லாம் கண்டுக்க வேணாம்.. முடிச்சுடலாம்னு..’ சொன்னாங்க..!! மாமாதான் பிடிவாதமா ஒத்துக்கலை..!! கல்யாணத்துக்கு கூட மாமா வந்திருந்தாரு.. இருங்க காட்டுறேன்..”
“பரவால்ல வீணா.. விடு..”
அவள் சகஜமானாள். அடுத்த பக்கங்களை புரட்டி, அதில் இருப்பவர்களைப் பற்றி சொல்ல ஆரம்பித்தாள். நான்தான் எதிலும் மனம் ஒன்ற முடியாமல் அல்லாடினேன். மனம் அந்த பல்லிளிப்பு போட்டோவிலேயே இருந்தது. ஆல்பம் எல்லாம் பார்த்து முடிந்த பிறகு, வேறு எதற்கோ வீணா அந்தப் பக்கம் திரும்பியபோது, நான் அந்த போட்டோவை ஆல்பத்தில் இருந்து உருவினேன். என்னுடைய புடவைக்குள் மறைத்து வைத்துக் கொண்டேன்.
அப்புறம் என் அறைக்கு சென்றதும், மீண்டும் அந்த போட்டோவை எடுத்து இன்னொரு முறை பார்த்தேன். மனதில் குபுகுபுவென எரிச்சல் பரவுவதை கட்டுப் படுத்த முடியவில்லை. போட்டோவின் மையத்தில் கை வைத்து, சரக்கென கிழிக்க, இப்போது அவர் என் வலது கையில்.. அவள் என் இடது கையில்..!! இடது கையில் இருந்ததை கசக்கி எறிந்து விட்டு.. வலது கையில் இருந்ததை மார்போடு வைத்து அனைத்துக் கொண்டேன்..!! இப்போது சற்று நிம்மதியாக இருந்தது..!!
ஆனால், அந்த நிம்மதியை குலைக்க அடுத்த
நாளே அந்த சுஜி வந்து குதிப்பாள் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை. வீட்டுக்குள் நுழையும்போதே, ‘ஹாய்ய்ய்ய்…!!!!!!!!!!!’ என்று கத்திக்கொண்டு புயல் மாதிரிதான் நுழைந்தாள். அத்தையின் கூந்தலைப் பிடித்து இழுத்தாள். மாமாவின் தொப்பையை கிண்டலடித்தாள். வீணாவை கட்டிப்பிடித்து கன்னத்தில் முத்தமிட்டாள். திட்டிய பாட்டியிடம் உதடு நீட்டி பழிப்பு காட்டி, அவளை மேலும் எரிச்சல் மூட்டினாள். என்னிடம்..
“ஹாய்.. எப்டி இருக்கீங்க..?” என்று அக்கறையாக விசாரித்தாள்.
“எக்ஸாம் இருந்தது.. அதான் மேரேஜுக்கு வர முடியலை..” என்று காரணம் சொன்னாள்.
“ஏன் அதோட நிறுத்திட்டீங்க..? மேல படிக்கலையா..?” என்று எரிச்சலை கிளப்பினாள்.
“நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க..” என்று அசடு வழிந்தாள்.
அப்புறம் வீணாவின் ரூமுக்குள் சென்று அடைந்து கொண்டாள். நான் என் ரூமுக்கு சென்று மெத்தையில் புரண்டேன். அவள் அங்கு கனைக்கும் சத்தம் இங்கே கேட்டது. வீணாவும், அந்த சுஜியும் உரையாடுவதும் கேட்டது. வீணாவின் சத்தத்தை விட சுஜியின் சத்தம் பெரிதாக இருந்தது. அப்படி என்ன பேசுகிறாள் என்று எனக்கு கேட்க வேண்டும் போல் இருந்து. எழுந்து என் ரூமை விட்டு வெளிப்பட்டு, வீணாவின் ரூமை நோக்கி மெல்ல நடந்தேன். முதலில் வீணாவின் குரல்தான் காதில் விழுந்தது.