எனக்கு இதுக்குலாம் நேரம் இல்ல தம்பி 2 174

தன் காதலுக்கு உதவி செய்த போஸ்ட்மேனின் பெயரையே தன் தலைச்சன் பிள்ளைக்கு வைத்துவிட்டாள் பாரதி. வீட்டில் இருக்கும் அனைவரிடமும் எகத்தாளமாகவும், எரிச்சலாகவும் பேசுகிற அசோக், ஒரு வெகுளித்தனமான குழந்தையாக மாறிப்போய் விடுவான் என்றால், அது அவனுடைய அம்மா பாரதியிடம்தான்..!! அம்மா மீது அவனுக்கு அளவிலா அன்பு.. அவளுக்கும் மகன் மீது..!! சற்றுமுன் அசோக்கின் நண்பர்கள் பயந்த அளவுக்கோ, மணிபாரதி கேலி செய்த அளவுக்கோ.. பாரதி ஒன்றும் சமையல் கொடுமைக்காரி இல்லை.. நன்றாகவே சமைப்பாள்..!! ஆனால்.. அவள் செய்யும் தவறு.. புதுப்புது உணவுப்பண்டங்களை உருவாக்கிப் பார்க்க வேண்டும் என்று நினைப்பதுதான்..!! சமையல்கலையில் அவ்வளவு ஆர்வம்..!! ஆனால்.. அவளுடைய ஆர்வத்துக்கு தங்களை ‘ஆராய்ச்சி எலி’ மாதிரி உபயோகிக்கிறாளே என்றுதான்.. அனைவரும் பாரதியைப் பார்த்து தெறித்து ஓடுவதும், சன்னமான குரலில் கேலி செய்வதும்..!! ஆனால்.. அசோக் என்றுமே அம்மாவை குறை சொன்னது இல்லை.. அம்மா தயாரிக்கிற புதுவகை உணவு எவ்வளவு மோசமானதாக இருந்தாலும், முகம் சுளிக்காமல் முழுவதும் சாப்பிட்டு முடிப்பான்..!!

ம்ம்ம்… அசோக் வீட்டில் இருக்கும் எல்லோரையும் பற்றி பார்த்தாயிற்று அல்லவா.. யாராவது விட்டுப்போய் விட்டார்களா..?? ம்ம்ம்ம்… ஆமாம்… இவர்கள் இல்லாமல் அந்த வீட்டில் இரண்டு ஐந்தறிவு ஜீவன்களும் இருக்கின்றன.. நாராயணசாமி-கோமளவல்லி ஆளுக்கொன்றாய் வளர்க்கும் நாய்க்குட்டிகள்.. அதில் ஒன்று ஆண் நாய்.. ஒன்று பெண் நாய்.. அந்த இரு நாய்களும் கூட.. அவ்வப்போது ஒருவர் முகத்தை அடுத்தவர் முகர்ந்து முகர்ந்து பார்த்து.. ரொமான்ஸ் செய்து கொண்டிருக்குங்கள்..!!

இந்தமாதிரி.. கலையும், காதலும் அசோக்கின் வீட்டில் எங்கும் நிறைந்திருந்தது..!! கலை என்பது அசோக்கிற்கு ஓரளவு கைவரப் பெற்றிருந்தாலும், காதல் என்பது தன் கருணைப்பார்வையை அவன் மீது வீசவே இல்லை..!! அந்த ஏக்கத்தையும் நெஞ்சில் வைத்துக்கொண்டு, அடுத்தவர் காதலில் குறைகண்டுபிடித்து மனதை தேற்றியும் கொள்கிற அசோக், ஒரு பரிதாபகரமான ஜீவன்தான்..!!

மூளைக்குள் இன்னும் சற்று போதை மிச்சமிருக்கும் நிலையுடன், அம்மா தட்டில் கொண்டு வந்துகொடுத்த அல்வாவை ஸ்பூனால் விண்டு விண்டு அசோக் விழுங்கிக் கொண்டிருந்தான். அவனுக்கருகே அமர்ந்திருந்த பாரதி, தன் கையால் செய்த இனிப்பை மகன் ஆசையாக உண்ணும் அழகை, கண்களாலேயே அள்ளி பருகிக் கொண்டிருந்தாள்.

“இதுக்கு பேர் என்ன மம்மி.. தப்ஸி அல்வாவா..??” அசோக் கேட்க,

“தப்ஸி இல்லடா தடிமாடு.. ஹப்ஷி..!!!!” பாரதிக்கு முந்திக்கொண்டு சங்கீதா அவனுக்கு பதில் சொன்னாள்.

“ஹப்ஷி அல்வாவா..??” அசோக் இப்போது முகத்தை ஒருமாதிரி சுளித்தவாறு கேட்டான்.

“ஆமாண்டா கண்ணா.. பாகிஸ்தான்ல ரொம்ப பாப்புலர்..!!” பாரதி பெருமையாக சொன்னாள்.

“ஓஹோ..!!”

இப்போது மணிபாரதி, அவ்வளவு நேரமாக புரட்டிக்கொண்டிருந்த ஒரு புத்தகத்தை மூடி வைத்துவிட்டு, கண்ணாடியை கழற்றி கையில் எடுத்தவாறே, திடீர் ஞாபகம் வந்தவராய் அசோக்கிடம் கேட்டார்.

“ஏண்டா.. இன்னைக்கு ஏதோ ஒரு ப்ரொட்யூசரை பாக்கப் போறேன்னு சொன்ன.. என்னாச்சு..??”

“ஹாஹா.. அது தெரியாதா உங்களுக்கு.. இவன் செம சொதப்பு சொதப்பிட்டான் டாடி..!!” சங்கீதா மீண்டும் தான் ஒரு முந்திரிக்கொட்டை என்பதை நிரூபித்தாள்.

“ப்ச்.. சொதப்பலாம் ஒன்னும் இல்ல..!!” அசோக் தங்கையை ஏறிட்டு முறைப்பாக சொன்னான்.

“பொய் சொல்லாத.. அல்ரெடி எனக்கு ந்யூஸ் வந்துடுச்சு..!!”

“இங்க பாரு.. நடந்தது என்னன்னு தெரியாம பேசாத..!!” அசோக் சங்கீதாவிடம் எகிற,

“ஏய்.. அவளை விடுடா…!! நான் கேட்டதுக்கு பதில் சொல்லு..!!” மணிபாரதி இடையில் புகுந்து கேட்டார்.

“என்ன சொல்ல..??” அசோக் எரிச்சலாக திரும்ப கேட்டான்.

“ஏன் சொதப்புனேன்னு சொல்லு..!!” ஒரு குழப்பத்தில் அவர் அந்த மாதிரி கேட்கவும், அசோக் உச்சபட்ச டென்ஷன் ஆனான்.

“ஐயோ.. அதான் நான் ஒன்னும் சொதப்பலைன்னு சொல்றேன்ல..??” என்று கத்தினான்.

“சரிடா சரிடா..!! என்ன ஆச்சுன்னு சொல்லு..!!”

“அந்த ஆளு லவ் ஸ்டோரிதான் ப்ரொட்யூஸ் பண்ணுவாராம்.. நான் சொன்ன த்ரில்லர் ஸ்டோரி அவருக்கு பிடிக்கல..!! ஏதாவது லவ் ஸ்டோரி வச்சிருக்கீங்களான்னு கேட்டாரு.. நான் இல்லைன்னு சொல்லிட்டு கெளம்பி வந்துட்டேன்.. அவ்வளவுதான்..!!”

அசோக் சொன்னதும் சில வினாடிகள் நெற்றியை தேய்த்தவாறு யோசித்துக்கொண்டிருந்த மணிபாரதி, அப்புறம்

“ம்ம்..!! ஏண்டா அசோக்.. நீ ஏன் ஒன்னு பண்ணக் கூடாது..??” என்று மகனிடம் கேட்டார்.

“என்ன..??”

“நான்தான் எக்கச்சக்கமான லவ் ஸ்டோரி எழுதிருக்கேனே.. நீ ஏன் அந்த ஸ்டோரிலாம் சொல்லி சான்ஸ் தேடக்கூடாது.. நீ ஏன் அதுல ஏதாவது ஒன்னை படமா எடுக்க கூடாது..??” மணிபாரதி கேட்டுவிட்டு பெருமிதமாக சிரிக்க, அசோக் அவரையே கடுப்புடன் முறைத்தான்.

1 Comment

  1. நான் என்னுடைய தமிழ் செக்ஸ் சிறு கதைகளை வெளியிட விரும்புகிறேன். வழிகாட்டுதல்கள்.

Comments are closed.